19. ஆர்த்தான்காண் அழல்நாகம் - பாடல் 4
அனைத்து உயிர்களுக்கும் மூத்தவனாக இருப்பவனும், திருமால் பிரமன் உருத்திரன் ஆகிய மூவருக்கும் முதலாக இருப்பவனும், உலகத் தோற்றத்திற்கு
பாடல் 4
மூவன் காண் மூவர்க்கும் முதலானான் காண் முன்னுமாய்
பின்னுமாய் முடிவானான் காண்
காவன் காண் உலகுக்கோர் கண் ஆனான் காண் கங்காளன் காண்
கயிலை மலையினான் காண்
ஆவன் காண் ஆனகத்து அஞ்சு ஆடினான் காண் ஆரழலாய் அயற்கு
அரிக்கும் அறியவொண்ணா
தேவன் காண் திருமுண்டீச்சரத்து மேய சிவலோகன் காண் அவன்
என் சிந்தையானே
</p><p align="JUSTIFY"><strong>விளக்கம்</strong></p><p align="JUSTIFY">மூவன் = மூத்தவன். அனைத்து உயிர்களுக்கும் மூத்தவனாக ஆதியாக இருக்கும் நிலை உணர்த்தப்படுகின்றது. காவன் = காப்பவன், கா என்றால் காப்பாற்று என்று பொருள். அந்த வினைச் சொல்லில் இருந்த பிறந்த பெயர்ச்சொல். ஆவன் = ஆக்கம் தருபவன். கங்காளன் என்பதற்கு எலும்பு மாலை அணிந்தவன் என்றும் பொருள் கூறுவார்கள்.</p><p align="JUSTIFY"><strong>பொழிப்புரை</strong></p><p align="JUSTIFY">அனைத்து உயிர்களுக்கும் மூத்தவனாக இருப்பவனும், திருமால் பிரமன் உருத்திரன் ஆகிய மூவருக்கும் முதலாக இருப்பவனும், உலகத் தோற்றத்திற்கு முன்னவனும், உலக ஒடுக்கத்திற்கு பின்னர் இருப்பவனும், அனைத்து உயிர்களும் சென்று அடைய விரும்பும் முடிவான வீடுபேறாக இருப்பவனும், அனைத்து உயிர்களையும் மற்றும் உலகத்திலுள்ள அனைத்துப் பொருட்களையும் காப்பவனும், உலகுக்கும் உலகப் பொருட்களுக்கும் கண் போன்று இன்றியமையாதவனும், முற்றூழி காலத்தில் இறந்துபட்ட பிரமன் திருமாலின் உயிரற்ற உடல்களைச் சுமந்து கங்காள வேடத்துடன் காட்சி அளிப்பவனும், கயிலை மலையாக இருப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் ஆக்கமும் ஊக்கமும் தருபவனும், பசுவிடமிருந்து பெறப்படும் ஐந்து பொருட்களைக் கொண்டு விருப்பமுடன் நீராடுபவனும், பிரமனும் திருமாலும் அடிமுடி அறிய முடியாதவாறு நீண்ட அழலாக நின்ற தேவனும் ஆகியவன் சிவபெருமான். இத்தகைய பெருமைகளை உடைய இறைவன், திருமுண்டீச்சரம் தலத்தில் சிவலோக நாயகனாக காட்சி தருகின்றான். அவன் தான் எனது சிந்தையில் கலந்து இருக்கின்றான்.</p><p align="JUSTIFY"> </p>
Advertisement