முதல் உதவி செய்ய அனைவரும் அறியவேண்டும்
கடந்த சில நாள்களுக்கு முன், இரு சக்கர வாகனத்தில் இரவு 7 மணி அளவில் அவிநாசி சாலையில் சென்றுகொண்டிருந்தேன்.
கடந்த சில நாள்களுக்கு முன், இரு சக்கர வாகனத்தில் இரவு 7 மணி அளவில் அவிநாசி சாலையில் சென்றுகொண்டிருந்தேன். "கலெக்டர் கேம்ப்' அலுவலகம் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகங்கள் முன்புறம் திடீரென்று ஏதோ வண்டி விழும் ஓசை கேட்டது. அதைத் தொடர்ந்து அங்கே பெருங்கூட்டம் கூடிவிட்டது.
அந்த விபத்து நடக்கக் காரணம் அப்போது சாலையில் போதிய வெளிச்சம் இல்லாததே. அந்த நேரம் மின்தடையால் ஏற்பட்ட இருட்டில் இந்த விபத்து நடந்தது. கிட்டத்தட்ட 10 நிமிடமாகியும் சுற்றி இருப்பவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்களே தவிர அடிபட்டவரைத் தூக்கவோ, உதவி செய்யவோ இல்லை. உடனே அருகில் சென்றேன். 108 ஆம்புலன்ûஸப் பலரும் ஒரே சமயத்தில் அழைத்துக் கொண்டிருந்தனர்.
"யாராவது ஒருவர் அந்த வேலையைச் செய்யுங்கள்' எனச் சொல்லி, கூட்டத்தை விலக்கினேன். சாலையில் வாகன நெரிசல் அதிகமாகிக் கொண்டே இருந்தது. அதை ஓரளவு சரிசெய்துவிட்டு, அடிபட்டவரை வெளிச்சம் படும்படியான இடத்திற்கு பத்திரமாக தூக்கிச் சென்று ஓரமாக படுக்க வைத்தோம்.
Advertisement
அடையாளம் தெரியாத அளவு முகத்தில் அடிபட்டு ரத்தம் வழிந்துகொண்டிருந்தது.
ஒருவழியாக "108' வந்து அடிபட்டவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. சாலையில் விபத்து ஏற்பட்டவுடன் அனைவருக்கும் அதைப்பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்படுவது இயல்புதான். அதற்காக மீட்புப்பணிகள் செய்வதற்கு இடையூறு செய்வது, மீட்புப் பணிகள் செய்யாமல் வேடிக்கை பார்ப்பது கூடாது.
அடிபட்டவர் பேசும் நிலையில் இருந்தால் அவரிடமே அவரைப் பற்றியும் யாருக்குத் தகவல் சொல்வது என்றும் கேட்கலாம். அப்படி இல்லாதபோது அவருடைய சட்டைப் பையிலோ பர்ஸிலோ அடையாள அட்டை இருக்கிறதா என்று பார்ப்பதில் தவறில்லை. (ஆனால் சிலர் அதையே சாக்காக வைத்து பணம், மோதிரம் போன்றவற்றையும் எடுக்கக்கூடும். இது மிகவும் அவலமான நிலைமை.)
இதைவிட மனிதாபிமானமற்ற ஒரு தகவலைக் கேள்விப்பட்டபோது அதிர்ந்தே போனேன். அடிபட்டவரை தங்களது தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தால் அதற்காக 108 ஆம்புலன்ஸ் டிரைவருக்குத் தனியாகப் பணம் தரும் செயல்களில் சில தனியார் மருத்துவமனைகள் ஈடுபடுகின்றனவாம். அருகில் அரசு மருத்துவமனை இல்லாவிடில் வேறு வழியில்லாமல் தனியாரிடம்தான் அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
சில வேளைகளில் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்வதே புத்திசாலித்தனமும் கூட; ஏனென்றால் நோயாளியை உடனே கவனிப்பார்கள். ஆனால் காயத்தின் தன்மை, காயம்பட்டவரின் பொருளாதார நிலைமையையும் நாம் அறிந்து செயல்படுவதே நல்லது.
அதே சமயம், அதிகம் கமிஷன் தருகிறார்கள் என்று தொலைதூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கோ, அதிக அனுபவமும் மருத்துவ வசதிகளும் இல்லாத தனியார் மருத்துவமனைக்கோ ஆம்புலன்ஸ் டிரைவர் அழைத்துச் சென்றுவிட்டால் என்னாவது?
