தானத்தால் உயர்வோம்
தானம் செய்வது குறித்து இரண்டு விதமான உணர்வு வேண்டும். முதலில் தானம் செய்வது என்ற உணர்வு. மற்றொன்று அது குறித்த விழிப்புணர்வு.
தானம் செய்வது குறித்து இரண்டு விதமான உணர்வு வேண்டும். முதலில் தானம் செய்வது என்ற உணர்வு. மற்றொன்று அது குறித்த விழிப்புணர்வு.
உயிரோடிருக்கையில் செய்வது ரத்த தானம். சிறுநீரகம்கூட அவசியம் ஏற்படின் தானம் செய்யலாம். இறந்த பின்னும் நம்மால் தானம் செய்ய முடியும். விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்டு இருப்பவர்கள்கூட உடலுறுப்பு தானம் செய்யலாம். மூளைச்சாவு ஏற்பட்டவர் 37 நாள்களுக்கு மேல் உயிர்வாழ முடியாது. ஒருவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதா என மருத்துவர்தான் முடிவு செய்வார். மிக நுணுக்கமான சோதனைகள் மூலம் மூளைச்சாவு ஏற்பட்டதை 5 அல்லது 10 நிமிஷங்களில் கண்டறிய முடியும். மூளைச்சாவு ஏற்பட்டதை குறைந்தபட்சம் 4 மருத்துவர்கள் சோதனை செய்து சான்றிதழ் தர வேண்டியிருக்கும். மூளைச்சாவு ஏற்பட்டவருக்கு இருதயத் துடிப்பு இருக்கும். எனவே, உண்மை விவரங்களைச் சொல்லி அவர் பிழைக்க முடியாது என்கிற விஷயத்தையும் பக்குவமாகச் சொல்லி, (ஏன் என்றால் அவர் இறந்துவிட்டார் எனச் சொல்லவும் முடியாத சூழல்.) குடும்பத்தினரிடம் உடலுறுப்பு தானம் செய்வதைப் பற்றியும் விளக்கமாகச் சொல்லி அதன் மூலம் பிறர் நல்ல முறையில் வாழ முடியும் என்பதெல்லாம் சொல்லி அவர்களிடம் அனுமதி பெற வேண்டும்.
மற்ற வகையில் இறந்தவர்களிடம் இருந்து கண்கள் எடுத்து தானம் செய்யலாம். கண் தானத்துக்கு குறிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டியது, இறந்தவரின் குடும்பத்தினர் ஒப்புதல் தெரிவிப்பதோடு, இறந்து 5 மணி நேரத்தில் கண்கள் எடுக்கப்பட வேண்டும். கண்களை அப்படியே எடுத்து அடுத்தவருக்கு வைப்பதில்லை. அதில் கார்னியா, சிலீரா என்ற விழி வெண்படலப் பகுதியை தனித்தனியே எடுத்து தேவைப்படுபவருக்குப் பொருத்துவார்கள். இறந்தவரின் கண்களை எடுத்த பிறகு வேறொரு பிளாஸ்டிக் கண் (பார்ப்பதற்கு அசல் போலவே இருக்கும்) பொருத்திவிடுவார்கள். இம்மாதிரி கண் தானம் செய்ய விரும்புபவர்கள் தங்கள் பகுதியிலுள்ள கண் மருத்துவமனைக்குச் சென்று அவர்களின் தொடர்பு எண்களை வாங்கி நமது செல்லிடப்பேசியில் பதிந்து வைத்துக்கொள்வது நல்லது.
Advertisement
உடலுறுப்பு தானம் குறித்து பலருக்கு இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்பது உண்மையே.
உடலுறுப்பு தானம் என்பதும் இறந்தபின் தானம் என்பதும் அவர் சார்ந்த குடும்பத்தினரின் பெருந்தன்மையாலும் சாத்தியமாகும். அதற்கு அவர்களுக்கு அது குறித்த விழிப்புணர்வு அவசியம்.
இறந்தபின் வீணாகப் புதைத்தால் மண்ணுக்குள் மட்கிப் போகும், எரித்தால் சாம்பலாகவும் ஆகும் உடம்பின் பாகங்களை தாராளமாக பிறருக்குத் தரலாம் என்ற சிந்தனை வர வேண்டும்.
சிலர் இம்மாதிரி செயல்களைத் தடுக்கவும் செய்வார்கள். அந்த இடத்தில் அவர்கள் தங்கள் மேதாவித்தனத்தை காண்பிக்கவும், இம்மாதிரி உடலுறுப்பு தானம் தவறானது என்றும் போதனை செய்து காரியத்தைக் கெடுக்கவும் செய்வார்கள். எனவே, இம்மாதிரி விழிப்புணர்வுப் பணி என்பது மிகவும் சிரமமான, ஆனால் சமுதாயத்துக்கு மிகவும் பயனுள்ள செயலாகும்.
ரத்த தானத்தின் மூலம் பெறப்படும் ரத்தம் அப்படியே மற்றவருக்கு செலுத்தப்படுவது இல்லை. பெறப்படும் ரத்தம் முறையாக சுத்திகரிக்கப்பட்டு அதிலிருந்து வெள்ளை அணுக்கள், சிவப்பு அணுக்கள், பிளேட்லெட், பிளாஸ்மா என பல வகை ரத்த பாகங்கள் பிரித்து பாதுகாப்பாக வைக்கப்பட்டு அதனதன் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் 4 பாகமாக ரத்தம் பிரிக்கப்பட்டு எது எது யாருக்குத் தேவையோ அதை வழங்குகின்றனர். ஒவ்வொன்றும் ஒவ்வொரு கால அளவுக்கு கெடாமல் இருப்பது என்பது சிறப்பம்சம்.
அறிவின் வளர்ச்சி என்பது விஞ்ஞான யுகமாகப் பரிணமித்து வாயு வேகத்தில் பயணமாகிக் கொண்டிருக்கிறது. ஊர்விட்டு பிற ஊருக்குப் போகவே பயந்திருந்த சமுதாயத்தில் இப்போதைய விஞ்ஞான யுகத்தினால் நாடு விட்டு நாடு, கண்டம் விட்டுக் கண்டம் ஏன், பிற கோள்களுக்கும் பயணமாகிக் கொண்டிருக்கும் நாள்களும் வந்துவிட்டன. எனவே, மூடநம்பிக்கைகளை விடடு யதார்த்த உலகத்தில் வாழ வேண்டும். விஞ்ஞான கண்டுபிடிப்புகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி மற்றவர்களுக்குப் பயன் உள்ளவர்களாக ஆவோம்.