இந்த நாளில் அன்று (13.6.1953)சென்னை பஸ் ஸீஸன் டிக்கெட்; இன்னும் யோசனையில்தான் இருக்கிறது - மந்திரி தரும் தகவல்
சென்னை நகரில் 3, 7 ரூம்களில் பரீட்சார்த்தமாக ஸீஸன் டிக்கெட்டுகள் வழங்குவது பற்றி சர்க்கார் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை போக்குவரத்து இலாகா மந்திரி டாக்டர் கிருஷ்ண ராவ் ஊர்ஜிதம் செய்தார்.
சென்னை சர்க்காரின் போக்குவரத்து இலாகா மந்திரி டாக்டர் கிருஷ்ண ராவ், பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
சென்னை நகரில் 3, 7 ரூம்களில் பரீட்சார்த்தமாக ஸீஸன் டிக்கெட்டுகள் வழங்குவது பற்றி சர்க்கார் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ஊர்ஜிதம் செய்தார்.
இந்த யோசனை அங்கீகரிக்கப்பட்டால் ஜூலை 1 முதல் அமலுக்குக் கொண்டு வரப்படும்.
Advertisement
ஸீஸன் டிக்கெட் வாங்குபவர்களுக்கு ஒரு கார்டு கொடுக்கப்படும். இதில் தேதி, எவ்வளவு தடவை பிரயாணம் செய்யலாம் என்ற விவரங்கள் இருக்கும். அனுமதிக்கப்பட்ட பிரயாண நம்பருக்கெதிரில் கண்டக்டர் டிக்கெட்டில் பஞ்ச் பண்ணுவார்.
இந்த டிக்கெட் வைத்திருப்பவர்கள் நினைத்தபடி பிரயாணம் செய்ய முடியாது. ஒரு நாளைக்கு ஒரு தடவையே போகலாம், வரலாம். போக வர சார்ஜ் கொடுப்பதற்குப் பதிலாக இந்த மொத்தத் தொகையில் ஒன்னே முக்கால் பங்கு கொடுக்கவேண்டி இருக்கும். உதாரணமாக, மாம்பலத்தில் இருந்து பாரீஸ் கார்னர் போக வர ஆறரை அணா கொடுக்கவேண்டியிருக்கும்.
இந்த சலுகையினால் ஏற்படக்கூடிய நெருக்கத்தைத் தங்களால் சமாளிக்க முடியுமாவென்று போக்குவரத்து இலாகா அதிகாரிகள் பயப்படுகிறார்கள்.
இது இன்னும் யோசனையில்தான் இருக்கிறதென்றும், சர்க்கார் இன்னும் அதை அங்கீகரிக்கவில்லை என்றும் டாக்டர் கிருஷ்ண ராவ் சொன்னார்.