இந்த நாளில் அன்று (16.05.1974) தங்கக் கட்டுப்பாடு: திட்டக் குழு யோசனையை அரசு நிராகரித்தது
தங்கக் கட்டுப்பாட்டை மீண்டும் அமலாக்குவது, வேலை வாய்ப்பு வரி விதிப்பது ஆகிய திட்ட கமிஷன் யோசனைகளை அரசு ஆதரிக்கவில்லை.
தங்கக் கட்டுப்பாட்டை மீண்டும் அமலாக்குவது, வேலை வாய்ப்பு வரி விதிப்பது ஆகிய திட்ட கமிஷன் யோசனைகளை அரசு ஆதரிக்கவில்லை.
கூடுதல் வசதி திரட்ட இந்த யோசனைகள் சமீப திட்ட கமிஷன் கூட்டத்தில் வெளியிடப்பட்டன. இவை காரிய சாத்தியமற்றவை, செயல்படுத்த முடியாதவை என அரசு வட்டாரங்கள் கூறின.
ஒரு குடும்பம் வைத்திருக்கும் தங்கத்துக்கு 10 தோலா வரம்பு விதிக்கும் திட்டத்தையும், தங்கக் கட்டுப்பாட்டையும் மீண்டும் அமலாக்கும் யோசனையையும் கூட்டத்தில் கமிஷன் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
மீண்டும் தங்கக் கட்டுப்பாட்டை அமலாக்கும் யோசனையை அரசு வட்டாரங்கள் கேலி செய்தன. முன்பு அத்திட்டத்தை அரசு அமலாக்கி தோற்றது. கருப்புப் பணத்தில் பெரும்பகுதி தங்கமாக இருக்கிறது என்ற கருத்தையும் அவை ஏற்கவில்லை.
மாதம் ரூ.250-க்குமேல் வருமானம் சம்பாதிப்பவர்கள் மீது உள்ள மத்திய, மாநில வரிகளில் விசேஷ வேலை வாய்ப்பு சர்சார்ஜ் விதிப்பது திட்ட கமிஷன் அறிக்கையின் மற்றொரு யோசனையாகும்.
அது நகர மத்திய தர வகுப்பினரை பாதிக்கும். அவர்கள் மீது ஏற்கெனவே அதிக வரிப்பளு உள்ளது. அவர்கள் மீது சுமையை அதிகரிக்க அரசு விரும்பவில்லை. மற்றும் அந்த வரியை வசூலிப்பது எளிதானதல்ல. மத்திய தர வகுப்பினருக்கு புதிய சுமையை ஏற்றுவதைவிட கிராம பணக்காரர்கள் மீது வரி விதிப்பது நல்லது என கூறப்படுகிறது.