அடிபட்டவருக்கு முழு அளவிலான மருத்துவ உதவி கிடைக்கும்வரை உள்ள நேரத்தை "கோல்டன் ஹவர்' என்பார்கள். அந்த நேரத்தில் தகுந்த முதலுதவி சிகிச்சை அவசியம். நன்கு பயிற்சிபெற்ற, துணிச்சல்மிக்க, நிதானப் போக்கு கொண்டவர் இச் செயலை மேற்கொள்ள வேண்டும். அடிபட்டவர் மீது கருணையும் அக்கறையும் கொண்டு முதலுதவியைச் செய்ய வேண்டும். அவசரமோ பதற்றமோ வீண் சந்தேகமோ அப்போது கூடாது.
அடிபட்டவருக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக அதை நிறுத்த வேண்டும். அடிபட்டவரின் நிலை எப்படி என உணர வேண்டும். அவரால் பேச முடிகிறதா என முதலில் அறிந்து அவரைப் பேசவைக்க வேண்டும். சில விபத்துகளில் அடிபட்டவருக்குக் குடிக்கத் தண்ணீர் தரக்கூடாது. ஆனால் பலர், யார் அடிபட்டாலும் உடனே எப்படியாவது அவர்களுக்குக் குடிக்க தண்ணீர் தரவேண்டும் என்று அவசரப்படுவார்கள்.
அதேபோல அடிபட்டவருக்கு உடனே உதவ வேண்டும் என்கிற நோக்கில் உடனடியாகத் தூக்கவும் கூடாது. எலும்பு அல்லது மூட்டுகளில் அடிபட்டிருந்தால் அதை சரியாகக் கணிக்காமல் தூக்கக் கூடாது.
சாலை விபத்துகளிலும் பலவகை உண்டு. அவர்களாகவே மயங்கி விழுபவர்கள், யாராவது மோதி விழுபவர்கள், ஏதாவது அதிர்ச்சி செய்தி கேட்டு மயக்கம் அடைபவர்கள்.
சாலை விபத்து என்றவுடன் 108 ஆம்புலன்ûஸ அழைப்பவர்கள் விபத்து நடந்த இடத்தைப்பற்றித் தெளிவாகச் சொல்ல வேண்டும். இல்லையேல் வாகனம் வந்து சேரத் தாமதமாகிவிடும். விபத்து நடந்த இடத்தில் கூடும் கூட்டம்கூட சிலநேரம் தேவையற்ற தாமதத்தை உண்டாக்கி விடும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்லி மீட்பு நடவடிக்கைகள் தாமதமாக வாய்ப்புண்டு. வாகனம் ஓட்டுபவரோ வேறு யாராக இருந்தாலும் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது தனது பாக்கெட்டில் தன்னைப் பற்றிய விவரம் வைத்திருத்தல் நலம். அடையாள அட்டை, முகவரி அட்டை, வீட்டு தொலைபேசி எண், கைபேசி எண், அலுவலக முகவரி, தொலைபேசி எண் என்று எல்லாமும் இருப்பது மிகவும் நல்லது. புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை என்றால் வேலை எளிதாகிவிடும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள், இதய நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள் போன்றவர்கள் கூச்சப்படாமல் அந்தத் தகவலையும் சேர்த்தால் டாக்டர்களுக்கு வேலை எளிதாகும். ரத்த குரூப்பைக்கூட குறித்துவைக்கலாம்.
வாகனம் வைத்திருப்பவர்கள் முறையாக லைசென்ஸ், பதிவுச் சான்று, இன்சூரன்ஸ், புகை பரிசோதனை ஆகிய நான்கின் நகல்களை வண்டியில் வைத்திருத்தல் அவசியம். வாகனங்களை மாதம் ஒருமுறையாவது பரிசோதனை செய்து ஓட்ட வேண்டும்.
வாகனத்தை ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது, தலைக்கவசம் அணிந்து ஓட்ட வேண்டும், பாதையில் கண் இருக்க வேண்டும். வேகம் கூடாது. சாலையின் நட்டநடுவில் 2 சக்கர வாகனங்கள் போகக்கூடாது. பின்னாலும் எதிரிலும் வரும் பஸ், லாரிகளைப் பார்த்ததும் வேகமாக சாலை ஓரத்துக்குச் செல்லும்போது சாலைத் தடுப்புகளிலோ, பள்ளங்களிலோ விழுந்து விபத்தில் சிக்க நேரும்.
ஆரம்பத்திலிருந்தே சாலை ஓரமாகச் செல்வது பாதுகாப்பானது. பின்னால் ஒருவரை உட்காரவைத்துச்செல்லும் போது மிகவும் கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் ஓட்ட வேண்டும்.