இந்த நாளில் அன்று(13.05.1971)பொது இன்ஷூரன்ஸ் தொழிலை மத்திய அரசு ஏற்கிறது; நிர்வாகத்தை மேற்கொள்ள அவசரச் சட்டம் பிரகடனம்
இந்தியாவில் செயல்படும் பொது இன்ஷூரன்ஸ் கம்பெனிகளின் நிர்வாகத்தை, ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் மத்திய அரசாங்கம் இன்று எடுத்துக்கொண்டது.
இந்தியாவில் செயல்படும் பொது இன்ஷூரன்ஸ் கம்பெனிகளின் நிர்வாகத்தை, ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் மத்திய அரசாங்கம் இன்று எடுத்துக்கொண்டது.
பொது இன்ஷூரன்ஸ் கம்பெனிகளை அரசுடமையாக்குவதற்கான முதல் நடவடிக்கை என்று அதிகாரபூர்வமாக இது பற்றி விவரிக்கப்படுகிறது.
பொது இன்ஷூரன்ஸ் கம்பெனிகளை அரசாங்கத்துக்கு சொந்தமாக்குவதற்கான சட்டத்தை இயற்றுவது, அடுத்த நடவடிக்கையாக இருக்கும். இம்மாதம் 24-ம் தேதி அன்று ஆரம்பமாக இருக்கும் பார்லிமென்ட்டின் அடுத்த கூட்டத்தொடரில் இதற்கான மசோதா கொண்டு வரப்படும். இவ்வாறு இரு கட்டங்களில் பொது இன்ஷூரன்ஸ் கம்பெனிகள் அரசுடமையாக்கப்படும் என்று நிதி மந்திரி சவாண் கூறினார்.
Advertisement
1971-ம் வருடத்திய பொது இன்ஷூரன்ஸ் (அவசரகால ஷரத்துகள்) அவசரச் சட்டத்தை ராஷ்டிரபதி இன்று பிரகடனம் செய்தார்.
இந்தியாவில் செயல்படும் 42 வெளிநாட்டு பொது இன்ஷூரன்ஸ் கம்பெனிகள், மற்றும் 64 இந்தியப் பொது இன்ஷூரன்ஸ் கம்பெனிகளின் நிர்வாகத்தை இந்த அவசரச் சட்டத்தின் மூலம் மத்திய அரசாங்கம் எடுத்துக்கொண்டது.
ராஷ்டிரபதி பிரகடனம் செய்துள்ள பொது இன்ஷூரன்ஸ் அவசரச் சட்டம், பொது இன்ஷூரன்ஸை அரசுடையாக்குவதை ஒத்ததே என்று நிதி மந்திரி சவாண் கூறினார்.
பார்லிமெண்டில் கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ள மசோதாவின் மூலம் இந்தியாவில் செயல்படும் எல்லா இந்திய, வெளிநாட்டுப் பொது இன்ஷூரன்ஸ் கம்பெனிகளும் இந்திய அரசாங்கத்தின் உடமைகளாகிவிடும்.
இந்தியாவில் பொது இன்ஷூரன்ஸ் வியாபாரத்தை கவனிப்பதற்காக கார்ப்பரேஷன்கள் அமைக்கப்படும். உத்தேச மசோதா இதற்கும் வகை செய்யும்.