பாலனாய் ஏழ்உலகு உண்டு, பரிவுஇன்றி
ஆல்இலை அன்ன வசம்செயும் அண்ணலார்
தாள் இணைமேல் அணி தண்அம் துழாய் என்றே
மாலுமால், வல்வினையேன் மடவல்லியே.
(தாய் சொல்கிறார்)
என்னுடைய மகள், வல்லிக்கொடி போன்றவள், மடப்பம் என்ற குணம் நிறைந்தவள், எம்பெருமான்மீது நேசம் வைத்துள்ளாள், சிறு குழந்தையாக ஏழு உலகங்களையும் உண்டு, எந்தத் துன்பமும் இல்லாமல் ஆலிலையிலே படுத்திருக்கும் அந்த அண்ணலின் திருவடிகளிலிருக்கும் குளிர்ச்சியான, அழகிய துளசிமாலையைப் பெற எண்ணி மயங்குகிறாள் அவள்.
என் மகள் இப்படி வருந்துவதைக் காண்பதற்கு நான் என்ன தீவினைகளைச் செய்தேனோ!
•••
பாடல் - 2
வல்லிசேர் நுண்இடை ஆய்ச்சியர்தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்அடிமேல் அணிநாறு துழாய் என்றே
சொல்லுமால், சூழ்வினையாட்டியேன் பாவையே.
(தாய் சொல்கிறார்)
என்னுடைய மகள், பாவைபோன்றவள், எம்பெருமான்மீது நேசம் வைத்துள்ளாள், கொடிபோன்ற நுட்பமான இடையைக்கொண்ட ஆய்ச்சியர்களோடு சேர்ந்து குறும்பு செய்தவன், குரவை ஆடியவன், அந்தப் பெருமானின் நல்ல திருவடிகளின்மேல் அழகாக நறுமணம் வீசும் துளசிமாலையைப் பெற எண்ணிப் பேசுகிறாள் அவள்.
என் மகள் இப்படி வருந்துவதைக் காண்பதற்கு நான் என்ன தீவினைகளைச் செய்தேனோ!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.