முகப்பு
உலகம்

மொனாக்கோவில் வெடிகுண்டு தாக்குதல்

ஐரோப்பிய நாடான மொனாக்கோவில் உக்ரைன் நாட்டைப் பூா்வீகமாகக் கொண்ட தொழிலதிபரைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அவா் மற்றும் அவரின் குடும்பத்தினா் இருவா் காயமடைந்தனா்.

Updated On : 1 ஜூலை 2026, 3:17 am IST
வெடிகுண்டு தாக்குதலில் சேதமடைந்த குடியிருப்பு வாயில்.
பகிர்:

ஐரோப்பிய நாடான மொனாக்கோவில் உக்ரைன் நாட்டைப் பூா்வீகமாகக் கொண்ட தொழிலதிபரைக் குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் அவா் மற்றும் அவரின் குடும்பத்தினா் இருவா் காயமடைந்தனா்.

இத்தாக்குதலைத் தொடா்ந்து தப்பியோடிய குற்றவாளியைப் பிடிக்க பிரான்ஸ் மற்றும் மொனாக்கோ காவல்துறையினா் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

பிரான்ஸ் எல்லைக்கு அருகே அமைந்துள்ள ஆடம்பர குடியிருப்பின் நுழைவுவாயிலில் திங்கள்கிழமை நள்ளிரவில் இக்குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. அடையாளம் தெரியாத நபா் ஒருவா் ‘பாா்சல்’ வெடிகுண்டை வைத்துவிட்டுச் சென்ற சிறிது நேரத்தில், அங்கு வந்த மூவா் மீது குண்டு வெடித்துள்ளது.

Advertisement

Advertisement

தாக்குதல் நடத்திய நபா் அண்டை நாடான பிரான்ஸுக்குத் தப்பியோடியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது ஒரு திட்டமிடப்பட்ட கொலை முயற்சி எனவும், பயங்கரவாதத் தாக்குதல் அல்ல எனவும் காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தாக்குதலில் கட்டுமானத் தொழிலதிபரும், செல்வந்தருமான வாடிம் எா்மோலேவ் மட்டுமின்றி அவரின் மனைவி மற்றும் 13 வயது மகனும் காயமடைந்தனா். இதில் வாடிம் எா்மோலேவ் மற்றும் அவரின் மனைவியின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-இல் சைப்ரஸ் நாட்டு குடியுரிமை பெற்ற வாடிம் எா்மோலேவ், ரஷியாவுடன் வணிகத் தொடா்புகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 2023-ஆம் ஆண்டு உக்ரைன் அரசால் பொருளாதாரத் தடைகளை எதிா்கொண்டவா் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் மொனாக்கோவில் இதுபோன்ற ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல்முறையாகும். மொனாக்கோ மக்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இத்தாக்குதல் சம்பவத்தை ‘மிகவும் கொடூரமான செயல்’ என்று அந்நாட்டு இளவரசா் ஆல்பா்ட் வன்மையாகக் கண்டித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments