பகுதி - 368
இந்திரனுக்கும் பிரமனுக்கும் திருமாலுக்குமே
இந்திரனுக்கும் பிரமனுக்கும் திருமாலுக்குமே கிட்டாத உபதேச மொழியைக் கோரும் இந்தத் திருச்செந்தூர்த் திருப்புகழ் ‘உள் தெளிதற்கு ஒன்றைத் தரவேணும்’ என்று உள்ளம் தெளிவதற்கான அந்தச் சொல்லை உபதேசித்தருளக் கேட்கிறது.
அடிக்கு 24 எழுத்துகளால் அமைந்த இந்தப் பாடலில் சீர் அமைப்பு நிரைநிரை நேர்நேர் என்று மாறிமாறி விழுகிறது. தொங்கல் சீரில் மட்டும் நெடில், மற்ற அனைத்து சீர்களிலும் அனைத்து எழுத்துகளும் குறிலாக அமைந்துள்ள பாடல். இதிலுள்ள வல்லொற்று மெல்லொற்றுகளின் வரிசையை கவனித்தால், ஒற்று சேர்த்து 5, 9, 13, 17, 21, 24, 28 ஆகிய எழுத்துகள் (நான்கு நான்கு எழுத்துகள் இடைவெளியில்) வல்லொற்றாகவும், 7, 15, 23 ஆகிய எழுத்துகள் (எட்டெட்டு எழுத்துகள் இடைவெளியில்) மெல்லொற்றாகவும் விழுவதைப் பார்க்கலாம். நிரைநிரை நேர்நேர் என்ற அமைப்பு பாடலின் வேகத்தை அதிகரிக்கிறது.
தனனத் தந்தத் தனனத் தந்தத்
தனனத் தந்தத் - தனதான
Advertisement
புகரப் புங்கப் பகரக் குன்றிற்
புயலிற் றங்கிப் - பொலிவோனும்
பொருவிற் றஞ்சச் சுருதிச் சங்கப்
பொருளைப் பண்பிற் - புகல்வோனும்
திகிரிச் செங்கட் செவியிற் றுஞ்சத்
திகிரிச் செங்கைத் - திருமாலும்
திரியப் பொங்கித் திரையற் றுண்டுட்
டெளிதற் கொன்றைத் - தரவேணும்
தகரத் தந்தத் சிகரத் தொன்றித்
தடநற் கஞ்சத் - துறைவோனே
தருணக் கொங்கைக் குறவிக் கின்பத்
தையளித் தன்புற் - றருள்வோனே
பகரப் பைம்பொற் சிகரக் குன்றைப்
படியிற் சிந்தத் - தொடும்வேலா
பவளத் துங்கப் புரிசைச் செந்திற்
பதியிற் கந்தப் - பெருமாளே.