முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(03.05.1961)எல்லைத் தகராறில் இந்தியா, சீனா இரண்டையும் சமமாக பேசுவதா? கம்யூனிஸ்டுகளுக்கு உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி கண்டனம்

எல்லைத் தகராறில் இந்தியா, சீனா இரண்டையும் சமமாக பேசுவதா என்று கம்யூனிஸ்டுகளுக்கு உள்துறை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி கண்டனம் தெரிவித்தார்.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

சாவதானமாக சிந்தித்து, சீனா - இந்தியா எல்லைப் பிரச்னை பற்றிய தங்களது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளுமாறும், 1942-லும், 1947-லும் செய்த தவறுகளை மீண்டும் செய்யாதிருக்குமாறும் கம்யூனிஸ்டுகளை உள்துறை அமைச்சர் ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி கேட்டுக்கொண்டார்.

நிதானமாக, ஆனால் அழுத்தம் திருத்தமாக அவர் ராஜ்ய சபையில் கிரிமினல் சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்துக்கு பதிலளித்தார்.

எல்லைப் பிரச்னையில் இந்தியாவும் சீனாவும் சமநிலையில் இருப்பதாகக் காட்டுவதற்கு ஒவ்வொரு தடவையும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதை நான் பலமாக ஆட்சேபிக்கிறேன்.

Advertisement

எல்லைப் பிரச்னையில் இந்தியாவும் சீனாவும் சமமாக குற்றம் சாட்டப்பட வேண்டும் என்றும், 12 ஆயிரம் சதுர மைல் பரப்பை நமது எல்லையில் சீனர்கள் ஆக்கிரமித்துக்கொண்டுள்ள போதிலும், இந்தியாவில் ஆக்கிரமிப்பு எதுவுமே இல்லை என்றும் கம்யூனிஸ்டு கட்சி நினைக்கிறது. இப்போதாவது கம்யூனிஸ்டு கட்சியினர் தங்களது நடவடிக்கைகளை வாபஸ் பெறுவது பற்றி சிந்திப்பார்களேயானால், அவர்களது கட்சிக்கும் நல்லது, தேசத்துக்கும் நல்லது.

கம்யூனிஸ்டு கட்சிக்குள் என்ன நடக்கிறது அல்லது கம்யூனிஸ்டு கட்சி மெம்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அறிவது மிகவும் கஷ்டம். ஆனால், இந்திய - சீன எல்லை விவகாரம் குறித்து கம்யூனிஸ்டுகள் செய்யும் பிரசாரம் எந்த அளவு நியாயமானது என்பதை சபைதான் தீர்மானிக்க வேண்டும்.

எல்லைப் பகுதிகள் பின்தங்கியுள்ளன என்பது உண்மைதான். சந்தேகமில்லை. தேசமே இன்று பொருளாதார, தொழில் துறையில் இன்னும் ஏற்றம் காணவில்லை. ஆனால், தற்போதுள்ள சந்தர்ப்ப சூழ்நிலையில் இப்பகுதிகளில் இத்தகைய பிரசாரத்தில் ஈடுபடுவது நியாயமாகுமா?

ஒவ்வொரு தேசத்துக்கும் அதன் எல்லைகள் புனிதமானவை. ஒருமைப்பாடு பேணிக் காக்கப்பட்டாலன்றி எந்த நாடும் உருவாக்கப்பட முடியாது. ஆகவே, தேசத்தின் ஒருமைப் பாட்டை ஆட்சேபிப்பவர்கள் அல்லது ஒருமைப்பாட்டுக்கு உலைவைக்க முற்படுவோர்கள் மீது தண்டனை விதிக்கவே மசோதா கோருகிறது. ஒவ்வொரு வழக்கையும் கோர்ட் விசாரிக்கும். அப்பீல் செய்துகொள்ளவும் வகை உண்டு. ஆகவே, சட்டபூர்வமான அரசியல் நடவடிக்கையை ஒடுக்குவதாக கம்யூனிஸ்டுகள் குற்றம் சாட்டுவதற்கு ஆதாரமே இல்லை என்றார் ஸ்ரீ சாஸ்திரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments