வாழ்கையெனும் போர்க்களம்: அ.வேளாங்கண்ணி
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:42 PM
வாழ்கை யெனும் போர்க்களம்
வாழ்ந்து தான் பார்க்கலாம்
முட்கள் கொண்ட படுக்கையே
முயன்றால் கனவும் காணலாம்
கற்கள் கொண்டு வீசுவோர்
வழி நெடுக நிற்கலாம்
சொற்கள் கொண்டு தாக்குவோர்
வீண் பழியும் சுமத்தலாம்
படைத்தவனும் நம் பக்கம்
திரும்பிப் பார்க்க மறுக்கலாம்
விடை தெரியா கேள்விகள்
பின் தொடர்ந்தே துரத்தலாம்
Advertisement
கஷ்ட மெனும் பெருமழை
அடை மழையாய் பொழியலாம்
இஷ்டம் கொண்ட நபரின்றி
வாழ்வின் பாகம் கழியலாம்
எவருக் கில்லை துன்பமே
கண்ணீ ரில்லா வாழ்க்கையோ
எதிர் நீச்சல் போட்டிட
இன்பம் ஒருநாள் தழுவுமே
தோல்வி கண்டு துவண்டிட்டால்
வெற்றி எப்படி கைவரும்?
துக்கம் விட்டு வராவிட்டால்
பக்கம் வருமோ மகிழ்ச்சியே!