பகுதி - 359
திலதைப்பதியில் வீற்றிருக்கும் பெருமாளே!
பதச் சேதம் | சொற் பொருள் |
இறை அத்தனையோ அது தானும் Advertisement
| இறை: மிகச்சிறிய அளவு; |
இ(ல்)லை இட்டு உணல் ஏய் தரு காலம்
| ஏய்தரு காலம்: பொருந்திய காலம் (இவ்வாறு கழித்த காலம்); |
அறையில் பெரிதாம் மல மாயை
| அறையில்: சொன்னால்; |
அலைய படும் ஆறு இனி ஆமோ
| அலையப்படும் ஆறு: அலைச்சல் படும் இந்தத் தன்மை; |
மறை அத்தனை மா சிறை சாலை
| மறை: வேதம்; அத்தனை: தலைவனை; மறையத்தனை: வேதத்தின் தலைவனான பிரமனை; சிறைசாலை: சிறைச்சாலை (மெலித்தல் விகாரம்); |
வழி உய்த்து உயர் வான் உறு தேவர்
|
|
சிறையை தவிரா விடும் வேலா
|
|
திலதை பதி வாழ் பெருமாளே.
|
|
இந்தப் பாடலுக்குப் பொருள் காண்கையில், ‘இறையத்தனையோ அதுதானும் இலையிட் டுணலேய் தருகாலம்’ என்ற அடியை, ‘இட்டுணல் ஏய்தரும் காலம், இறையத்தனையோ அதுதானும் இலை’ என்று மாற்றிப் போட்டுக் கொள்கிறோம்.
இட்டுணல் ஏய்தருகாலம் ... இன்னொருவருக்கு இட்டு அதன்பின் நான் உண்ணுவது என்ற நல்லதன்மை என்னிடம் பொருந்தியிருந்த காலம்,
இறையத்தனையோ அதுதானும் இலை ... ஒருசிறிதும் என்னிடத்தில் இருந்ததில்லை.
அறையிற் பெரிதாம் ... (அடுத்தவருக்கு இட்டுண்ணாத இந்த நிலையை) நான் சொல்லப் புகுந்தால் மிகப் பெரிதாக வளரும்.
மலமாயை அலையப் படுமாறு இனியாமோ ... ஆணவ, கன்ம, மாயாமலங்களாலும், மாயையாலும் நான் அலைக்கழிக்கப்படுகின்ற இந்த வழி இனி எனக்கு ஆகாது.
மறை அத்தனை மா சிறைசாலை வழியுய்த்து ... வேதத்தின் தலைவனான பிரமனைப் பெரிய சிறைச்சாலைக்குச் செல்லும்படியாக அனுப்பிவிட்டு,
உயர்வானுறு தேவர் ... அமரலோகத்திலுள்ள உயர்ந்த தேவர்களை (அவர்களுடைய),
சிறையைத் தவிரா விடும்வேலா ... சிறையிலிருந்து விடுவித்து அருளிய வேலனே!
திலதைப் பதிவாழ் பெருமாளே. ... திலதைப்பதி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!
சுருக்க உரை
வேதங்களை ஓதியுணர்ந்த தலைவனான பிரமனைச் சிறைக்கு அனுப்பிவிட்டு, அமரலோகத்தின் உயர்ந்த தேவர்களுடைய சிறையை விடுவித்த வேலனே! திலதைப்பதியில் வீற்றிருக்கும் பெருமாளே!
மற்றவர்களுக்கு இட்டுவிட்டு அதன்பிறகு உண்ணும் நன்னெறி என்னிடத்தில் ஒருபோதும், அணுவளவேனும் இருந்ததில்லை. இத்தகைய தன்மையோடு நான் கழித்த காலமோ, சொல்லப் புகுந்தால் மிகப் பெரியது. ஆணவ மலம், கன்ம மலம், மாய மலங்களாலும், மாயையாலும் நான் அலைக்கழிக்கப்பட்டுத் திரிவது இனிமேலும் நீடிக்கக்கூடாது. இதைத் தவிர்த்தருள வேண்டும்.