பயிற்சி: பேசப் பழகுங்கள்!
சாமான்ய மக்களின் ரசனையைக் கவரும் வகையில் 310-வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது அந்த நிகழ்ச்சி. எந்த தொலைக்காட்சியில்? எந்த நேரத்தில்? யார் நடித்திருக்கிறார்கள் அந்தத் தொடரில்? என்று ஆர்வத்தோடு
சாமான்ய மக்களின் ரசனையைக் கவரும் வகையில் 310-வது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது அந்த நிகழ்ச்சி. எந்த தொலைக்காட்சியில்? எந்த நேரத்தில்? யார் நடித்திருக்கிறார்கள் அந்தத் தொடரில்? என்று ஆர்வத்தோடு கேட்கும் அளவுக்கு இது எந்தத் தொலைக்காட்சியிலும் வெளிவந்து கொண்டிருக்கும் மெகாத் தொடர் அல்ல, திரு.வி.க பேச்சுப் பயிலரங்கத்தின் 310-வது வார நிகழ்ச்சியைப் பற்றிதான் நாம் குறிப்பிடுகிறோம்.
சென்னை, ஷெனாய் நகரிலிருக்கும் திரு.வி.க பூங்காவில் ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 7 மணிக்கு துவங்கும் இந்தப் பேச்சரங்கத்தில் எவர் வேண்டுமானாலும் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பாக மாணவர்கள் தங்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான மேடையாக கடந்த ஆறு வருடங்களாகச் செயல்பட்டு வருகின்றது இந்தப் பேச்சரங்கம். இதைத் தொடங்கியவர் தாமோதரன். தொழிலாளர் சேம நிதி அலுவலகத்தில் பணியிலிருப்பவர். இந்தப் பேச்சரங்கத்திற்கு ஆதரவு அளித்துவருபவர் வருமான வரித்துறை உதவி ஆணையரான நந்தகுமார்.
""தொடக்கத்தில் ஷெனாய் நகரில் மட்டுமே செயல்பட்டு வந்த இந்த அமைப்பிற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், தியாகராய நகர், நடேசன் பூங்காவில் ஞாயிறு காலை 7 மணிக்கும், மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் வெள்ளிக்கிழமை தோறும் மாலை 6 மணிக்கும் நடத்தத் தொடங்கினோம்'' என்றார் நந்தகுமார்.
ஆறாம் வகுப்பு படிக்கும் ராஜகுமாரியும் மூன்றாம் வகுப்பு படிக்கும் இளவரசியும் திருக்குறளின் 133 அதிகாரங்களின் பெயர்களையும் மனப்பாடமாகச் சொன்னார்கள். 400 குறள்களை அதன் பொருளோடு சொல்வதற்கு இவர்கள் பயிற்சி பெற்றிருக்கின்றனராம்!
சாய் ராகவேஷ் சிறுவன் இங்கிலாந்தில் முதன் முதலாக தொடங்கிய கிரிக்கெட் விளையாட்டு உலகின் மற்ற நாடுகளுக்கு எப்படியெல்லாம் பரவியது என்பதை சுவையாகச் சொன்னான்.
மிகவும் படித்தவர்களிடமிருந்து சாதனையாளர்களிடமிருந்துதான் நமக்கு பயன்படும் சொற்பொழிவு கிடைக்கும் என்றில்லை, சாதாரணமானவர்களிடமிருந்தும் நமக்கு ஏராளமான செய்திகள் கிடைக்கும் என்பதை நிரூபித்தது அந்த இரண்டு மணி நேர நிகழ்ச்சி.
"தவறுகளிலிருந்து தன்னைத் திருத்திக் கொள்வதன் மூலமே ஒருவன் சாதனையாளன் ஆகிறான்..' இப்படியொரு எஸ்.எம்.எஸ். எனக்கு வந்தது. தவறுக்கு மேல் தவறைச் செய்து கொண்டிருப்பவர்களே வாழ்க்கையில் உயர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அதுவரையில் நான் நினைத்திருந்தேன். ஆனால் தவறு செய்யாமல் தன்னைத் திருத்திக் கொண்டிருப்பவர்கள்தான் உண்மையில் சாதனையாளர்களாக ஆகிறார்கள்'' என்றார் ஓர் இளைஞர்.
""நண்பர்களிடம், அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம், குடும்பத்தினரிடம்... இப்படி பல இடங்களிலும் நாம் மற்றவர்களுடன் உரையாட வேண்டியிருக்கின்றது. சரியான முறையில் உரையாடாததே பல இடங்களில் பிரச்னைகள் வருவதற்குக் காரணமாகின்றது. அப்படிப்பட்ட பிரச்னைகள் நமக்கு வராமல் இருப்பதற்கு இந்தப் பேச்சுப் பயிலரங்கம் உதவுகின்றது. மேடை தயக்கம், கூச்சத்தைப் போக்குகிறது. வாழ்க்கை அனுபவங்களைப் பிறருடன் பகிர்ந்து கொள்வதற்கு இந்தப் பேச்சரங்கம் ஒரு பாலமாகச் செயல்படுகின்றது'' என்றார் தாமோதரன்.
""நான் ஆறாவது வகுப்பிற்குப் பிறகு பள்ளிக்குச் செல்லமுடியாத நிலை. அதன்பிறகு மெக்கானிக் ஷெட் உட்பட பல இடங்களிலும் வேலை பார்த்து, பிரைவேட்டாகவே பத்தாவது, பன்னிரண்டாம் வகுப்பு படித்துத் தேறினேன். தொடர்ந்து ஐ.ஆர்.எஸ். தேர்விலும் வெற்றிபெற்றவனாகத் திகழ்கிறேன். ஸ்கூல் டிராப்-அவுட்டான என்னாலேயே இந்த அளவுக்கு முன்னேற முடியும்போது, உங்களாலும் என்னை விடச் சிறந்த நிலைக்கு நிச்சயமாக வரமுடியும். அதற்குத் தேவை உழைப்பும், முயற்சியும்தான். இப்படி என்னுடைய வாழ்க்கைச் சம்பவத்திலிருந்தே படிக்கும் மாணவர்களுக்கு அறிவுறுத்துவதற்கே இந்தப் பேச்சுப் பயிலரங்கத்தைப் பயன்படுத்தி வருகின்றேன். இந்த அணுகுமுறை அந்தப் பயிலரங்கத்திற்கு வருபவர்களின் மூலம் பல இடங்களில் இருப்பவர்களுக்கும் சென்றடைகிறது. நாம் முன்னேறுவோம்... நம்மைச் சேர்ந்தவர்களையும் முன்னேற்றுவோம் என்பதுதான் எங்கள் பேச்சரங்கத்தின் குறிக்கோள்'' என்றார் நந்தகுமார்.
படங்கள்: ஏ.எஸ்.கணேஷ்