இந்த நாளில் அன்று(10.06.1999)டான்சி வழக்கு: ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு
டான்சி நில ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, முன்னாள் அமைச்சர் முகமது ஆசிப் உள்பட 6 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
டான்சி நில ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, முன்னாள் அமைச்சர் முகமது ஆசிப் உள்பட 6 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
சாட்சிகள் விசாரணை ஜூலை 5-ம் தேதி தொடங்கும் என்று 3-வது தனி நீதிபதி பி.அன்பழகன் அறிவித்தார்.
ஜெயலலிதா, சசிகலா, முகமது ஆசிப் தவிர, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டி.ஆர்.சீனிவாசன், கற்பூர சுந்தரபாண்டியன், பத்திரப் பதிவு அதிகாரி நாகராஜன் ஆகியோர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
Advertisement
முகமது ஆசிப் தவிர மற்றவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முகமது ஆசிப் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்ற நீதிபதி அன்பழகன் அங்கேயே குற்றாச்சாட்டுகளைப் பதிவு செய்தார்.
டான்சி வழக்கில் மொத்தம் 3 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ், ஆர்.ஆர். இண்டஸ்ட்ரீஸ் ஆகியவையே இந்த மூன்று நிறுவனங்கள்.
அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட குறைத்து விற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்படி குறைந்த விலைக்கு வாங்கியதன் மூலம் தமிழக அரசுக்கு ரூ.3 கோடியே 50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
பொது ஊழியரான ஜெயலலிதா, அரசுக்குச் சொந்தமான நிலத்தை வாங்கியுள்ளார். இது சட்டப்படி தவறு. இவருக்கு உடந்தையாக இருந்த சசிகலா மற்றும் அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்திய தண்டனைச் சட்டம், லஞ்ச ஒழிப்புச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் 56 சாட்சிகள் விசாரிக்கப்பட உள்ளனர்.