இந்த நாளில் அன்று(16.04.1999) வாஜபேயி அரசுக்கு திமுக ஆதரவு - மக்களவையில் மாறன் அறிவிப்பு
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வாஜபேயி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிப்போம் என்று திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் முரசொலி மாறன், மக்களவையில் தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வாஜபேயி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிப்போம் என்று திமுக நாடாளுமன்றக் கட்சித் தலைவர் முரசொலி மாறன், மக்களவையில் தெரிவித்தார்.
இந்த அரசு தொடருவதை நாங்கள் ஆதரிக்கிறோம். ஊழல் அன்னையை ஆதரிப்பதைவிட அடல்ஜியை ஆதரிக்கிறோம் என்று வாஜபேயி அரசு மீதான நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது அவர் பேசியபோது குறிப்பிட்டார்.
அதிமுகவைக் குறிப்பிடாமல் மாறன் பேசியதாவது:
Advertisement
அறிவுபூர்மற்ற, சட்டவிரோதமான, அரசியல் சட்டத்துக்கு விரோதமான கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. அவற்றையெல்லாம் நிறைவேற்றுவதற்காக பிரதமர் வாஜபேயி தனது பெயரைக் கெடுத்துக்கொண்டு, வளைந்துகொடுக்க வேண்டியிருந்தது.
நீங்கள் (பாஜக) கட்டித் தழுவிக்கொண்டு இருந்த பேய், உங்களை (பாஜகவை) சுற்றிக்கொண்டு இருந்த பேய் இப்போது இந்த (காங்கிரஸ்) பக்கம் வந்துவிட்டது.
கடந்த காலங்களில் திமுகவின் அதரவைப் பெற்றிருந்த எந்த ஆட்சியையும் திமுக மிரட்டியதில்லை. ஆளும்கட்சி வரிசை, எதிர்க்கட்சி வரிசை இரண்டிலும் எங்களுக்கு நண்பர்கள் உள்ளனர். அவர்களுக்குள்ளே ஓர் அணியை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.
மூன்றாவது அணி என்று அழைக்கப்பட்ட அணியில் கடந்த வாரம் வரை நாங்கள் இருந்தோம். அது உயிரோடு இருக்க வேண்டும் என்பதுவே எனது ஆசை. ஆனால், திடீரென்று அந்த அணி காணாமல் போய்விட்டது.
எங்களது நம்பகத்தன்மையை யாரும் சந்தேகிக்கத் தேவையில்லை.
ஐக்கிய முன்னணி ஆட்சி ஸ்திரமானதாக அமைய, காங்கிரஸ் கட்சியையும் அரசில் சேர்த்துக்கொள்வோம் என்று நாங்கள் அப்போது கூறியபோது, இடது சாரிக் கட்சிகள் அதைத் தடுத்துவிட்டன. ஆனால், இப்போது காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த அவர்கள் முயலுகின்றனர்.
எனவே, தேசிய நலன் மற்றும் தமிழக மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு பாஜ கூட்டணி அரசை திமுக ஆதரிக்கிறது என்றார் முரசொலி மாறன்.