ஆம் இன்சுவை அவை ஆறோடு அடிசில் உண்டு ஆர்த்தபின்
தூமென்மொழி மடவார் இரக்கப் பின்னும் துற்றுவர்
ஈமின் எமக்கு ஒரு துற்று என்று இடறுவர், ஆதலின்
கோமின் துழாய்முடி ஆதி அம் சோதி குணங்களே.
செல்வச்செழிப்போடு வாழ்கிறவர்கள் இனிய அறுசுவை உணவை உண்பார்கள், அதனால் அவர்களுடைய வயிறு நிறைந்துவிடும், ஆனாலும், தூய்மையான, மென்மையான சொற்களைப் பேசுகிற அவர்களுடைய மகளிர் விடமாட்டார்கள், ’இன்னும் கொஞ்சம் உண்ணுங்கள்’ என்று கெஞ்சுவார்கள், ஆகவே, அவர்கள் மேலும் மேலும் உண்பார்கள்.
இப்படிப் போகவாழ்க்கை வாழ்ந்தவர்கள்கூட, என்றைக்கேனும் வறுமைநிலையை அடையக்கூடும், அப்போது அவர்கள் அதே பெண்களிடம் சென்று ‘எங்களுக்கு ஒரு பிடி சாப்பாடு கொடுங்கள்’ என்று கெஞ்சுவார்கள், தாழ்ந்துபோவார்கள்,
ஆகவே, இந்த நிலையற்ற தன்மையை உணருங்கள், துளசிமாலை அணிந்த திருமுடியைக் கொண்டவன், அனைத்துக்கும் முதன்மையானவன், அழகிய சோதி வடிவான எம்பெருமானின் குணங்களைத் தொகுத்துச் சொல்லுங்கள், போற்றிப்பாடுங்கள்.
பாடல் - 8
குணம்கொள் நிறைபுகழ் மன்னர் கொடைக்கடன் பூண்டுஇருந்து
இணங்கி உலகு உடன் ஆக்கிலும் ஆங்கு அவனை இல்லார்
மணம்கொண்ட போகத்து மன்னியும் மீள்வார்கள், மீள்வுஇல்லை
பணம்கொள் அரவுஅணையான் திருநாமம் படிமினோ.
நல்ல குணங்களைக்கொண்ட அரசர்கள், நிறைந்த புகழோடு வாழ்கிறவர்கள், பிறருக்கு அள்ளிக்கொடுக்கும் கடமையைப் புரிகிறவர்கள், ஆர்வத்துடன் இந்த உலகைச் சிறப்பாக ஆள்கிறவர்கள்கூட, எம்பெருமானை நினைக்காவிட்டால், தங்களுடைய ஆட்சி அவனால் கிடைத்தது என்று புரிந்துகொள்ளாவிட்டால், இந்த போகங்களையெல்லாம் இழந்துவிடுவார்கள்,
படமெடுத்து ஆடுகின்ற பாம்பைப் படுக்கையாகக் கொண்ட எம்பெருமானின் திருநாமத்தைச் சொல்லுங்கள், மீட்சியில்லாத மோட்சம் என்கிற செல்வம் கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.