ஆதவன் – பகுதி 2
1972-ல் ‘காகித மலர்கள்’ தீபம் மாத இதழில் வெளிவந்து கொண்டிருந்தபோது அதை விடாமல் படித்த வாசகர்களில் நானும் ஒருவன். அப்போது ஆதவனின் வயது 30. அத்தனை வயதில்
1972-ல் ‘காகித மலர்கள்’ தீபம் மாத இதழில் வெளிவந்து கொண்டிருந்தபோது அதை விடாமல் படித்த வாசகர்களில் நானும் ஒருவன். அப்போது ஆதவனின் வயது 30. அத்தனை வயதில் எப்படி இவ்வளவு முதிர்ச்சியான நாவலை எழுதினார் என்று இப்போது இரண்டாவது முறையாக ‘காகித மலர்களை’ வாசிக்கும்போது தோன்றுகிறது. மற்றொரு ஆச்சரியம், என்னுடைய 19-வது வயதில் படித்தபோது எத்தகைய உணர்வுகளை அடைந்தேனோ அதே உணர்வுகளைத்தான் இப்போது 44 ஆண்டுகள் கழித்துப் படிக்கும்போதும் அடைகிறேன். அப்போது, இந்த நாவலை நாம் எழுதியிருக்கக் கூடாதா என்று ஏங்கினேன். இப்போது, இதிலிருந்துதானே நாம் கற்றுக் கொண்டோம் என்ற திருப்தியையும் கிளர்ச்சியையும் அடைகிறேன். ஏனென்றால், என் எழுத்தின் மீது அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்திய தமிழ் எழுத்தாளர்களில் முதன்மையானவராகத் தோன்றுகிறார் ஆதவன்.
‘காகித மலர்களி’ன் பிரதான பாத்திரமான செல்லப்பா அச்சு அசலாக என்னைப் போலவே இருந்தான். அதேசமயம், செல்லப்பாவை ஆதவன் தன்னுடைய சாயலைக் கொண்டே உருவாக்கியிருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது. நாவலின் முடிவில் ஆதவனே அதை எழுதியும் இருக்கிறார். (எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கும் செல்லப்பா கதைகளும் எழுதுகிறான்.) ஆனால் விஷயம் அது அல்ல; அறுபதுகள், எழுபதுகளின் இளைஞன் ஒவ்வொருவனுமே செல்லப்பாவைப் போல்தான் இருந்தான்.
மனித குல வரலாற்றிலேயே மின்சாரத்தின் கண்டுபிடிப்புக்கு நிகரான மிக முக்கியமான கண்டுபிடிப்பு கணினி. கணினிக்கு முந்தைய, தொலைக்காட்சி, அலைப்பேசி போன்ற சாதனங்கள் வருவதற்கு முந்தைய காலகட்டம் எப்படி இருந்தது என்பது ‘காகித மலர்களி’ன் மையச் சரடுகளில் ஒன்று. அதைக் கலாபூர்வமாகப் பதிவு செய்த ஆதவன் தொலைக்காட்சியும், கணினியும், அலைப்பேசியும் பழக்கத்துக்கு வரும் முன்பே நடுவிலே நின்று போன சங்கீதத்தைப் போல் அகால மரணம் அடைந்து விட்டார். அந்த வகையில் பழமையும் புதுமையும் சந்திக்கும் புள்ளியில் எழுதப்பட்ட நாவல் என்று காகித மலர்களைச் சொல்லலாம். அதாவது, பழைய சகாப்தத்தின் இறுதி நாவல்; புதிய சகாப்தத்தின் முதல் நாவல்.
