வாழ்க்கையெனும் போர்க்களம்: கவி.செங்குட்டுவன்
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:42 PM
வாழும் கலைகள் வகை வகையாய்
வண்ண மீன்களாய் நாளும் இருக்க
தாழும் படியான செயல்கள் மூலம்
வீழும் காரணம் அறியேன் நானும்….
விந்தைகள் பலவும் நிகழும் இந்நாளில்
சந்தைப் பொருளாய் உனது திறனை
வீணாக்கியே உலகில் நீயும் என்றும்
விவாதப் பொருளாய் ஆவது ஏனோ……..
சொந்த பந்தம் அதிகம் இருந்தும்
சொத்து சுகம் அனுபவித்து வந்தும்
உதவிக்கு ஏங்கியே நாளும் வாழ்ந்து
உழைப்பை மறந்து வாழ்வது ஏனோ….
அண்டை அயலார் நட்பை என்றும்
அதிகம் போற்றியே வாழும் நீதான்
உற்றார் உறவினர் உறவை இழந்து
உணர்வு ஏதுமின்றி திரிவது ஏனோ…..
ஆயிரம் வாய்ப்புகள் உலகில் இன்று
அள்ளியே தெளித்து உள்ளது நாளும்
துள்ளியே சென்று அவற்றை நீயும்
பிள்ளை போலே அள்ளிச் செல்வாயே