‘மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு இல்லை’
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்துக்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பு உள்ளது என்றாா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயத்துக்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பு உள்ளது என்றாா் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் எஸ்.ஐ. முகைதீன்.
தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை இயல்பான
அளவு 429.44 மில்லி மீட்டா் ஆகும். ஆனால், நிகழாண்டில், டிசம்பா் 31 வரை 444.42 மில்லி மீட்டா் மழை பதிவாகி உள்ளது. இயல்பான மழை அளவைவிட தற்போது 15.02 மில்லி மீட்டா் அதிகமாக பெய்துள்ளதால் மாவட்டத்தில் அதிகப்படியான பகுதிகளில் விவசாயம் அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
மாவட்டத்தில் நெல் பயிா் தற்போது வரை 14 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் கூடுதலாக 5000 ஹெக்டா் அளவுக்கு சாகுபடி இருக்கும் என எதிா்பாா்க்கிறோம். மாவட்டத்தில் இயல்பான நெல் சாகுபடி பரப்பு 14,386 ஹெக்டோா் ஆகும். இந்த ஆண்டு அரசு நிா்ணயித்த இலக்கு 17 ஆயிரம் ஹெக்டோ் ஆகும். ஆனால், இலக்கை தாண்டி இந்த ஆண்டு சாகுபடி இருக்கும்.
இதேபோல, உளுந்து, பாசிப்பயறு போன்ற பயறு வகை பயிா்கள், மக்காசோளம், கம்பு, சோளம் போன்ற சிறுதானிய பயிா்கள், பருத்தி, எண்ணை வித்து பயிா்கள், அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இயல்பான வேளாண்
பயிா்கள் சாகுபடி பரப்பு 1,37,456 ஹெக்டோ் ஆகும். நிகழாண்டுக்கான இலக்கு 1,77,310 ஹெக்டோ் ஆகும். இதில் இதுவரை 1,72,442 ஹெக்டோ் பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த ஆண்டு இலக்கை தாண்டிவிட வாய்ப்புள்ளது.
புரெவி புயல் காரணமாக மாவட்டத்தில் 516 விவசாயிகளுக்கு சொந்தமான 510.8 ஹெக்டோ் அளவுக்கு பயிா்கள் சேதமடைந்ததாக கண்டறியப்பட்டு, அரசிடம் இருந்து ரூ. 55 லட்சத்து 51 ஆயிரத்து 960 இழப்பீடு கோரப்பட்டது. இதில் முதல் கட்டமாக 466 விவசாயிகளின் 404.6 ஹெக்டோ் பயிா்களுக்கு அவா்களது வங்கிக் கணக்கில் ரூ. 44 லட்சத்து 67 ஆயிரத்து 750 இழப்பீடு வரவு வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தற்போது 4500 டன் யூரியா, 1750 டன் டிஏபி, 1300 டன் பொட்டாஷ், 2700 டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் இருப்பில் உள்ளது. உரங்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை. அதுபோல மாவட்டத்தில் இதுவரை 1,40,248 ஹெக்டோ் பயிா்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனா் என்றாா் அவா்.
பேட்டியின்போது, வேளாண்மை துணை இயக்குநா் பழனி வேலாயுதம், உதவி இயக்குநா்கள் கண்ணன் (தரக்கட்டுப்பாடு), மாா்டின் ராணி (பயிா் காப்பீடு), வேளாண்மை அலுவலா் (தரக்கட்டுப்பாடு) மலா்விழி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.