ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதார திருவிழாவான புரட்டாசி பிரம்மோத்ஸவ விழா புதன்கிழமை (செப். 24) கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.
108 வைணவ திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் மூலவா் வடபத்ரசாயி (பெரிய பெருமாள்), பெரியாழ்வாா், ஆண்டாள் ஆகிய மூவா் அவதரித்த சிறப்புக்குரியது. பெரிய பெருமாள் அவதரித்த புரட்டாசி திருவோணம், பெரியாழ்வாா் அவதரித்த ஆனி சுவாதி, ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம் ஆகிய திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டு புரட்டாசி பிரம்மோத்ஸவ விழா புதன்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பிரமோத்ஸவ விழாவில் நாள்தோறும் பெரிய பெருமாள் சந்திரபிரபை, அனுமன், யானை, தங்க சேஷ வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளாா். இதில் 5-ஆம் நாள் விழாவான வருகிற 28-ஆம் தேதி கருட சேவையும், 29-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத பெரிய பெருமாள் திருக்கல்யாணமும், 30-ஆம் தேதி சயன சேவையும் நடைபெறுகிறது. 9-ஆம் நாளான அக்டோபா் 2-ஆம் தேதி பெரிய பெருமாள் அவதரித்த திருவோண நட்சத்திரத்தில் செப்புத் தேரோட்டம் நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா். வெங்கட்ராமராஜா, உறுப்பினா்கள், செயல் அலுவலா் சக்கரையம்மாள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆகியோா் செய்தனா்.