Advertisement
***
தொலைக்காட்சியும், கணினியும், அலைப்பேசியும் இல்லாத அறுபதுகளின் இளைஞன் எப்படி இருந்தான்? அப்போது பீட்டிள்ஸ் குழுவினரின் பாதிப்பு உலகம் முழுவதும் பரவியிருந்தது. அந்தக் குழுவைச் சேர்ந்த ஜார்ஜ் ஹாரிஸனைக் கேட்பது அப்போதைய இளைஞனின் கலக வெளிப்பாடுகளில் ஒன்றாக இருந்தது. ஏன்? ‘சமூகத்தோடு ஒத்துப் போகாத தனித்தன்மையும், பிடிவாதமும், ஊன்றுகோல்களற்ற குமுறலும் தவிப்பும், கட்டுப்பாடுகளற்ற பரவசமும் ஆவேசமும்’ அவர்களைக் கவர்ந்தன. அறுபதுகளில் இளைஞர்களின் நாயகனாக இருந்த இன்னொருவர், ஹாலிவுட்டின் ஸ்டீவ் மக்வீன். எதிர்க் கலாசார நாயகன். அவனுக்கு யாரும் லட்சியமில்லை. அவனை யாரும் எளிதில் வசப்படுத்தி விட முடியாது. நட்பு, காதல்… எதுவும் அவனுக்குத் தேவையில்லை.
அறுபதுகளில்தான் ஆணும் பெண்ணும் பேசிக் கொள்ள ஆரம்பித்தார்கள்; அல்லது, புன்னகை செய்யத் தொடங்கினார்கள். அறுபதுகளில்தான் பெண்கள் புகைக்கலாமா என்று யோசிக்கவும், மதுவை ருசி பார்க்கவும் ஆரம்பித்திருந்தார்கள்.
நாவலிலிருந்து சில காட்சிகள்: ஜூக்ஸ் பாக்ஸ் ஓட்டையில் நாலணாவை நுழைத்து விசையையும் அழுத்திவிட்டு வந்து உட்கார்ந்தான். ஜார்ஜ் ஹாரிஸன் பாட்டு தொடங்கியது. பத்ரியும் ரவியும் அந்தப் பெண்கள் பக்கமே பார்த்துக்கொண்டு சொடக்குப் போட்டுக் கொண்டே இருந்தார்கள். அந்தப் பெண்கள் இந்தச் சீண்டலைப் பொருட்படுத்தாதவர்களாக இருக்க முடியாமல், அதே சமயம் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை உருவாக்கிக் கொள்வதிலும் வெற்றியடையாமல், தாங்கள் கவனிக்கப்படுவதை மிக உணர்ந்தவர்களாக, இந்த உணர்வை மறைக்க முயன்றவர்களாக ஒருவரோடொருவர் இயல்பாகப் பேசிக் கொள்வதாக பாவனை செய்துகொண்டு, மௌனம் ஏற்படுத்தக் கூடிய சங்கடத்தைத் தொடர்ந்துகொண்டு அதன் மூலமே அதை ஒரு பாவனையாக உணர்த்திக்கொண்டு அமர்ந்திருந்தார்கள்.
தனிமையில் பெண்களைச் சந்திக்கும்போது பயந்து பயந்து ஓடிக் கொண்டும், நண்பர்களுடன் கூட்டமாக இருக்கும்போது அசட்டுத் தைரியத்துடன் அவர்களைச் சீண்டுவதும் இளைஞர்களின் வழக்கமாக இருந்தது அப்போது.
ரமணியும் செல்லப்பாவும் ஜன்பத்தில் நடக்கத் தொடங்கினார்கள். ‘அதோ நீலச்சட்டை போட்டுண்டு ஒருத்தி வரா பாரு’ என்றான் ரமணி.
‘நல்ல பாடி.’
‘டெஸ்ட் பண்ணிப் பாக்கிரேன்’ என்ற ரமணி எங்கேயோ பார்த்துக் கொண்டு போகிறவன் போல நடந்து சென்று அவள் மேல் மோதினான். ‘ஓ, ஐ ஆம் ஸாரி’ என்றான். அவள் எதுவும் பேசாமல் ஏளனமும் அலட்சியமும் கலந்த ஒரு புன்னகை புரிந்துவிட்டு மேலே நடந்து சென்றாள். ‘ஒருநாள் எவளாவது உன்னைச் செருப்பாலே அடிக்கப் போறா’ என்றான் செல்லப்பா.
