முகப்பு
இந்த நாளில்...

இந்த நாளில் அன்று(19.05.1977)நெருக்கடி கால கொடுமைகள் பற்றி விசாரிக்க ஷா கமிஷன் நியமனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நெருக்கடி காலப் பிரகடனம் அமலில் இருந்தபோது நடந்த வரம்பு மீறிய செயல்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜெ.சி.ஷாவை கொண்ட ஒரு நபர் கமிஷன் நியமிக்கப்பட்டிருப்பதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Updated On : 6 ஆகஸ்ட், 2025 at 12:06 PM
பகிர்:

நெருக்கடி காலப் பிரகடனம் அமலில் இருந்தபோது நடந்த வரம்பு மீறிய செயல்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஜெ.சி.ஷாவை கொண்ட ஒரு நபர் கமிஷன் நியமிக்கப்பட்டிருப்பதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நெருக்கடி காலத்தில் நடந்த சம்பவங்கள் மட்டுமின்றி, அதற்கு முந்தின சில நாட்களில் நடந்த சம்பவங்கள் பற்றியும் கமிஷன் விசாரிக்கும். கமிஷனின் பரிசீலனை விஷயங்கள் இன்று அறிவிக்கப்பட்டன.

கமிஷன் நியமனம் பற்றி உத்யோகபூர்வமாக ஒரு பத்திரிகைக் குறிப்பில் அறிவிக்கப்பட்டது. நெருக்கடி காலக் கொடுமைகளை விசாரிப்பதுடன், 1975 ஜூன் 12-ம் தேதியன்று அகலாகாபாத் ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பினை (அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று அகலாகாபாத் ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியிருந்தது) தொடர்ந்தும் அதிகாரத் துஷ்பிரயோகம் சம்பந்தமான புகார்களையும் கமிஷன் கவனிக்கும்.

Advertisement

கமிஷன் பரிசீலனைக்கு விடப்பட்டுள்ள விஷயங்களில் அதிகார துஷ்பிரயோகம், சட்டபூர்வமான நடைமுறைகள், நிர்வாக நடைமுறைகள் புறக்கணிப்பு, தவறான முறையில் காவலில் வைத்தது, சிறையில் மோசமாக நடத்தப்பட்டது, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அமல் நடத்துவதில் நிர்ப்பந்த முறைகளைக் கையாண்டது, கட்டடங்களை அங்கீகாரமின்றி இடித்தது ஆகியவை சம்பந்தமான புகார்கள் இடம் பெற்றுள்ளன.

ரேடியோ, பத்திரிகைகள், டெலிவிஷன் துஷ்பிரயோகம் பற்றி ஒரு வெள்ளை அறிக்கை தயாரிக்கப்பட்டு பார்லிமென்ட்டில் சமர்ப்பிக்கப்படும். இந்த அறிக்கை கமிஷனுக்கு கிடைக்கும்படி செய்யப்படும். தணிக்கை விதிகள் துஷ்பிரயோகம், பத்திரிகையாளர்கள் துன்புறுத்தல், திரைப்பட சர்டிபிகேட் சம்பந்தமான புகார்கள் இவற்றில் அடங்கும்.

அரசு ஊழியர்களின் நடத்தை பற்றி மட்டுமின்றி, இந்த வரம்பு மீறிய செயல்களைப் புரிய கட்டளையிட்டிருக்கக்கூடிய, தூண்டியிருக்கக்கூடிய, ஆதரித்திருக்கக்கூடிய அல்லது இவற்றுக்கு உடந்தையாகவோ அல்லது வேறு வகையிலோ தொடர்பு கொண்டிருக்கக்கூடிய தனிப்பட்டவர்களின் நடத்தையும் விசாரணையில் இடம்பெறும்.

கமிஷன் தன்னுடைய இறுதியான அறிக்கையை 1977 டிசம்பர் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக உத்யோகபூர்வ பத்திரிகைக் குறிப்பு கூறியது.

அதிக எண்ணிக்கையில் புகார்கள் வந்திருப்பதாக விசாரணை  கமிஷன் நியமனத்தை அறிவிக்கும் அதிகாரப்பூர்வமான செய்திக் குறிப்பு தெரிவித்தது. எதிர்கட்சிகளுடன் நட்புறவு கொண்டு இருந்தனர் அல்லது அவற்றிடம் அனுதாபம் காட்டினர் என்பதற்காகப் பலர் கைது செய்யப்பட்டதாகவும் எதிர்கட்சிகளிடம் தொடர்புகொண்டு தீவிரமாக செயல்படாமல் இருந்தபோதும் பலர் கைது செய்யப்பட்டதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

குறிப்பிட்ட நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சலுகை காட்ட நிதி ஒழுங்கீனங்கள் நடைபெற்றதாகவும், சர்க்கார் ஊழியர்கள் அதிக அளவு நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கப் பட்டதாகவும், சிலர் மீது அநாவசியமாக காரணமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.

நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப்படுவதற்கு முன்பே அதிகார துஷ்பிரயோகம் இருந்ததாகவும் கூறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments