பகுதி - 494
சரஸ்வதி நதியைப் பற்றிய
இந்தப் பாடலில் சொல்லப்பட்டுள்ள வயிரவி வனம், சரஸ்வதி நதிக்கரைக்கு அருகில் இருப்பதாக ஈற்றடியில் வரும் ‘சரஸ்வதி நதிக்கண்’ என்ற குறிப்பே சொல்கிறது. இந்தத் தலம் பஞ்சாப் மாநிலத்தில் இருப்பதாகத்/இருந்ததாகத் தெரிகிறது. இப்போது ஓடாததாகிய சரஸ்வதி நதி, அருணகிரியார் இருந்த 15ம் நூற்றாண்டில் ஓடியும் இருக்கலாம்; இல்லாமலும் இருக்கலாம். ஆனால் சரஸ்வதி நதியைப் பற்றிய மிக முக்கியமான குறிப்பை உடையதாக அடியார்களைப் பணியும் பேற்றைக் கோரும் இந்தப் பாடலிருக்கிறது.
அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளை உடைய பாடல்; 1, 4, 7 ஆகிய சீர்கள் நான்கெழுத்துகளைக் கொண்ட குற்றெழுத்துகள்; 2, 5, 8 ஆகிய சீர்கள் ஒற்று நீக்கி மூன்றெழுத்துகளைக் கொண்டவை; இவற்றின் மூன்றாமெழுத்து வல்லொற்றாக அமைந்துள்ளது; 3, 6, 9 ஆகிய சீர்கள் இரண்டெழுத்துகளைக் கொண்டவை, நெடிலோடு தொடங்குபவை.
தனதன தனத்த தான தனதன தனத்த தான
தனதன தனத்த தான தனதானா
அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு
மரனிட மிருக்கு மாயி யருள்வோனே
அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு
மணிமயில் நடத்து மாசை மருகோனே
பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப
னிருகர மிகுத்த பார முருகாநின்
பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள்
பணியவு மெனக்கு ஞானம் அருள்வாயே
சுருதிக ளுரைத்த வேத னுரைமொழி தனக்கு ளாதி
சொலுவென வுரைத்த ஞான குருநாதா
சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள
துணிபட அரக்கர் மாள விடும்வேலா
மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும்
வயல்புடை கிடக்கு நீல மலர்வாவி
வனமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு
வயிரவி வனத்தில் மேவு பெருமாளே.
Advertisement