முகப்பு
தினமணி கதிர்

ஆலயம்: அனைத்து மக்கள் சகாய மாதா

'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' சென்னை தாம்பரம் வேளச்சேரி நெடுஞ்சாலையிலுள்ள மேடவாக்கத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசித்த போதிலும் அவர்களுக்கென தனி ஆலயம் ஒன்று அமையவில்லை. அருகிலுள்ள மகாலட்சுமி நகரில்

Updated On : 20 செப்டம்பர் 2012, 4:42 pm IST
பகிர்:

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று'

சென்னை தாம்பரம் } வேளச்சேரி நெடுஞ்சாலையிலுள்ள மேடவாக்கத்தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசித்த போதிலும் அவர்களுக்கென தனி ஆலயம் ஒன்று அமையவில்லை.  அருகிலுள்ள மகாலட்சுமி நகரில் இருந்த ஆலயத்துக்குச் சென்று வழிபட்டு வந்தனர்.  சமயங்களில் அருள்தந்தையர்கள் பக்தர்களின் வீடுகளுக்குச் சென்று பிரார்த்தனையும் திருப்பலியும் நிறைவேற்றி வந்தனர்.

மேடவாக்கம் இறைமக்களின் ஒத்துழைப்போடு 1996}ம் ஆண்டு அங்கு ஒரு குடிசைக்கோவில் உருவானது.  புனித சகாய அன்னை அக் குடிசைக்கோவிலில்  குடிகொண்டாள்.  அதுமுதல் ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் அக்கோவிலில் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.  முதன் முதலாக 1996}ம் ஆண்டு அக்டோபர் 2}ம் நாள் அன்னைக்கு திருவிழா எடுக்கப்பட்டு மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Advertisement

Advertisement

1999}ம் ஆண்டு ஆலயத்தின் முன்புறத்தில் மதில் சுவரும் கொடிக்கம்ப மேடையும் கட்டப்பட்டு கொடிக்கம்பம் நடப்பட்டது.  2003}ம் ஆண்டு வரை ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்தும் பூச்செடிகள் வளர்த்தும் ஆலய வளாகத்தை அழகுபடுத்தும் செயல்பாடுகள் தொடர்ந்தன.

அருட்தந்தை அலெக்சிஸ் மனோகரின் அயராத உழைப்பினாலும் பங்குத்தந்தை ஜார்ஜ் அடிகளாரின் மேலான ஆலோசனையினாலும் மேடவாக்கம் இறைமக்களின் நிதி உதவியோடும் மற்றும் மகாலட்சுமி நகர் இறைமக்களின் உதவியோடும் குடிசைக் கோவில் அகற்றப்பட்டு அன்னைக்கு தற்போது உள்ள ஆலயம் எழுப்பப்பட்டது.  2003}ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19}ம் நாள் மேதகு ஆயர் நீதிநாதன் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டு புதிய ஆலயம் திறக்கப்பட்டது.

புதிய ஆலயம் திறக்கப்பட்டு 5 நாட்களிலேயே சகாய அன்னையின் கருணை மேடவாக்கத்தில் ஒரு இந்து சிறுமிக்கு வெளிப்படுத்தப்பட்டது. அச்சிறுமிக்கு தொடர்காய்ச்சலால் சிகிச்சை பலனளிக்காமல் சென்னையின் பிரசித்தி பெற்ற மருத்துவமனை ஒன்றில் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்பட்டன.  என்ன காய்ச்சல் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.  அச் சிறுமியின் மரணத்துக்கு நாளும் குறிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிறுமியின் தாய் மேடவாக்கம் புனித சகாய அன்னையிடம் வந்து கண்ணீரோடு மன்றாடினார்.  அன்னையின் அருளால் சிறுமி பூரண குணமடைந்தாள்.   அது முதல் கிறிஸ்தவர்களும் பிற சமயத்தாரும் மாதாவின் அருளை அனுபவிக்க ஆரம்பித்தனர்.  இதனால் இந்த ஆலயம் அனைத்து மக்களின் சகாய அன்னை ஆலயமாகக் கருதப்பட்டு புகழ் பெற ஆரம்பித்தது.

ஆலயத்தின் பக்த சபைகள் புதுப்பொலிவுடன் இயங்க ஆரம்பித்தன.  மரியாயின் சேனையின் செயல்பாடுகள் மிக வேகமாக வளர்ந்து ஏழை மக்களுக்கு உதவிகள் பல புரிந்து சிறப்புடன் செயல்படத் தொடங்கியது.  புனித வின்சென்ட தெ பவுல் சபை புதுப்பிக்கபெற்று பிறரன்புச் செயல்கள் புதுவேகத்துடன் வளர்ந்து வருகின்றன.  இளைஞர் குழு, வழிபாட்டுக்குழு, நிதிக்குழு, பாடற்குழு, பங்குப் பேரவை, அன்பியங்கள் விரிவாக்கம் பெற்றன.

ஆலயத்துக்கான மணிக்கூண்டு உச்சியில் எல்லோரையும் இருகரம் விரித்து தன்பால் அழைக்கும் இறை இயேசுவின் அழகு மிளிரும் திருவுருவச் சிலையுடன் சிறப்புடன் அமைக்கப்பட்டது.

அருள்தந்தையின் பெருமுயற்சியால் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றும் ஆலயத்துக்கு அருகே அமைக்கப்பட்டு கல்வியோடு குழந்தைகளுக்கு நல்லொழுக்கமும் சிறப்புப் பாடமாக கற்பிக்கப்பட்டு வருகிறது.

மேடவாக்கம் பஞ்சாயத்து தலைவரின் நல்லிணக்கத்தோடும் ஒத்துழைப்போடும் வேளச்சேரி} தாம்பரம் பிரதான சாலையில் ஆலய நுழைவு வாயில் வளைவு அழகுற அமைக்கப்பட்டு 2008}ம் ஆண்டு மே 30}ம் நாள் செங்கல்பட்டு ஆயரால் அர்ச்சிக்கப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது.

ஒவ்வொரு மாதமும் 24}ம் நாள் மாலை 6}30 மணிக்கு அன்னையின் சிறப்புத் தேர்ப்பவனியும், சிறப்புத் திருப்பலியும் இங்கு நடைபெறுவது வழக்கம்.  விழா நாட்களில் சிறப்புத் தியானங்கள் வழிநடத்தப்படுகின்றன.

தாம்பரம்}வேளச்சேரி பிரதான சாலையில் செல்லும் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும், பேருந்துகள், சிற்றுந்துகளில் பயணிப்போர் இந்த ஆலய நுழைவு வாயிலைக் கண்டு வணங்கிச் செல்வது இந்த ஆலயத்தின் புகழுக்குப் பெருமை சேர்க்கின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.