பகுதி - 497
கிரெளஞ்ச மலையைப் பிளந்த
பதச் சேதம் | சொற் பொருள் |
சந்தம் புனைந்து சந்தம் சிறந்த தண் கொங்கை வஞ்சி மனையாளும் Advertisement
| சந்தம் புனைந்து: சந்தனத்தை அணிந்துகொண்டு; சந்தம் சிறந்த: அழகில் சிறந்த (சந்தம் என்றால் சந்தனம் என்றும் அழகென்றும் ஓசை என்றும் பலபொருளுண்டு); |
தஞ்சம் பயின்று கொஞ்சும் சதங்கை தங்கும் பதங்கள் இளைஞோரும்
| தஞ்சம் பயின்று: என்னைத் தஞ்சமாகக் கொண்டு; இளைஞோர்: மக்கள், குழந்தைகள்; |
எந்தன் தனங்கள் என்று என்று நெஞ்சில் என்றும் புகழ்ந்து மிக வாழும்
| தனங்கள்: செல்வங்கள்; |
இன்பம் களைந்து துன்பங்கள் மங்க இன்று உன் பதங்கள் தரவேணும்
| இன்பம் களைந்து: (நிலையற்றதாகிய இந்த) இன்பத்தை நீக்கி; |
கொந்தின் கடம்பு செம் தண் புயங்கள் கொண்டு அம் குறிஞ்சி உறைவோனே
| கொந்து: கொத்து, பூங்கொத்து; தண் புயம்: குளிர்ந்த தோள்; குறிஞ்சி: மலையிடம்; |
கொங்கின் புனம் செய் மின் கண்ட கந்த குன்றம் பிளந்த கதிர்வேலா
| கொங்கு: நறுமணம்; புனம்: கொல்லை; செய்: வயல்; மின்: மின்னலைப் போன்ற (வள்ளி); |
ஐந்து இந்த்ரியங்கள் வென்று ஒன்றும் அன்பர் அங்கம் பொருந்தும் அழகோனே
| ஐந்து இந்திரியங்கள்: ஐம்புலன்கள்; |
அண்டம் தலங்கள் எங்கும் கலங்க அன்று அஞ்சல் என்ற பெருமாளே.
|
|
சந்தம் புனைந்து சந்தஞ் சிறந்த தண்கொங்கை வஞ்சி மனையாளும்... சந்தனத்தைப் பூசியவரும்; அழகிற் சிறந்தவரும்; குளிர்ந்த மார்பகத்தை உடையவரும்; வஞ்சிக்கொடி போன்றவருமான மனைவியும்;
தஞ்சம் பயின்று கொஞ்சுஞ் சதங்கை தங்கும் பதங்கள் இளைஞோரும்... என்னையே தஞ்சமாகக் கொண்டுள்ள; கிண்கிணி சதங்கைகளை அணிந்துள்ள பாதங்களையுடைய மக்களுமே,
எந்தன் தனங்கள் என்றென்று நெஞ்சிலென்றும் புகழ்ந்து... என்னுடைய செல்வங்கள் என்று மீண்டும் மீண்டும் மனத்திலே நினைத்துப் போற்றி;
மிகவாழும் இன்பங் களைந்து துன்பங்கள் மங்க. இன்றுன் பதங்கள் தரவேணும்.. பெரிய மகிழ்ச்சியோடு வாழுகின்ற நிலையற்றதான இன்த இன்பத்திலிருந்து என்னை விடுவித்து; என் துயரங்கள் எல்லாவற்றையும் ஒழிக்கும்படியாக உன்னுடைய திருவடிகளை இப்போதே தரவேண்டும்.
கொந்தின் கடம்பு செந்தண் புயங்கள் கொண்டு அங் குறிஞ்சியுறைவோனே... கொத்துகளாக அமைந்துள்ள கடப்ப மாலையை, செம்மையானதும் குளிர்ந்ததுமான புயங்களிலே அணிந்துகொண்டு அழகிய மலைகளினிடத்திலே வீற்றிருப்பவனே!
கொங்கின் புனஞ்செய் மின் மின்கண்ட கந்த குன்றம் பிளந்த கதிர்வேலா... நறுமணம் கமழும் தினைப்புனத்திலும் வயலிலும் இருந்த மின்னலை ஒத்தவரான வள்ளியம்மையைக் கண்டு மகிழ்ந்த கந்தனே! கிரெளஞ்ச மலையைப் பிளந்த கதிர்வேலனே!
ஐந்து இந்த்ரியங்கள் வென்று ஒன்றும் அன்பர் அங்கம் பொருந்தும் அழகோனே... ஐம்புலன்களையும் அடக்கி வெற்றிகொண்ட அன்பர்களுடைய உடலெங்கும் பொருந்தியிருக்கும் அழகனே!
அண்டந் தலங்கள் எங்குங் கலங்க அன்று அஞ்சலென்ற பெருமாளே... அண்டங்களும் உலகங்களும் (சூரனுக்கு அஞ்சிக்) கலங்கிய சமயத்தில் அவர்களுக்கு ‘அஞ்சேல்’ என்று அருளிய பெருமாளே!
சுருக்க உரை
பூங்கொத்துக்களை உடைய கடப்ப மாலையைப் புயங்களிலே அணிந்துகொண்டு மலைத்தலங்களிலே வீற்றிருப்பவனே! வள்ளி மலையின் புனத்திலும் வயலிலும் இருந்தவரான மின்னலைப் போன்ற வள்ளியம்மையைக் கண்டு மகிழ்ந்தவனே! கந்தனே! கிரெளஞ்ச மலையைப் பிளந்த கதிர்வேலனே! ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கொண்டவர்களான அடியார்களிடத்திலே பொருந்தியிருப்பவனே! சூரனைக் கண்டு எல்லா உலகத்தினரும் கலங்கிய சமயத்திலே அவர்களுக்கு ‘அஞ்சேல்’ என்று அருளிய பெருமாளே!
சந்தனத்தைப் பூசிய குளிர்ந்த மார்பகத்தை உடைய அழகிற் சிறந்த மனைவியும்; என்னையே பற்றுக்கோடாகக் கொண்டவர்களும்; கிண்கிணி சதங்கைகளை அணிந்தவரான மக்களுமே என்னுடைய செல்வங்கள் என்று சொல்லிச் சொல்லி இன்பமுறுகிற இந்த நிலையற்ற இன்பநிலையைக் களைந்து; என்னுடைய எல்லாத் துயரங்களும் அறுப்பதான உன்னுடைய திருவடிகளை அடியேனுக்கு இப்போதே தந்தருள வேண்டும்.