31. ஊனுடுத்தி ஒன்பது வாசல் - பாடல் 9
தங்களது மனதினில் உள்ள பகைமை உணர்ச்சியினை அறவே நீக்கி, அன்போடு சிவபெருமானை தியானிக்கும் அடியார்களின் உள்ளத்தில் உள்ள, காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் ஆகிய நோய்களை நீக்குபவன் சிவபெருமான்
பாடல் 9
செற்றதோர் மனம் ஒழிந்து சிந்தை செய்து சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தை உள்ளால்
உற்றதோர் நோய் களைந்து இவ்வுலகம் எல்லாம் காட்டுவான் உத்தமன் தான் ஒதாததெல்லாம்
கற்றதோர் நூலினன் களிறு செற்றான் கழிப்பாலை மேய கபாலப்பனார்
மற்றிதோர் மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க்கு அவ்வழியே போதும் நாமே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">இவ்வுலகம் எல்லாம் = அனைத்து உலகங்கள் மற்றும் உலகத்தில் உள்ள பொருட்கள், தத்துவங்கள். செற்றதோர் மனம் = பகைமை உணர்ச்சி கொண்ட மனம். உற்றதோர் நோய் = மனதினில் உள்ள ஆறு வகையான குற்றங்கள், காமம், குரோதம், மோகம், உலோபம், மதம் மற்றும் மாற்சரியம் ஆகிய குணங்கள்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">தங்களது மனதினில் உள்ள பகைமை உணர்ச்சியினை அறவே நீக்கி, அன்போடு சிவபெருமானை தியானிக்கும் அடியார்களின் உள்ளத்தில் உள்ள, காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம் ஆகிய நோய்களை நீக்குபவன் சிவபெருமான்; மேலும் அத்தகைய அடியார்களை உலகம் போற்றும் உத்தமர்களாக மாற்றுவான்; அவன் தான் எதுவும் ஓதாமலே அனைத்து நூல்களையும் கற்றவனாக விளங்குகின்றான். அவன், யானை போன்று வலிமைகொண்டு நம்மை பல துன்பங்களிலும் ஆழ்த்தும் பாசங்களிலிருந்து இயல்பாகவே நீங்கியவன் ஆவான். கழிப்பாலைத் தலத்தில் உறைபவரும், கையினில் கபாலம் ஏந்தியவரும் ஆகிய பெருமான் நிலையில்லாத இந்த மாய உடலை விடுத்து முக்தி நெறி செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.</p>
Advertisement