இந்த நாளில் அன்று(11.05.1969)கோவை குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். சிறுவாணியில் நீர்த்தேக்கம் கட்டும் வேலை உடனடியாகத் தொடங்கப்படும் - தமிழக அரசு தகவல்
ரூபாய் ஐந்து கோடி செலவில் சிறுவாணியில் நீர்த்தேக்கம் கட்டும் வேலை உடனடியாகத் துவங்கும் என்று தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் ஸ்ரீ சாதிக் பாட்சா அறிவித்தார்.
ரூபாய் ஐந்து கோடி செலவில் சிறுவாணியில் நீர்த்தேக்கம் கட்டும் வேலை உடனடியாகத் துவங்கும் என்று தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் ஸ்ரீ சாதிக் பாட்சா அறிவித்தார்.
இவ்வேலை, இரண்டு அல்லது மூன்று வருடங்களில் பூர்த்தி செய்யப்படும் என்றும், கோவை நகருக்கும் சுற்றுப்புற பகுதிகளுக்கும் நிரந்தரமாக குடி தண்ணீர் சப்ளை கிடைத்து வரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நதி தண்ணீர் பங்கீடு குறித்து திருவனந்தபுரத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிய அமைச்சர், உடன்பாடு தமிழ்நாட்டுக்கு அனுகூலமானது என்றார். கேரள பகுதியில் சிறுவாணி அணை கட்டும் வேலையை கேரள சர்க்கார் மேற்கொண்ட போதிலும், தேவையான பணத்தை தமிழக சர்க்கார் கொடுக்கும். வரை படங்களையும் சப்ளை செய்யும். வேலை துரிதமாக நிறைவேறச் செய்யத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்கும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
Advertisement
உடன்பாட்டின்படி, தேக்கடி அணை திட்டத்தை தமிழக அரசு கைவிடுகிறதா என்று கேட்டதற்கு, நீராற்றில் இருந்து கூடுதல் தண்ணீரை எடுத்துக்கொள்வதன் மூலம் இது சரிக்கட்டப்படும் என்றும், இதற்கு கேரள சர்க்கார் சம்மதம் அளித்துள்ளதாகவும் அமைச்சர் பதிலளித்தார்.
ஆனைமலை ஆற்றில் இருந்து தமிழ்நாட்டுக்கும் சம அளவு தண்ணீர் தர கேரள சர்க்கார் முன் வந்திருப்பதாகவும் அவர் எடுத்துக் காட்டினார். தற்போது சிறுவாணியில் இருந்து 30 கோடி கியூசெக் தண்ணீர் சப்ளையாகிறது. உடன்பாட்டின்படி 130 கோடி கியூசெக் தண்ணீர் நிச்சயமாகக் கிடைக்கும். 20 லட்சம் ஜனத்தொகை கொண்ட கோவை மாநகர் தேவையைப் பூர்த்தி செய்ய இந்த சப்ளை போதுமானது.
சிறுவாணி நீர் தேக்க திட்டம் பூர்த்தியாகும்போது 20 லட்சம் மக்களுக்குப் போதுமான குடிநீர் சப்ளை சீராக கிடைத்துவரும் என்று அவர் சொன்னார். நீண்ட காலமாக பைசல் ஆகாமல் இருந்து வந்த சிறுவாணி பிரச்னைக்கு தீர்வு கண்டது மகிழ்ச்சி அளிப்பதாக இருப்பதாக சாதிக் பாட்சா கூறினார்.