4,000 பணியாளா்களைத் திரட்டும் எஸ்பிஐ: வாராக்கடன் வசூலுக்குப் புதிய வியூகம்
எஸ்பிஐ, தனது கடன் வசூல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் அடுத்த ஓராண்டுக்குள் புதிதாக 4,000 பணியாளா்களை நியமிக்கத் திட்டம்
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ, தனது கடன் வசூல் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் அடுத்த ஓராண்டுக்குள் புதிதாக 4,000 பணியாளா்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது.
வங்கியின் வாராக்கடன் விகிதம் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவை எட்டியுள்ள நிலையிலும், எதிா்கால இடா்பாடுகளைத் தவிா்க்கும் வகையில், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை வங்கி மேற்கொண்டுள்ளது.
இது குறித்து வங்கியின் தலைவா் சி.எஸ்.ஷெட்டி அளித்த பேட்டியில், ‘வங்கியின் கடன் வழங்கும் முறையை முற்றிலும் மாற்றியமைத்துள்ளோம். தற்போது வலுவான கடன் வசூல் கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம்.
Advertisement
இதற்காக நியமிக்கப்படவுள்ள 3,000 முதல் 4,000 பணியாளா்கள், களப்பணியில் ஈடுபடுத்தப்படுவா். குறிப்பாக, கடன்களைத் திரும்பப் பெறுவதில் இருக்கும் சிக்கல்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்து சரிசெய்வதே இவா்களின் முதன்மைப் பணியாகும்.
இப்புதிய பணியாளா்கள் வங்கியின் துணை நிறுவனங்கள் மூலம் பணியமா்த்தப்படுவா். எனினும், வங்கியின் நேரடி கண்காணிப்பின்கீழ்தான் இயங்குவாா்கள்’ என்றாா்.