31. ஊனுடுத்தி ஒன்பது வாசல் - பாடல் 10
இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் கபாலப்பனார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் காண்கின்றோம். கபாலத்தைக் கையில்
பாடல் 10
பொருது அலங்கல் நீள் முடியான் போர் அரக்கன் புட்பகன் தான்
பொருப்பின் மீது ஓடாதாக
இருநிலங்கள் நடுக்கெய்த எடுத்திடுதலும் ஏந்திழையாள் தான் வெருவ
இறைவன் நோக்கிக்
கரதலங்கள் கதிர்முடி ஆறஞ்சினோடு கால் விரலால்
ஊன்று கழிப்பாலையார்
வருதல் அங்கம் மாயக் குரம்பை நீங்க வழிவைத்தார்க்கு அவ்வழியே
போதும் நாமே
<strong><br />விளக்கம்</strong></p><p align="JUSTIFY">கரதலங்கள் = கைகள். ஆறஞ்சு = ஆறு மற்றும் ஐந்து, முப்பது, தலைகள் மற்றும் கைகள் எண்ணிக்கை மொத்தம் முப்பது. ஏந்திழை = சிறந்த அணிகலன்களை அணிந்த பார்வதி அன்னை.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">பல போர்களில் பங்கு கொண்டு வெற்றி மாலை சூடிய அரக்கன் இராவணன், தனது புட்பக விமானம் தொடர்ந்து செல்ல முடியாத வகையில், கயிலை மலை குறுக்கிட்டதைக் கண்டு கோபம் அடைந்தான்; நிலவுலகம் நடுங்குமாறு மிகுந்த ஆரவாரத்துடன் கயிலை மலையின் அருகே சென்று, அதனை பெயர்த்து எடுக்க அவன் முயற்சி செய்தபோது, சிறந்த அணிகலன்களை அணிந்தவளாகிய பார்வதி அன்னை அச்சம் கொண்டாள்; அன்னை அச்சம் அடைந்ததைக் கண்ட பெருமான், அரக்கனது பத்து தலைகளும் இருபது தோள்களும் வருந்துமாறு தனது கால் விரலை மலையில் ஊன்றினார். இத்தகைய வல்லமை பொருந்தியவராக விளங்குபவரும் கழிப்பாலை தலத்தில் உறைபவரும் ஆகிய பெருமான் மீண்டும் மீண்டும் பிறந்து மாயமான உடலில் நமது ஆன்மா புகும் தன்மையை விடுத்து, முக்தி நெறிக்கு செல்லும் வழியை நமக்கு அமைத்துக் கொடுத்துள்ளார், அந்த வழியே நாமும் சென்று நிலையான இன்பம் அடைவோமாக.</p><p align="JUSTIFY"><strong>முடிவுரை</strong></p><p align="JUSTIFY">இந்த பதிகத்தின் அனைத்துப் பாடல்களிலும் கபாலப்பனார் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவதை நாம் காண்கின்றோம். கபாலத்தைக் கையில் ஏந்தியவராக சிவபெருமானை எதற்காக அப்பர் பிரான் அனைத்துப் பாடல்களிலும் சித்தரிக்கின்றார் என்பதை நாம் ஒரு நிமிடம் யோசிக்கலாம். நமது உயிருடன் பிணைந்துள்ள மூன்று மலங்களையும் நாம் விடுத்து, அவற்றை பெருமான் வைத்திருக்கும் கபாலத்தில் இடவேண்டும் என்பதை உணர்த்தும் முகமாகவே, பிச்சைப் பெருமானாக இறைவன் இருக்கும் கோலம் நமக்கு நினைவூட்டப்படுகின்றது. நமது மலங்களைக் களைந்தால், நமக்கு மெய்பொருள் சிவபெருமான் தான் என்பது திண்ணமாக விளங்கும்; நமது வினைத்தொகைகள் கழியும், நமது ஆன்மா, தன்னைப் பிணித்துள்ள பிறப்பிறப்புச் சங்கிலியிலிருந்து விடுபட்டு, முக்தி நிலை அடையும். இந்த நிலையைத் தான், வழி என்று அனைத்துப் பாடல்களிலும் அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். அதனை உணர்ந்து, உலகப் பற்றுகளை அறவே துறந்து, யான் எனது என்ற தற்போதம் நீங்கி, எல்லாம் இறைவன் செயல் என்பதை உணர்ந்து செயல்பட்டால், நமக்கு மேல்வினைகள் இல்லாத நிலை ஏற்படும்; உள்ள வினைகளும் கழியும்; வினைகள் கழிந்த பின்னர் வீடுபேற்றினை அடையலாம். இந்த நிலையினை நமக்கு அருளவே, அவரது கபாலத்தில் நாம் எப்போது நமது மலங்களை பிச்சையாக இட்டு, மலங்களிளிருந்து விடுதலை பெற்று உய்வினை அடைவோம் என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் தன்மை, கபாலப்பனார் என்ற சொல் மூலம் உணர்த்தப்படுகின்றது.</p>
Advertisement