பகுதி - 492
மாயாபுரி எனப்படும் தலம்
‘மாயை கருணை பொழிந்து மேவிய பெருமாளே’ என்று இந்தப் பாடலில் இறைவனை அழைப்பதால், இதில் மாயை என்ற பெயரால் சுட்டப்படுவது மாயாபுரி எனப்படும் தலம்; ஹரித்வாரை பிங்கல நிகண்டு ‘அரித்துவார மாயாபுரியே’ என்று குறிப்பதால் இது ஹரித்வாரைக் குறிக்கும் பாடல் என்று உரையாசிரியர் குகத்திரு செங்கல்வராய பிள்ளையவர்கள் குறித்திருக்கிறார்கள்.
‘சிகரம் அருந்த’ என்று தொடங்குவது ‘மலையை எப்படி அருந்துவது’ என்று திகைக்க வைத்தாலும், ‘அகரம்’ என்பது அ என்னும் எழுத்தைக் குறிக்கிறது; தகரம் என்பது த என்னும் எழுத்தைக் குறிக்கிறது; அதுபோல சிகரம் என்பது சி என்னும் எழுத்தைக் குறிக்கிறது என்று அறிகிறோம். இதன் விரிவைப் பொருள் காணும்போது காணலாம்.
அடிக்கு ஒற்றொழித்து 20 எழுத்துகளைக் கொண்ட பாடல்; ஒவ்வொரு சீரும் மும்மூன்று எழுத்துகளால் அமைந்திருந்தாலும், முதற்சீர் குற்றெழுத்துகளால் ஆனது; இரண்டாம் சீர் மெல்லொற்றோடு கூடியது; மூன்றாம் சீர் நெடிலோடு தொடங்குவது.
Advertisement
தனன தனந்த தானன தனதான
தனன தனந்த தானன தனதான
சிகர மருந்த வாழ்வது சிவஞானம்
சிதறி யலைந்து போவது செயலாசை
மகர நெருங்க வீழ்வது மகமாய
மருவி நினைந்தி டாவருள் புரிவாயே
அகர நெருங்கி னாமய முறவாகி
அவச மொடுங்கை யாறொடு முனமேகிக்
ககன மிசைந்த சூரியர் புகமாயை
கருணை பொழிந்து மேவிய பெருமாளே.