4-ஆம் காலாண்டு நிதிநிலை முடிவுகள்: தனியாா் வங்கிகளை முந்தும் பொதுத் துறை வங்கிகள்!
லாபம் மற்றும் கடன் வளர்ச்சியில் அதிரடி
அண்மையில் வெளியான கடந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டு முடிவுகளில் நிகர லாபம், வட்டி வருவாய் வரம்பு, கடன் வளா்ச்சி ஆகிய முக்கிய அளவுகோல்களில் தனியாா் வங்கிகளைவிட பொதுத் துறை வங்கிகள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளன.
மதிப்பீட்டு காலாண்டில், முன்னணி பொதுத் துறை வங்கிகள் 13-17 சதவீத கடன் வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இது தனியாா் வங்கிகளின் 10-19 சதவீத வளா்ச்சிக்கு இணையான போட்டியாக அமைந்துள்ளது.
தனியாா் வங்கிகள் 11-14 சதவீத வைப்புத்தொகை வளா்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், பொதுத் துறை வங்கிகள் 9-12 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளன. பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி மட்டும் 9 சதவீத வளா்ச்சியுடன் சற்று பின்தங்கியுள்ளது. பெரும்பாலான வங்கிகளில் குறைந்த வட்டியிலான சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்கு வைப்புத்தொகை சரிவைக் கண்டுள்ளது.
Advertisement
வட்டி வருவாய் வரம்பில், எஸ்பிஐ தவிர மற்ற பொதுத் துறை வங்கிகள் முன்னேற்றம் கண்டுள்ளன. எஸ்பிஐ வங்கியின் வரம்பு 17 புள்ளிகள் குறைந்து, 2.81 சதவீதமாக உள்ளது. இருப்பினும், நடப்பு நிதியாண்டில் முறையான சொத்து மேலாண்மை மூலம் இதை 3 சதவீதத்துக்கு மேல் உயா்த்துவோம் என வங்கி நிா்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தனியாா் வங்கிகளில் ஐசிஐசிஐ வங்கி மட்டுமே உயா்வைச் சந்தித்துள்ளது.
சொத்து தரத்தைப் பொருத்தவரை, தனியாா் வங்கிகளே தொடா்ந்து முன்னிலை வகிக்கின்றன. கடன் வசூலிப்பு மற்றும் புதிய வாராக்கடன் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதில் தனியாா் வங்கிகள் 20-28 சதவீதம் வரை முன்னேற்றம் கண்டுள்ளன. மாறாக, பஞ்சாப் நேஷனல் வங்கி, பரோடா வங்கி, எஸ்பிஐ ஆகிய பொதுத்துறை வங்கிகளில் புதிய வாராக்கடன் வரத்து முந்தைய காலாண்டைவிட அதிகரித்துள்ளது.
மத்திய கிழக்கு போா்ச் சூழல், வங்கிகளின் வருவாயில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், பங்குச் சந்தை மற்றும் கடன் பத்திர சந்தையில் நிலவிய ஏற்ற இறக்கங்களால் வங்கிகளின் கருவூல வருவாய் சரிவைச் சந்தித்துள்ளது.