20. செத்தையேன் சிதம்பன் - பாடல் 4
இந்தப் பாடலில் அப்பர் பிரான், உயிர் தனது விருப்பப்படி ஏதும் செய்ய இயலாத தன்மையை,
பாடல் 4
சாற்றுவர் ஐவர் வந்து சந்தித்த குடிமை வேண்டிக்
காற்றுவர் கனலப் பேசிக் கண் செவி மூக்கு வாய் உள்
ஆற்றுவர் அலந்து போனேன் ஆதியை அறிவு ஒன்றின்றிக்
கூற்றுவர் வாயில் பட்டேன் கோவல் வீரட்டனீரே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">இந்தப் பாடலில் அப்பர் பிரான், உயிர் தனது விருப்பப்படி ஏதும் செய்ய இயலாத தன்மையை, இயலாமையை வெளிப்படுத்தும் புலம்பலை இறைவனுக்கு உணர்த்துகின்றார். உயிர் குடியிருப்பதற்காக அமைக்கப்பட்டது உடல். எனவே உடலினையும் உடலில் உள்ள உறுப்புகளையும், தனது விருப்பபடி பயன்படுத்திக் கொள்ள உயிருக்கு பூரண சுதந்திரம் உள்ளது. ஆனால் உயிர், உடலாலும் உடலில் உள்ள பொறிகளாலும் ஆட்டுவிக்கப்படும் அவல நிலைதான் உண்மையில் நடைபெறுகின்றது. இந்த அவலத்தை நாம் உணராமல் இருக்கின்றோம். இந்த அவலத்தை நமக்கு உணர்த்தும் அப்பர் பிரான், அந்த அவலத்தால் ஏற்படும் விபரீதத்தையும் இங்கே விளக்குகின்றார். இறைவனை நாம் அறியாமல் இருப்பதுதான் அந்த விபரீத விளைவு. குடிமை = ஏவல் கொள்ளும் தன்மை. சாற்றுதல் = சொல்லுதல். சந்தித்த = பொருந்திய. காற்றுவர் = காற்றினைப்போன்று மிகவும் எளியனாக, வலிமை ஏதும் அற்றவனாகச் செய்தல்.</p><p align="JUSTIFY">ஐம்புலன்கள் எதையும் தானே அறியும் சக்தி அற்றவை. உயிரும் ஐம்புலன்கள் மற்றும் மனம் ஆகிய அந்தக்கரணங்கள் முதலிய கருவிகளின் உதவியன்றி மெய்பொருளை அறியவோ, உணரவோ முடியாது. எனவே உயிர் கருவி கரணங்களை தன்வயப்படுத்தி அடக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஐம்புலன்கள் தானே இறைவனை அறிய முடியாது என்ற மணிவாசகர் வாய்மொழியாக நாம் இங்கே காண்போம் (திருச்சதகம் - ஆனந்தத்து அழுந்தல் பதிகம்). சொல்லால் அளக்க முடியாத தூரத்தை தாண்டியும், வேகமாகவும் செல்லக் கூடிய ஆற்றல் படைத்தது மனம். ஆனால் அந்த மனமோ சொல்லோ பெருமானைக் காண்பது அரிதாகும். நாம் இறைவனைப் பற்றி சொல்லும் சொற்களும், மற்றவர் சொல்ல நாம் கேட்டறிந்த சொற்களே தவிர நாமே நேரடியாக அறிந்தவை அல்ல. அதேபோன்று ஐம்பொறிகளும் அவற்றோடு ஒட்டிய புலன்களும் இறைவனை நெருங்க முடியாது. இறைவன் நம் மீது கருணை கூர்ந்து உணர்த்தினால்தான் நாம் இறைவனை உணரமுடியும்.</p><p align="JUSTIFY">நினைப்பது ஆக சிந்தை செல்லும் எல்லை ஏய வாக்கினால்<br />தினைத்தனையும் ஆவது இல்லை சொல்லல் ஆய கேட்பவே<br />அனைத்து உலகும் ஆய நின்னை ஐம்புலன்கள் காண்கிலா<br />எனைத்து எனைத்து அது எப்புறத்தது எந்தை பாதம் எய்தவே</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">உடலில் உள்ள ஐந்து பொறிகளும், உயிர் பூரண சுதந்திரத்துடன் உலவ வேண்டிய உடலினை ஆக்ரமித்துக்கொள்வதும் அன்றி, உயிரினை இதைச் செய், அதைச் செய் என்று கட்டளையிட்டு, செயல்படுகின்றன. ஐந்து பொறிகளின் அனலினை ஒத்த கடுமையான பேச்சினால் தனது வலிமையை இழக்கும் உயிர், நிலை குலைந்து போகின்றது. இதனால் நான், ஆதியாகிய பெருமானை உணர்ந்து அறியும் அறிவு ஏதும் இன்றி, கூற்றுவன்போல் வருத்தும் பொறிகளின் வலையில் வீழ்ந்து துன்பம் அடைகின்றேன். கோவல் வீரட்டத்தில் உறையும் பெருமானே, நீர் தான் என்னை இந்த துன்பத்திலிருந்து விடுவிக்க வேண்டும்.</p>
Advertisement