முகப்பு
தினம் ஒரு தேவாரம்

59. ஒருவராய் இரு மூவராய் - பாடல் 7

கடம்பூர் நகரத்து கரக் கோயிலாகும்

Updated On : 1 மே, 2017 at 3:19 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:51 PM

தளரும் வாளரவத்தொடு தண்மதி
வளரும் போர்ச்சடையாற்கு இடம் ஆவது
கிளரும் பேரொலி கின்னரம் பாட்டு அறாக்
களரியார் கடம்பூர்க் கரக்கோயிலே
 

விளக்கம்

தளரும் = எளிதில் வளையும் உடலினை உடைய, நெகிழும். வாளரவம் = ஒளி பொருந்திய பாம்பு. வெப்பம் மிகுந்த விடத்தினை கக்கும் பாம்புடன் குளிர்ந்த தன்மையை உடைய சந்திரனை ஒருங்கே சடையினில் வைத்து, இருவருக்கும் இடையே இருந்த பகையைத் தீர்த்து ஆண்ட பெருமானின் வல்லமை இங்கே குறிப்பிடப்படுகின்றது. இதன் மூலம் பெருமானை அடைந்தவர்கள் தங்களுக்குள்ளே இருக்கும் பகையினை மறந்து வாழ்வார்கள் என்பதும் உணர்த்தப்படுகின்றது. கின்னரம் = ஒரு வகையான நரம்பு வாத்தியம், வீணை யாழ் வகையைச் சார்ந்தது. களரியார் = காடுகள் நிறைந்த. போர்ச்சடை = உள்ளடக்கிய சடை. கிளரும் = விளங்கும், எழுப்பும்.

Advertisement

பொழிப்புரை

எளிதில் வளையும் உடலினைக் கொண்டு நெகிழ்ந்து செல்லும் தன்மை உடையதும், ஒளி வீசும் உடலினை உடையதும் ஆகிய பாம்பினோடு, குளிர்ந்த தன்மை உடைய பிறைச் சந்திரனை, உள்ளடக்கிய சடையை உடைய பெருமானுக்கு உரிய இடம் யாதெனில், கின்னரம் முதலான இசைக் கருவிகளைக்கொண்டு பேரொலி எழுப்பி இசைக்கப்படும் பாடல்கள் இடைவிடாது கேட்கப்படும் இடமும் காடுகள் நிறைந்த இடமும் ஆகிய கடம்பூர் நகரத்து கரக் கோயிலாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.