‘போடா முட்டாள்! இப்படி இடிச்சால் ஒரு மஜா அவாளுக்கு… உனக்குத் தெரியாது… இடிபடணும்னுதான் கூட்டத்துக்கு நடுவாலே நடந்து போகிறா… பஸ்ஸிலேயே வெறுமனேயாவது போயிட்டு வருவா சிலபேர்… வேண்டியது வீட்டிலே கிடைக்கலேன்னா…’
ரமணி பேசிக் கொண்டிருக்கும்போதே நடுநடுவில் நிறுத்தி எதிரே வருகிற பெண்கள் மேல் உரசியவாறும் மோதியவாறும்தான் இருந்தான். பெண்களுடைய மனோதத்துவத்தைத் தலைகீழ்ப் பாடமாக அறிந்து வைத்திருந்தவன் போல அவன் நடந்து கொண்டான். செல்லப்பாவுக்குத் தர்மசங்கடமாக இருந்தது. அதே சமயத்தில் ரமணியின் செய்கை அவனுக்கு ஒரு ரகசியமான மகிழ்ச்சியையும் அளித்தது.
செல்லப்பாவின் தம்பி பத்ரியின் வகுப்புத் தோழனான கணேசன் தில்லியில் உள்ள கீழ்மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவன். அவனுடைய பிரச்னை, புத்தாண்டுக்கு முந்தின இரவில் ‘ஆண்டு முடிவு’ நிகழ்ச்சியை டெலிவிஷனில் பார்க்க வேண்டும். (அப்போது தொலைக்காட்சி என்ற வார்த்தை பயன்பாட்டில் இல்லை.) அவன் வீட்டில் டெலிவிஷன் இல்லை. ரேடியோ இருந்தது. ஆனால் இரண்டு மாதங்களாக வாயடைத்துப் போயிருந்தது. அவன் அப்பா அதை வேண்டுமென்றே ரிப்பேர் செய்யாமல் வைத்திருந்தார். அவன், அவனுடைய தம்பி, தங்கை எப்போதும் பாடத்தைப் படிக்காமல் ரேடியோ கேட்டுக் கொண்டேயிருக்கிறார்களாம். பரீட்சை முடிந்த பிறகுதான் அவர் ரேடியோவை ரிப்பேர் செய்யப் போகிறாராம். கணேசனின் இன்னொரு பிரச்னை, வீட்டுக்குப் போய் சட்டைகளைத் துவைக்க வேண்டும். இரண்டு சட்டைகள்தான் இருந்தன. இருந்த ஒரே ஸ்வெட்டரும் அழுக்காக இருந்தது. ஆனால் குளிர்காலமாதலால் துவைத்தால் காயாது. பனியன்கள் பொத்தல் பொத்தலாகி விட்டன. ஆனால் அது இப்போது அவசரப் பிரச்னை இல்லை. குளிரில் எப்போதும் சட்டை போட்டிருப்பதால் பனியன் கிழிசலை யாரும் கவனிக்கப் போவதில்லை.
கணேசனின் அப்பாவும் பத்ரியின் அப்பாவும் ஒரே சமயத்தில் மினிஸ்ட்ரியில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். பத்ரியின் அப்பா டெபுடி செக்ரடரி. கணேசனின் அப்பா வெறும் செக்ஷன் ஆபீசர்தான். அதைப் பற்றியும் யோசிக்கிறான் கணேசன்.
