முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக எடையைக் குறைக்கலாம்!

பொதுவாக, உணவு புஷ்டியாக எப்போதும் குறைவின்றிக் கிடைத்தல், உடலுழைப்புச் சிறிதும் இல்லாத வாழ்க்கை முறை, பிறரை வாயால் அதிகாரம் செலுத்தி வேலை வாங்கி தன் பணியை

Updated On : 9 நவம்பர், 2013 at 12:48 PM
பகிர்:

எனக்கு வயது 25. வரும் தை மாதம் திருமணம் நடைபெற உள்ளது. மென்மையற்ற குட்டையான தலைமுடி, 5 அடி 4 அங்குல உயரம் உள்ள எனது உடல் எடை 78 கிலோ. என் குட்டை முடி நீளமாக ஆக  வேண்டும். உடல் எடை குறைய வேண்டும். திருமண நாள் நெருங்குவதால் என் பிரச்னைகளை ஆயுர்வேத மருத்துவர் மூலம் விரைவில் சரி செய்து திருமணத்தில் நான் அழகாகக் காட்சி தர வழிகள் உள்ளனவா?

ஒரு வாசகி, சென்னை.

உடல் ஏன் பருக்கிறது? சரகர் எனும் ஆயுர்வேத முனிவர் இதற்கான காரணப் பட்டியலை வெளியிடுகிறார்.

Advertisement

1. அதிஸ்தெüல்யமதிஸம்பூரணாத் - நிறைய உண்பது

2. குரு - மதுர - சீத- ஸ்நிக்த உபயோகாத்- உணவில் எளிதில் ஜீரணமாகாத கடினமான தன்மை உள்ளவை, இனிப்பானவை, குளிர்ச்சி தருபவை, நெய்ப்பு மிக்கவை இவற்றையே அதிகமாக அமைத்துக் கொள்வது.

3. அவ்யாயாமாத் - உடற்பயிற்சியின்மை

4.அவ்யாவாயாத் - உடலுறவின்மை

5. திவாஸ்வப்னாத் - பகல் தூக்கம்

6. ஹர்ஷநித்யத்வாத் - எப்போதும் தெளிந்த மனத்துடன் இருத்தல்

7. அசிந்தனாத் - கவலையோ, உணர்ச்சிக் கொந்தளிப்போ இல்லாதிருத்தல்

8. பீஜஸ்வபாவாத் - பிறவியில் அந்த உடலின் மூலப் பொருள் சேர்க்கையில் ஏற்படும் தனிமாறுபாடு.

 இவை எட்டும் முக்கிய காரணங்கள். இவற்றில் ஒன்றோ பலவோ உடல் பருப்பதற்குக் காரணமாகலாம்.

பொதுவாக, உணவு புஷ்டியாக எப்போதும் குறைவின்றிக் கிடைத்தல், உடலுழைப்புச் சிறிதும் இல்லாத வாழ்க்கை முறை, பிறரை வாயால் அதிகாரம் செலுத்தி வேலை வாங்கி தன் பணியை நிறைவேற்றும் வாய்ப்பு, இவையே உடல் பருக்கப் பெரும்பாலும் காரணமாகின்றன.

உடல் எடையைக் குறைக்க விரும்பும் நீங்கள் சில விஷயங்களை தினம்தோறும் செய்து வரவும். காலையில் எழுந்ததும் மலம், சிறுநீர் கழித்த பிறகு பல் தேய்த்து வெறும் வயிறாக இருக்கும்போதே 2 ஸ்பூன் (10 மி.லி.) நெல்லிக்காய் சாறில், சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து 1/4 ஸ்பூன் (2.5 மி.லி.) தேனுடன் சாப்பிட்டுவிட்டு 1/2 -3/4 மணி நேரம் சுறுசுறுப்பாக நடக்கவும். காலை உணவாகக் கோதுமைக் கஞ்சி சாப்பிடவும்.  மதியம் புழுங்கலரிசி சாதத்தை சிறிய அளவில் சாம்பார், ரசம், மோர் என்று பிரித்துச் சாப்பிட்ட பிறகு, 1/2 கிளாஸ் (150 மி.லி.) சூடு ஆறிய தண்ணீரில், 1ஸ்பூன் (5 மி.லி.) தேன் கலந்து பருகவும். மாலையில் 1 கிளாஸ் (300 மி.லி.) மோர் பருகவும். இரவில் கோதுமையினால் தயாரிக்கப்பட்ட ரொட்டியைச் சாப்பிடவும். பச்சைப் பயறு, பூண்டு வேக வைத்த கூட்டை ரொட்டிக்குத் தொட்டுக் கொள்ளப் பயன்படுத்தவும். அதன் பிறகு, மதியம் சாப்பிட்ட தேன் கலந்த தண்ணீர் போல அதே அளவில் மறுபடியும் சாப்பிடவும். புலால் உணவையும், எண்ணெய்ப் பொருட்களையும், பகல் தூக்கத்தையும் அறவே தவிர்க்கவும்.

தலைக்குப் பிருங்காமல தைலம் உபயோகித்து வரவும். தலையில் பொதியும் வகையில் ஒரு பஞ்சினால் இந்த எண்ணெய்யில்  முக்கி, தலையில் ஊறவிடவும். காலையில் 1/2 - 3/4 மணி நேரம், வாரம் இருமுறை மட்டும்.  செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் நல்லது. அதன் பிறகு குளிக்கவும். கண், காது, மூக்கு முதலிய புலன்களை இயக்கும் நரம்புகளுக்குப் பலமும் குளிர்ச்சியும் அளிக்கக் கூடிய சிறந்த தைலம். அதிக மூளை வேலையுள்ளவர்கள் இதனைத் தலையில் ஊற வைத்துக் குளித்தால் மூளைக் கொதிப்பு, ரத்தக் கொதிப்பு முதலிய நோய்களிலிருந்தும் பாதுகாப்புப் பெறலாம். கேசங்கள் அடர்த்தியாகவும் கருமையாகவும் அழகாகவும் வளரும். மயிர் உதிர்தல், பொடுகு, குட்டைமுடி இவற்றைப் போக்கும்.

இரவில் படுக்கப் போகும்போது பால் ஆடையை முகத்தில் தடவிக் கொண்டு படுக்கவும். காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீர், குளிர்ந்த நீர் இரண்டையும் மாற்றி மாற்றி முகத்தில் விட்டுக் கழுவவும். பிறகு குண்டு மஞ்சள் ஒன்றை எடுத்துக் கொஞ்சம் இழைத்து சொட்டு நல்லெண்ணெய் உள்ளங்கையில் விட்டு அதில் இழைத்த மஞ்சளைக் குழைத்து முகத்தில் நன்றாகத் தடவி விட வேண்டும். அரை மணி நேரம் ஊறிய பிறகு, பயத்தம் மாவு தேய்த்து அலம்ப வேண்டும். முகத்திலுள்ள பருக்களைப் போக்கும், முகத்திலே அலாதி மினுமினுப்பு, தேஜசு உண்டாகும். திருமணத்தில் அழகாகக் காட்சி தருவீர்கள்! வாழ்த்துகள்!

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.