முகப்பு
தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 722

உன் பொற்கழல்களைத் தாராய்

Updated On : 27 டிசம்பர், 2017 at 2:27 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 11:57 PM

தொண்டர்கண்டு அண்டிமொண் டுண்டிருக்குஞ்சுத்த ஞானமெனுந்
தண்டையம் புண்டரி கந்தரு வாய்
சண்ட தண்டவெஞ்சூர்
மண்டலங் கொண்டுபண் டண்டரண் டங்கொண்டு மண்டி மிண்டக்
கண்டுருண் டண்டர்விண் டோடாமல் வேல்தொட்ட காவலனே.

“ஞானமெனும் தண்டைஅம் புண்டரீகம் தருவாய்” என்று கந்தர் அலங்காரத்தில் கேட்டதைப் போல ‘சிவஞானமாகிய உன் பொற்கழல்களைத் தாராய்’ என்று வேண்டுகின்ற இப்பாடல் திருக்காளத்தித் தலத்துக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 34 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஐந்து, ஒன்பது ஆகிய சீர்களில் இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று, ஒரு நெடில் என மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஆறு, பத்து ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் இரண்டு  (கணக்கில் சேராத) வல்லொற்றும்; மூன்று, ஏழு, பதினொன்று ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் ஒரு நெடிலுமாக மூன்றெழுத்துகளும்; நான்கு, எட்டு, பன்னிரண்டு ஆகிய சீர்களில் இரண்டு குறிலும் இரண்டு  (கணக்கில் சேராத) மெல்லொற்றுமாக இரண்டெழுத்துகளும் அமைந்துள்ளன.

Advertisement


தனத்தா தத்தத் தனனா தந்தத்
      தனத்தா தத்தத் தனனா தந்தத்
      தனத்தா தத்தத் தனனா தந்தத் தனதான

சரக்கே றித்தப் பதிவாழ் தொந்தப்
         பரிக்கா யத்திற் பரிவோ டைந்துச்
         சதிக்கா ரர்ப்புக் குலைமே விந்தச் செயல்மேவிச்

சலித்தே மெத்தச் சமுசா ரம்பொற்
         சுகித்தே சுற்றத் தவரோ டின்பத்
         தழைத்தே மெச்சத் தயவோ டிந்தக் குடிபேணிக்

குரக்கோ ணத்திற் கழுநா யுண்பக்
         குழிக்கே வைத்துச் சவமாய் நந்திக்
         குடிற்கே நத்திப் பழுதாய் மங்கப் படுவேனைக்

குறித்தே முத்திக் குமறா வின்பத்
         தடத்தே பற்றிச் சகமா யம்பொய்க்
         குலக்கால் வற்றச் சிவஞா னம்பொற் கழல்தாராய்

புரக்கா டற்றுப் பொடியாய் மங்கக்
         கழைச்சா பத்தைச் சடலா னுங்கப்
         புகைத்தீ பற்றப் புகலோ ரன்புற் றருள்வோனே

புடைத்தே யெட்டுத் திசையோ ரஞ்சத்
         தனிக்கோ லத்துப் புகுசூர் மங்கப்
         புகழ்ப்போர் சத்திக் கிரையா நந்தத் தருள்வோனே

திருக்கா னத்திற் பரிவோ டந்தக்
         குறக்கோ லத்துச் செயலா ளஞ்சத்
         திகழ்ச்சீ ரத்திக் கழல்வா வென்பப் புணர்வோனே

சிவப்பே றுக்குக் கடையேன் வந்துட்
         புகச்சீர் வைத்துக் கொளுஞா னம்பொற்
         றிருக்கா ளத்திப் பதிவாழ் கந்தப் பெருமாளே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.