பத்ரி மற்றும் செல்லப்பாவின் மூத்த சகோதரனான விசுவம் ஒரு புத்திஜீவி. லட்சியவாதி. அவனுக்கும் யாரோடும் ஒத்துப் போக முடிவதில்லை. தான் செய்து வந்த, அதிகம் பணம் தரக் கூடிய வேலையை உதறிவிட்டு அமெரிக்காவில் சுற்றுச்சூழலியலில் ஆய்வு செய்து கொண்டிருக்கிறான். அவனைப் பொறுத்தவரை மந்தையிலிருந்து வேறுபடுபவர்களுடைய கனவுகள்தான் சமுதாயத்தை மாற்ற முடியும். மேன்மையடையச் செய்ய முடியும். ஜனநாயகம் மந்தைத்தனத்தைத்தான் உருவாக்குகிறது. செல்வாக்குள்ளவர்கள் தம் செல்வாக்கை மென்மேலும் வலுப்படுத்திக் கொள்ள இது உதவுகிறது. ஒரே மாதிரியான கட்டடங்கள், வாழ்க்கை முறை, கல்வித் திட்டம் இவை தனிமனித வேட்கைகளை, கனவுகளை ஒடுக்குகின்றன.
காந்தியைப் போன்றவர்கள் மந்தைக்கு அறிவூட்ட முயலுகிறார்கள். ஹிட்லரைப் போன்றவர்கள் மந்தையின் மனப்போக்கை, முடமான உணர்ச்சித் தாகத்தை, தம்முடைய சொந்த நோக்கங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
***
உலக நாவல் வரிசையில் வைக்கத் தகுந்ததான ‘காகித மலர்கள்’ இன்றைய மதிப்பீடுகளின் போலித்தனத்தை மிக வலுவாகவும் கலாபூர்வமாகவும் சொல்லுகிறது. நாவல் தொடங்குவதற்கு முன்பே மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பிருஹதாரண்ய உபநிஷத்தின் வாசகங்களே நாவலின் செய்தி.
‘யாக்ஞவல்கியரே, மனிதனுக்கு ஒளியைத் தருவது எது?’ என்றான் அரசன்.
‘சூரியன்’ என்கிறார் யாக்ஞவல்கியர்.
‘சூரியன் மறைந்த பின்பு?’
‘சந்திரன்.’
‘சூரியனும் மறைந்து சந்திரனும் மறைந்த பின்பு?’
‘நெருப்பே அவனுக்கு ஒளியாகிறது.’
‘நெருப்பும் அணைந்த பிறகு?’
‘வாக்கே அவனுக்கு ஒளியாகும். அதன் உதவியால் காண்கிறான், உழைக்கிறான், வீடு திரும்புகிறான். அதனால் அரசே, ஒருவன் தன் கைகளைத் தெளிவாகப் பார்க்க முடியாதபோது, ஓசை கேட்கிறது. அதை நோக்கி அவன் செல்கிறான்.’
‘அப்படியானால் யாக்ஞவல்கியரே, சூரியன் மறைந்து, சந்திரன் மறைந்து, நெருப்பு அவிந்து, ஓசையும் அடங்கி விடும்போது மனிதனுக்கு ஒளியாவது எது?”
‘ஆத்மாவே அவனுடைய ஒளியாகும்’ என்றார் யாக்ஞவல்கியர்.
காகித மலர்களின் ஒவ்வொரு பக்கமும் மனிதன் தன் ஆத்மாவை எப்படி எப்படியெல்லாம் கீழ்மையை நோக்கிச் செலுத்துகிறான் என்பதையே சொல்லிக்கொண்டு போகிறது. ஸ்டெனோவாக மினிஸ்ட்ரியின் உள்ளே நுழையும் பசுபதி தன் எஜமானர்களுக்கு விசுவாசமாக இருந்து டெபுடி செக்ரடரியாக உயர்ந்து விடுகிறார். நாவலின் முடிவுப் பகுதியில் அவருக்கு ஜாயிண்ட் செகரடரி பதவியும் கிடைத்து விடுகிறது. இதற்காகத் தன் மனைவியையே உயர் அதிகாரிகளிடமும் மந்திரிகளிடமும் அனுப்பி வைக்கவும் அவர் தயங்குவதில்லை.
