நாள்தோறும் நம்மாழ்வார்

நான்காம் பத்து ஒன்றாம் திருவாய்மொழி - பாடல் 9, 10

நிலையான மோட்சத்தைப் பெற

செ.குளோரியான்

படிமன்னும் பல்கலன் பற்றோடு அறுத்து, ஐம்புலன் வென்று,
செடிமன்னு காயம் செற்றார்களும், ஆங்கு அவனை இல்லார்
குடிமன்னும் இன்சுவர்க்கம் எய்தியும் மீள்வர்கள்; மீள்வுஇல்லை,
கொடிமன்னு புள்உடை அண்ணல் கழல்கள் குறுகுமினோ.

இந்தப் பூமியிலே பொருந்திய பல்வேறு அணிகலன்களின்மீதுள்ள விருப்பத்தை அறுத்து, ஐம்புலன்களை வென்று சிலர் தவம் செய்கிறார்கள், அவர்கள்மீதெல்லாம் செடிகள் மண்டுகின்றன,

ஆனால் இப்படிக் கடும் தவம் செய்தால்மட்டும் போதுமா? அவர்களுக்குப் பெருமானின் திருவருள் வேண்டும், இல்லாவிட்டால், இந்தத் தவங்களின்மூலம் அவர்கள் குடிகள் வாழும் சுவர்க்கத்துக்குச் சென்றாலும் திரும்பி வந்துவிடுவார்கள், இங்கே பிறப்பார்கள்,

அப்படி மீளாத, நிலையான மோட்சத்தைப் பெற வேண்டுமென்றால், கருடக்கொடியைக் கொண்ட அண்ணலான எம்பெருமானின் திருவடிகளை வந்து சேருங்கள்.

பாடல் - 10

குறுக, மிக உணர்வத்தொடு நோக்கி, எல்லாம்விட்ட
இறுகல் இறப்புஎனும் ஞானிக்கும் அப்பயன் இல்லையேல்
சிறுகநினைவது ஓர் பாசம் உண்டாம், பின்னும் வீடு இல்லை,
மறுகல்இல் ஈசனைப் பற்றி விடாவிடில், வீடு அஃதே.

ஞானிகளின் மனம் அவர்களுக்கு வசப்படும், அத்தகைய மனத்தை அவர்கள் நல்லுணர்வோடு பார்ப்பார்கள், எல்லாப் பற்றுகளையும் விட்டுவிடுவார்கள், இறைவனின் திருவடிகளை இறுகப்பற்றுவதே மோட்சம் என்று எண்ணுவார்கள், அத்தகைய ஞானிகளும்கூட, இறைவனைப் பற்றாவிட்டால், சிறிய நன்மைகளை நினைக்கக் காரணமான ஒரு பற்று உண்டாகும். அந்தப் பற்று உண்டாகிவிட்டால், அதன்பிறகு அவர்களுக்கு மோட்சம் இல்லை. ஆகவே, குற்றமில்லாத பெருமானை விடாமல் பற்றிக்கொள்ள வேண்டும், அதுவே மோட்சம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுபான்மையினா் வாழ்வுரிமை இயக்க அமைப்புக் கூட்டம்

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 88.63 அடி

கொங்கணாபுரம் மகா மாரியம்மன் ஆலய குடமுழுக்கு

சிறப்பு அலங்காரத்தில் ஆறுமுகவேலா் சுவாமி

குரும்பூா் தொடக்க கூட்டுறவு வங்கிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT