முகப்பு
தினமணி கதிர்

சேவை: இன்டெர் நெட் இனிதரும் ப்ளட்!

இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு சில பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைவிட அதிகமாக மக்கள் மத்தியில் இருக்கிறதென்றாலும், தேவையென்னவோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.   இந்தச் சூழலில்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 8:01 PM
பகிர்:
Updated On : 25 டிசம்பர், 2023 at 7:33 PM

ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு சில பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைவிட அதிகமாக மக்கள் மத்தியில் இருக்கிறதென்றாலும், தேவையென்னவோ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

  இந்தச் சூழலில்தான் ரத்தம் தேவைப்படுவோர் நேரடியாக இணைய தளத்துக்குள் சென்று, ரத்தம் தானம் செய்யத் தயாராக உள்ளோரின் பட்டியலில் அவர்களின் தொடர்பு எண்களைக் கொண்டு நேரடியாக பயனாளியும், கொடையாளியும் "எந்தத் தரகரும்' இன்றி சந்திக்க ஓர் ஏற்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.

  இதைச் செய்தவர்கள் திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள். இணையதளத்தின் முகவரி: www.savepeoplelife.org

Advertisement

  2009, ஜனவரி 26-ம் தேதி இந்தியக் குடியரசு நாளில் தொடங்கப்பட்ட இந்த இணையதளத்தில் இப்போது மாநிலம் முழுவதும் இருந்து எல்லா தரப்பு ரத்த வகையையும் கொண்ட 300-க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர்.

  20-க்கும் மேற்பட்ட நண்பர்களின் ஒருங்கிணைப்புடன் இந்த இணையதளத்தைத் தொடங்கியிருக்கும் மாணவர் அப்துல் குத்தூஸிடம் பேசியதிலிருந்து...

  எப்படி இந்த ஆர்வம் வந்தது?

  "வாரணம் ஆயிரம்' படத்துக்கு நண்பர்களுடன் சென்றபோது ஒருவருக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. அப்போது அவருக்கு ரத்தம் தேவைப்பட்டபோது, ரத்த தானத்தின் அவசியம் குறித்து அறிந்தோம். அதன்பின்னர்தான் 2009, ஜனவரி 26-ம் தேதி இந்த இணைய தளம் தொடங்கப்பட்டது.

  கொடையாளர்களை எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?

  ஆரம்பத்தில் 2,000 விண்ணப்பப் படிவங்களை அச்சிட்டு நண்பர்கள் மத்தியில் விநியோகம் செய்தோம். அவற்றில் நிரப்பப்பட்டு திரும்பி வந்த விண்ணப்பங்களைக் கொண்டு, அதாவது 200 பேரின் விவரங்களுடன் இணையதளம் தொடங்கப்பட்டது. இப்போது ஏறத்தாழ 500 பேர் இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

  இணையதளத்துக்குள் செல்லும் யாரும் விருப்பமிருப்பின் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். ரத்தம் தேவையிருப்போர் எங்களின் இணையதளத்துக்குள் சென்று கொடையாளர்களின் முகவரியையும், தொலைபேசி- செல்பேசி எண்களையும் எடுத்துக் கொண்டு நேரடியாக கொடையாளர்களை அழைத்து ரத்தம் பெற்றுக் கொள்ளலாம். யாருக்கும், எந்த இடத்திலும்- தெரியாமல்கூட பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

  இணையதளம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தால்தானே இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்? என்ன செய்யப் போகிறீர்கள்?

  உண்மைதான். இணைய தளத்தின் பெயர் அச்சிட்ட சிறிய விளம்பர ஸ்டிக்கர்களை தயாரித்து பேருந்துகளிலும், திரையரங்குகளிலும், பேருந்து- ரயில் நிலையங்களிலும், பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் ஒட்டவிருக்கிறோம்.

  அடுத்த திட்டம் எதாவது?

  ஆமாம், கண்டிப்பாக. ரத்த தானம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கும்போதே எனது உறவினர்கள் உடல் உறுப்புகள் தானம் குறித்தும் செய்ய வற்புறுத்துகின்றனர். இதில் அரசு அனுமதி நடவடிக்கைகள் அதிகம் இருப்பதால், பிற்காலத்தில் அவசியம் உடல் உறுப்புகள் தானம் செய்வது குறித்த இணையதளத்தையும் தொடங்கவுள்ளோம்.

  இணையதளத்தில் வேறென்ன இருக்கிறது?

  ரத்த தானம் செய்வோரின் விவரங்கள் மட்டும் இதில் குறிப்பிடவில்லை. ரத்த தானம் செய்வது குறித்து மக்கள் மத்தியில் இருக்கும் தவறான கருத்துகளையும், உண்மையான விவரங்களையும் இதில் பதிவு செய்திருக்கிறோம். ரத்தத்தின் தேவை குறித்தும் இதில் விவரித்திருக்கிறோம்.

  எந்த ஊரில் இருப்போரும் ரத்ததானம் குறித்து பதிவும் செய்துகொள்ளலாம்; எந்த ஊரில் இருந்தும் ரத்தக் கொடையாளர்களை அறிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

  இணையதளத்துக்குள் செல்ல ஆகும் பிரவுசிங் செலவு மட்டும்தான். கட்டணம், கவனிப்பு, செலவுகள் எதுவுமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.