அவர் மனைவி பாக்கியம் ஒரு நாடக நடிகை. வயது ஐம்பதுக்கு மேல் ஆனாலும் முப்பதுக்கு மேல் மதிப்பிட முடியாத தோற்றம். பணம், புகழ், அதிகாரம் ஆகியவற்றுக்காக எப்படியும் வாழலாம் என்ற நோக்கம் உடையவள். கணவனின் அதிகாரி யு.பி. பிராமணராக இருந்தால் வெள்ளிக்கிழமை தோறும் அவர்கள் வீட்டில் நடக்கும் பஜனைகளில் கலந்துகொண்டு தொண்டைக் கட்டுடன், தவிடு போன்ற ஒரு பிரசாதத்தை வாங்கிக்கொண்டு வருவாள். சட்டர்ஜியாக இருந்தால் அவரோடு வங்காளி நாடகங்களுக்குப் போவாள். வாராவாரம் அதிகாரிகள் வைக்கும் மதுபான விருந்துகளையும் தவற விடுவதில்லை. உடம்பு தேவை என்று கேட்கும் அதிகாரிகளுக்கு அதையும் தருவாள்.
பசுபதி-பாக்கியம் தம்பதியின் மூத்த புதல்வன் விசுவத்தின் மனைவி பத்மினி புதிய சகாப்தத்தின் பெண். சுதந்திரம் அடைந்தவள். அவளைப் பற்றிய ஒரு வர்ணனை இது: பம்பாயிலிருந்து டில்லிக்கு ரயிலில் வரும்போது பத்மினி ஜீன்ஸ் அணிந்திருந்தாள். யார் யாருடனோ சிநேகம் பிடித்துக் கொண்டாள். விலாசம் குறித்துக் கொண்டாள். அதில் ஒருவன் மருந்துக் கம்பெனியில் வேலை செய்யும் மணமாகாத இளைஞன். நவநாகரிக மங்கையொருத்தியின் நட்புக்குப் பாத்திரமாக வேண்டுமென்ற ஆசை எல்லோருக்குமே இருக்கிறது – குறிப்பாக, இறுக்கமான மத்தியதரச் சூழ்நிலையில் வளர்ந்தவர்களுக்கு, மூட மரபுகளிலும் கட்டுப்பாடுகளிலும் உழன்று சலித்தவர்களுக்கு. ஜீன்ஸ் அணிந்த, தலைமயிரை பாப் செய்து கொண்ட, அகலமான கருப்புக் கண்ணாடியணிந்த, புகை பிடிக்கும், மது அருந்தும், அமெரிக்கக் கொச்சையில் பேசும் பெண் இவர்களுக்கு விடுதலையின் உருவமாகத் தோன்றுகிறாள்.
விசுவமும் பத்மினியும் ஒருநாள் ஒரு மதுபான விருந்துக்குச் செல்கிறார்கள். அங்கேயும் பத்மினி எல்லோருடனும் சிநேகம் பிடித்துக்கொண்டு சிரித்துச் சிரித்துப் பேசுகிறாள். அந்தக் கூட்டத்தில் ரயிலில் சந்தித்த மருந்து கம்பெனி ஆடவனும் இருக்கிறான். அந்த இளைஞனோடு ஓரிரு நிமிடங்கள் பேசுவது கூட விசுவத்தின் சுரணையுணர்வைச் சோதிப்பதாக இருக்கிறது. அவ்வளவு மூடனாக இருக்கிறான் அவன். விருந்து நடக்கும் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்து செடி கொடிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறான் விசுவம். அப்போது திடீரென்று ஒரு ஒளிக்கீற்று அவன் மீது விழுகிறது. மாடி ஜன்னல் திறந்ததனால் வந்த வெளிச்சம். மேலே பார்க்கிறான். ரயிலில் சந்தித்த இளைஞனும் பத்மினியும் ஜன்னல் அருகே வந்து நின்றிருந்தார்கள். ஏதோ பேசிக் கொண்டார்கள், மெல்லிய குரலில்… பத்மினி எதற்கோ உரக்கச் சிரித்தாள். அந்த இளைஞன் அவளை அணைத்துக் கொள்ள முயன்றான். அவள் மெல்லத் தன்னை விடுவித்துக் கொண்டு உள்ளே செல்கிறாள்.
