வெளிப்படையான மனிதர் வி .கே.ராமசாமி
தமிழ்த் திரையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லன், தந்தை, தாத்தா என்று பல்வேறு பாத்திரங்களில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் வி.கே.ராமசாமி.
தமிழ்த் திரையுலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லன், தந்தை, தாத்தா என்று பல்வேறு பாத்திரங்களில் கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் வி.கே.ராமசாமி.
அவரது வெண்கலக் குரல் தனித்தன்மை வாய்ந்தது. யாராலும் காப்பியடிக்க முடியாதது.
எட்டாம் வகுப்பு படிக்கும்போது பாதியிலேயே பள்ளியை விட்டு நாடகத்தின் மேல் உள்ள ஆசையில் ஓடி வந்தவர், அதன்பிறகு பள்ளியின் பக்கமே திரும்பவில்லை.
"நாம் இருவர்' படமாக ஆவதற்குமுன் நாடகமாக நடந்து கொண்டிருந்தது. அந்நாடகத்தைப் பார்த்த ஏவி.மெய்யப்ப செட்டியார், ""பிளாக் மார்க்கெட் சண்முகம் பிள்ளை வேஷம் போட்டவரை வரச்சொல்லுங்க'' என்றார்.
""இதோ நிற்கிறானே இந்தப் பையன்தான்'' என்று சகஸ்ரநாமம் இளைஞனான வி.கே. ராமசாமியை அறிமுகப்படுத்தினார். உடனே ஏவி.எம். செட்டியார் "" நான் பெரிய மனிதர் வேஷத்திலே நடிச்சவரைக் கூப்பிடச் சொன்னா யாரோ சின்னப் பையனை அழைச்சு வந்திருக்கீங்களே'' என்றார்.
""நீங்க எவ்வளவு தடவை கேட்டாலும் இந்தப் பையன்தான் அந்தப் பெரிய மனிதர் வேடத்தில் நடித்தது'' என்று சொல்லி அந்த வேடத்தில் அவர் பேசிய வசனங்களைப் பேசச் சொன்னார் சகஸ்ரநாமம்.
அந்த வசனம் பேசியதைக் கேட்டதும் ஏவி.எம். செட்டியார் ""இந்த இளம் வயதில் பெரிய மனுஷன் வேடத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறீர்களே'' என்று பாராட்டி "நாம் இருவர்' படத்தில் நடிக்க "புக்' செய்தார். அந்தப் படம் ஏவி.எம்.முக்கும் பெருமை சேர்த்தது. வி.கே.ஆருக்கும் பெருமை சேர்த்தது.
ஒரு முறை டி.ஆர். மகாலிங்கத்திடம் வி.கே.ராமசாமி கேட்டிருக்கிறார்.
""நாங்களும் உங்களைப் போல நாடகத்திலே நடிக்கிறோம். உங்களைப் போல ஆடறோம். ஆனால் உங்க நாடகத்துக்கு மட்டும் கூட்டம் அதிகமா வருது அது ஏன்?''
அதற்கு டி.ஆர். மகாலிங்கம் " நீ தோசை சாப்பிட்டிருக்கியா?'' என்றார்.
""சாப்பிடாம என்ன? நிறைய சாப்பிட்டிருக்கிறேன்''
""சாதாவா ? ஸ்பெஷல் தோசையா''
"" ரெண்டும்தான்''
""அதைப் போலத்தான் இதுவும். நாங்க ஸ்பெஷல் தோசை. நீங்க சாதா தோசை'' என்றார் மகாலிங்கம்.
(காலஞ்சென்ற நடிகர் வி.கே.ராமசாமி எழுதிய "எனது கலையுலகப் பயணம்' என்னும் நூலிலிருந்து)