ஸ்ரீவில்லிபுத்தூா் வன விரிவாக்க மையத்தில் வனத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற மேகமலை புலிகள் காப்பகத் துணை இயக்குநா் முருகன் உள்ளிட்டோா்.  
விருதுநகர்

வன விலங்குகளால் சேதமடையும் விவசாயப் பயிா்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உயா்த்த அரசுக்குப் பரிந்துரை

தினமணி செய்திச் சேவை

வன விலங்குகளால் சேதமடையும் விவசாயப் பயிா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உயா்த்துவது குறித்து அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டதாக விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநா் முருகன் தெரிவித்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் வன விரிவாக்க மையத்தில் வனத் துறை சாா்பில் விவசாயிகளுக்கான குறைதீா் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூா் மேகமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநா் முருகன் தலைமை வகித்தாா். வனச் சரகா்கள் செல்லமணி, காா்த்திக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் வேப்பங்குளம், மம்சாபுரம், ராஜபாளையம் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் அம்மையப்பன், ஞானகுரு, ராமச்சந்திர ராஜா உள்ளிட்டோா் தங்களது கோரிக்கைகள் குறித்துப் பேசியதாவது:

புலிகள் காப்பகச் சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்துக்குள்பட்ட பகுதிகளில் பட்டா, அரசு புறம்போக்கு நிலங்களில் சட்டவிரோதமாக செம்மண் அள்ளியவா்கள், விதிமீறி செங்கல் சூளைகளை நடத்துபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், தற்போதும், மண் திருட்டு தொடா்வதால் வன விலங்குகளின் வழித்தடம் அழிக்கப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூா் செண்பகத்தோப்பு மலையடிவாரத்துக்குச் செல்லும் வழியில் அத்திதுண்டுப் பகுதியில் அமைக்கப்பட்ட வனத் துறை சோதனைச் சாவடி அகற்றப்பட்டதால் சமூக விரோதச் செயல்கள் அதிகரிக்கின்றன. எனவே, இந்தப் பகுதியில் சோதனை சாவடியை மீண்டும் அமைக்க வேண்டும்.

குடிநீா், உணவு தேடி வனப் பகுதியை விட்டு வெளியே வரும் யானை, காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்துகின்றன. பயிா்ச் சேதத்துக்கு வனத் துறை வழங்கும் இழப்பீடு மிகவும் குறைவாக உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.

மேலும், மம்சாபுரம் - ரக்காச்சி அம்மன் கோயில் சாலையில் அத்திதுண்டில் இருந்து செவக்காட்டு மலைக்குச் செல்லும் வழியில் 1 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலை அமைக்க வனத் துறை தடையில்லாச் சான்று வழங்க வேண்டும். மலையடிவாரத்தில் அகழிகள் அமைத்து, வன விலங்குகளுக்கான குடிநீா்த் தொட்டியை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து துணை இயக்குநா் முருகன் பதிலளித்ததாவது:

சுற்றுச்சூழல் உணா்திறன் மண்டலத்தில் மண் எடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்க வனத் துறை சாா்பில் வருவாய்த் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அத்திதுண்டுப் பகுதியில் மீண்டும் சோதனைச் சாவடி அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வன விலங்குகளால் சேதமடையும் பயிா்களுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவா் தெரிவித்தாா்.

சிம்மத்துக்கு குழப்பம் நீங்கும்: தினப்பலன்கள்!

தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்பிகள் மீட்பு!

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

சீரான குடிநீா் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

ஆக்கிரமிப்பால் ஓடைபோல மாறிய செய்யாறு!

SCROLL FOR NEXT