பகுதி - 493
பஞ்சாட்சரத்தின் முதலெழுத்தான
பதச் சேதம் | சொற் பொருள் |
சிகரம் அருந்த வாழ்வது சிவ ஞானம் Advertisement
| சிகரம்: சிவாய நம என்பதிலுள்ள ‘சி’ என்ற முதலெழுத்து, எழுத்தாகிய மது; அருந்த: பருக—உச்சரிக்க; |
சிதறி அலைந்து போவது செயல் ஆசை
| செயல்ஆசை: மன, வாக்கு, காயங்களின் செயல்களும் ஆசைகளும்; |
மகர நெருங்க வீழ்வது மக மாய(ம்)
| மகர: சிவாய நம என்பதிலுள்ள ‘ம’ என்னும் கடைசி எழுத்து; மகமாய: மகா மாயை; |
மருவி நினைந்திடா அருள் புரிவாயே
| மருவி: உன்னைச் சேர்ந்து; நினைந்திடா: நினைந்திட, நினைப்பும் மறப்பும் அற்ற நிலையை அடைந்திட; |
அகர(ம்) நெருங்கின் ஆமயம் உறவாகி
| அகர(ம்): (சூரனின் நகரான மகேந்திரபுரியின்) வீதி; ஆமயம்: நோய்; |
அவசமொடும் கையாறொடும் முனம் ஏகி
| அவசம்: வசமின்மை, மயக்கம்; கையாறு: கையறு, செயலற்ற (நிலையில்); |
ககனம் இசைந்த சூரியர் புக மாயை
| ககனம்: ஆகாயத்தில்; இசைந்த: பொருந்தியுள்ள; சூரியர்: பன்னிரு சூரியர்கள்; புக: தஞ்சம் புக; மாயை: மாயாபுரி எனப்படும் ஹரித்வார்; |
கருணை பொழிந்து மேவிய பெருமாளே.
|
|
சிகரம் அருந்த வாழ்வது சிவஞானம்... பஞ்சாட்சரமாகிய ‘சிவாய நம’ என்பதிலுள்ள ‘சி’ என்ற எழுத்தை உச்சரிப்பதால் சிவஞானம் கிட்டும்.
சிதறி யலைந்து போவது செயலாசை... (அப்படி உச்சரிப்பதால்) சிதறியும் அலைந்தும் மன, வாக்கு, காயம் ஆகியனவற்றின் செயல்களும் ஆசைகளும் அழிந்து போகும்.
மகர நெருங்க வீழ்வது மகமாய... (சிவாய நம என்பதிலுள்ள) ‘ம’ என்னும் எழுத்தை நெருங்குகின்றபோது மகாமாயை தொலைந்து போகும்.
மருவி நினைந்திடா அருள்புரிவாயே... உன்னை தியானித்து அதன் பயனாக நினைப்பு மறப்பு இரண்டுமே இல்லாத நிலையை அருள் புரிவாயாக.
அகர நெருங்கின் ஆமயம் உறவாகி... (சூரனுடைய நகரான மகேந்திரபுரியின்) வீதிகளை நெருங்கி வந்த காரணத்தால் நோய்—துன்பம்—ஏற்பட்டு,
அவசமொடுங் கையாறொடும் முனம் ஏகி... தன் வசத்தை இழந்த, செயலற்ற நிலையில் முன்னர் (சூரன் ஆண்ட காலத்திலே) சென்று,
ககனம் இசைந்த சூரியர்... ஆகாயத்தில் இருப்பவர்களான பன்னிரண்டு சூரியர்களும்,
புக கருணை பொழிந்து... (உன்னிடத்திலே தஞ்சம்) புக, (சூரனைச் சம்ஹரித்து அவர்களுக்குக் கருணையைப் பொழிந்தவண்ணமாக,
மாயை மேவிய பெருமாளே.... மாயாபுரியாகிய ஹரித்வாரில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
சுருக்க உரை
ஆகாயத்தில் விளங்குகின்ற பன்னிரு சூரியர்களும் சூரனுடைய நகரான மகேந்திரபுரியின் வீதிகளை நெருங்கிய காரணத்தால் தம் வசத்தை இழந்து, செயலற்ற நிலையை அடைந்த நிலையில் உன்னைச் சரண்புகவும் சூரனைச் சம்ஹாரம் செய்து அவர்களுக்கு கருணையைப் பொழிந்தபடி மாயாபுரி எனப்படும் ஹரித்வாரில் வீற்றிருக்கின்ற பெருமாளே!
பஞ்சாட்சரத்தின் முதலெழுத்தான ‘சி’ என்பதை உச்சரிக்கும்போது சிவஞானம் கிட்டுகிறது; மனோ வாக்கு காயங்களின் செயல்களும் ஆசைகளும் அற்றுப் போகின்றன; (பஞ்சாட்சரத்தின்) கடைசியெழுத்தான ‘ம’ என்பதை நெருங்குகையில் மகாமாயை தொலைகிறது. உன்னைக் கலந்த நிலையில் ஐந்தெழுத்தை உச்சரித்தும் தியானித்தும் நினைத்தல் மறத்தல் ஆகிய இரணடும் இல்லாத நிலையை அடைவதற்கு அருள்புரிய வேண்டும்.