சிறிது நேரம் கழித்து விசுவம் மாடிக்குச் செல்கிறான். ‘எங்கே போய் விட்டீர்கள்?’ என்றாள் பத்மினி, செல்லமாகக் குற்றம் சாட்டும் தொனியில்.
‘தோட்டத்தில் இருந்தேன்.’
‘மை காட்! இங்கு வந்துமா செடி கொடிகளை விட மாட்டீர்கள்?’
அவன் அவள் யாசித்த பிம்பத்தை அணிய முயலவில்லை. (தோள்களைக் குலுக்கியிருக்க வேண்டுமோ? என் சுபாவம் உனக்குத் தெரிந்ததுதானே என்று முட்டாள்தனமாகப் புன்னகை செய்திருக்க வேண்டுமோ?) ‘சுத்தமான காற்றை சுவாசிக்கப் போயிருந்தேன்’ என்று அமைதியான குரலில் கூறியவாறு அவளைப் பார்த்தான். அவள் அவன் விழிகளைச் சந்திக்கவில்லை. ‘கிளம்பலாமா?’ என்றாள்.
விசுவத்தின் தாத்தா சென்ற நூற்றாண்டின் மதிப்பீடுகளைக் கொண்டவர். சம்ஸ்கிருதப் புலவர். சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவர். தாத்தா உயிரோடு இருந்த வரையில் எல்லாப் பண்டிகை தினங்களும் தவறாமல் வீட்டில் கொண்டாடப்பட்டு வந்தன- சிவராத்திரியிலிருந்து கிருஷ்ண ஜெயந்தி வரையில், கந்த சஷ்டியிலிருந்து ராமநவமி வரையில். ஆனால் அவர் போன பிறகு வீட்டில் பண்டிகை கொண்டாடுவதில்லை. அப்பாவுக்கு நேரமில்லை. அம்மாவுக்கும் நேரமில்லை. இதிலெல்லாம் அவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை.
தாத்தா செல்லப்பாவைத் தவிர அந்த வீட்டில் அதிகம் உறவாடுவது வீட்டுச் சமையல்காரர் ராம்ஸிங்கோடுதான். ஏனென்றால், தாத்தாவைப் போலவே ராம்ஸிங்குக்கும் மலர்களிலும், பறவைகளிலும், பருவ மாற்றங்களிலும் நுட்பமான ஈடுபாடு இருந்தது. இமயமலை கட்வால் பிரதேசத்தைச் சேர்ந்தவன். சமையலறையில் வேலை செய்யும்போது அந்தப் பிரதேசத்தின் நாட்டுப்பாடல் மெட்டுகளை முனகிக் கொண்டிருப்பான். வீட்டில் யாருமில்லாவிட்டால் உரத்த குரலில் பாடவும் செய்வான். அந்தப் பாட்டில் ஒரு விடுதலை ஏக்கம் தொனிப்பது போலிருக்கும். அந்த நகர்ப்புறத்துச் சூழ்நிலை, மனிதர்கள், நாகரிகப் பூச்சுகள் யாவற்றிலிருந்தும் விடுபட்டு மீண்டும் தன்னையும் தன் முன்னோர்களையும் உருவாக்கிய கட்வால் மலைப்பிரதேசத்தை அடைய வேண்டுமென்ற ஆன்மாவின் துடிப்பாக அந்தப் பாட்டு தோன்றும். தாத்தா தில்லியில் இருந்த நாட்களில் எப்போதும் ஏதாவதொரு ராகத்தை முனகிக் கொண்டோ, சில சமயங்களில் உரத்த குரலில் பாடும்போதோ கூட விசுவத்துக்கு இதே உணர்வுதான் ஏற்படும்.
