பகுதி - 370
இந்தப் பாடல் திருச்செந்தூர் தலத்துக்கானது.
இறைவனைத் தனது திருவடியைத் தருமாறு கோரும் இந்தப் பாடல் திருச்செந்தூர் தலத்துக்கானது. நேற்றைய பாடலில் நிரைநேர் நேர்நேர் என்ற அமைப்பில் வல்லொற்றும் மெல்லொற்றும் கலந்து வந்ததைப் பார்த்தோம். இன்றைய பாடலும் இரண்டிரண்டு அசைகளைக் கொண்ட சீர்களால் ஆனது.
(தொங்கல்சீர் எப்போதும் மூன்றசை.) தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தத்தா தனதான என்ற அமைப்பில் நேர்நேர் அசைகளைக் கொண்ட பாடல்களைப் பார்த்திருக்கிறோம். இன்றைய பாடல் முழுக்க முழுக்க மெல்லொற்றுகளால் ஆனது.
அடிக்கு ஒற்றுநீக்கி 16 எழுத்துகள்; ஒவ்வொரு சீரின் இரண்டாம் எழுத்தும் நெடில்; ஒற்று சேர்த்து ஒவ்வொரு சீரிலும் இரண்டாம் எழுத்து மெல்லொற்று. ஒவ்வொரு அடியிலும் ஆறாம் சீரின் கடைசி எழுத்து வல்லொற்று. பாடலைப் பார்ப்போம்.
Advertisement
தந்தா னந்தா தந்தா னந்தா
தந்தா னந்தா - தனதானா
தண்டே னுண்டே வண்டார் வஞ்சேர்
தண்டார் மஞ்சுக் - குழல்மானார்
தம்பா லன்பார் நெஞ்சே கொண்டே
சம்பா வஞ்சொற் - றடிநாயேன்
மண்டா யந்தீ மென்கால் விண்டோய்
வண்கா யம்பொய்க் - குடில்வேறாய்
வன்கா னம்போ யண்டா முன்பே
வந்தே நின்பொற் - கழல்தாராய்
கொண்டா டும்பேர் கொண்டா டுஞ்சூர்
கொன்றாய் வென்றிக் - குமரேசா
கொங்கார் வண்டார் பண்பா டுஞ்சீர்
குன்றா மன்றற் - கிரியோனே
கண்டா கும்பா லுண்டா யண்டார்
கண்டா கந்தப் - புயவேளே
கந்தா மைந்தா ரந்தோள் மைந்தா
கந்தா செந்திற் - பெருமாளே.