அப்படியானால் ஆதவன் முந்தின தலைமுறையின் மதிப்பீடுகளைத் திரும்பவும் மறு உருவாக்கம் செய்கிறாரா என்றால் அதுவும் இல்லை. தாத்தாவையே அதற்கும் உதாரணமாகச் சொல்லலாம். இயற்கையோடு இயைந்த செறிவான வாழ்க்கையை வாழ்ந்த தாத்தா மோசமான ஆணாதிக்கவாதியாக இருந்திருக்கிறார். பாக்கியம் தன் மருமகள் பத்மினியிடம் சொல்வதாக வருகிறது அந்தப் பகுதி. ஒருநாள் பாக்கியத்திடம் அவளுடைய மாமியார் தான் பட்ட துன்பங்களைச் சொல்லி அழுதாள். அவள் காலட்தில் பெண்கள் அதையெல்லாம் யாரிடமும் சொல்லிக் கொள்ள முடியாது. லஜ்ஜை. கட்டுப்பாடுகள், ஆசாரங்கள் அதிகம்.
அவருக்குத் (பாக்கியத்தின் மாமனார்) தினவு பொறுக்க முடியாமல் போகும்போது அவளுக்கு ‘அது’ கிடைக்கும். ஆனால் அவள் வேண்டும்போது அல்ல. அவள் விரும்புகிற அளவும் அல்ல. ‘அவர்’ பசி தீர வேண்டும். அவ்வளவுதான். மறுபடி அவளுடைய நினைவு, அவளுடைய தேவை ஏற்படுகிற வரை அவள் தவித்துத் தவித்து, ஆசைகள் பலமுறை தோன்றித் தோன்றி, ஒடுங்கி ஒடுங்கி… இல்லை, ஒடுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு… இன்னொரு பக்கம், அவர் அவளை நெருங்கித் தன் பசியைத் தீர்த்துக்கொண்டு, ஆனால், அவள் பசியைத் தீர்க்காமலேயே விலகிவிடும்போது, எழுச்சியுற்ற வேட்கையை, அதைத் தணித்துக் கொள்ளச் சாதனம் அருகிலிருந்தும் இல்லாதவளாக அவள் தவித்த தவிப்பு. அவர் அவளை நெருங்காமலேயே இருந்திருக்கலாம் என்று தோன்றச் செய்யும் தவிப்பு.
இயல்பான ஒரு பசியை இயல்பானதாக ஒப்புக் கொள்ளாமல் ஒரு பலவீனமாக எண்ணி அதைப் பற்றிக் குற்ற உணர்வுகளால் பீடிக்கப்பட்ட விசுவத்தின் தாத்தாவைப் போன்றவர்கள், உடலுறவை ஏதோ சில சமயங்களில் இழைக்கப்படும் பாபமாகக் கருதி, அதைப் பற்றிப் பேச விரும்பாமல், நினைவுபடுத்தப்பட விரும்பாமல், அதே சமயத்தில் அதிலிருந்து விடுபடவும் விரும்பாமல்… ஓ! பெரும் ஞானஸ்தர்களாக, தசை ஆசைகளுக்கு மேற்பட்டவர்களாக அவர்கள் அணிந்த வேஷம் எத்தனை முட்டாள்தனமானது! எத்தனை பரிதாபகரமானது! அந்த வேஷம் காரணமாகப் பொங்கியெழும் ஆசைகளை அடக்கி அடக்கி அநேக இரவுகளில் நரக வேதனையை அனுபவித்த அன்றையப் பெண்கள்…
(தொடரும்)