போதவே போதாது... 2 மீட்டர் இடைவெளி!
கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள குறைந்தபட்சம் ஒருவருக்கொருவர் 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. உண்மையில் இந்த இடைவெளி என்பது சரிதானா?
கரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள குறைந்தபட்சம் ஒருவருக்கொருவர் 2 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. உண்மையில் இந்த இடைவெளி என்பது சரிதானா? இதை யாராவது சோதனை செய்து பார்த்த பின்தான் கூறினார்களா? என்று நாம் யோசிப்பதில்லை.
லண்டன் மருத்துவர்கள் இதைச் சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள்.
ஒருவரை தும்மச் செய்து அதை புற ஊதா கதிர்களின் வெளிச்சத்தின் மூலமாகப் பார்த்து வீடியோ படம் எடுத்திருக்கிறார்கள். ஒருவர் தும்மினால் கரோனா வைரஸ் எவ்வளவு தூரம் வரை பரவும் என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.
""சோதனையின்போது ஒருவரைத் தும்மச் செய்தோம். அவருடைய வாயிலிருந்து ஆயிரக்கணக்கான நீர்த்துளிகள் வேகத்துடன் வெளியேறி மேற்கூரையில் பட்டன. இரண்டு மீட்டர் தூரத்தைத் தாண்டி இருந்த சுவரில் பட்டன. நான் தும்முகிறவரின் நேரே நிற்காவிட்டாலும், அவற்றில் சில துளிகள் என் கை மேல் விழுந்தன. இந்த நீர்த்துளிகளில் வைரஸ் இருந்திருந்தால் அவை என்னைத் தொற்றிக்கொள்ளும் என்கிறார் லண்டனில் குழந்தைகள் மருத்துவ நிபுணராக இருக்கும் டாக்டர் குட்டி சிங்.
""இரண்டு மீட்டர் தூரம் என்றில்லை. ஒருவர் தும்மும்போது அவர் அருகில் நீங்கள் எந்தப் பகுதியில் இருந்தாலும் வைரஸ் தொற்றிக் கொள்ளும் வாய்ப்புகள் நிறையவே உள்ளன'' என்கிறார் அவர்.
இதற்கிடையில் " அமெரிக்கன் மெடிகல் அசோசியேசன்' நடத்தும் மருத்துவ இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையில், "2 மீட்டர் இடைவெளி என்பது போதுமானது இல்லை... இருவர் இருமினால் ஆறு மீட்டர் தொலைவு வரை கரோனா வைரஸ் பரவும். தும்மினால் எட்டு மீட்டர் தூரம் வரை கூட பரவும்' என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இருமும்போதோ, தும்மும்போதோ உமிழ்நீருடனோ, சளியுடனோ கலந்து வெளியேறும் கரோனா வைரஸ் வேண்டுமானால் 2 மீட்டர் தொலைவுக்குள் பூமியில் விழலாம் என்று சில மருத்துவநிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வளவு இடைவெளியில் இருந்தால் கரோனா வைரஸ் தொற்றாமல் நம்மைக் காத்துக் கொள்ளலாம் என்ற கேள்விக்கு இந்த ஆராய்ச்சிகள் இன்னும் துல்லியமாகப் பதில் அளிக்கவில்லை என்றாலும் நாம் 2 மீட்டர் இடைவெளியைக் கூட பின்பற்றுகிறோமா என்பது சந்தேகமே.
"இன்னும் சொல்லப் போனால், மூடுபனி உள்ள பகுதியில் நடந்து செல்லும் ஒருவர் இருமவோ, தும்மவோ வேண்டாம்; அவர் பேசும்போதோ, மூச்சுவிடும்போதோ அவர் வாயிலிருந்து வெளியேறும் கரோனா வைரஸ், மூடுபனியில் படிந்துவிட வாய்ப்புண்டு. அந்தப் பகுதியில் சில மணி நேரங்கள் கழித்து நடந்து செல்லும் ஒருவரை அது தொற்றிக் கொள்ளும்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து 2 மீட்டருக்கு அப்பாலும்
தாண்டிச் சென்று இன்னொருவரை கரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் அபாயம் இருக்கவே செய்கிறது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவரிடம் இருந்து வெளிப்பட்ட வைரஸ் காற்றில் கலந்திருந்தால், சிறிது நேரம் கழித்து அந்தக் காற்றைச் சுவாசிக்கும் இன்னொருவரையும் பாதிப்படையச் செய்ய வாய்ப்பிருக்கிறது' என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஆனாலும் கூட்டம் கூட்டமாக காய்கறி கடைகளின் முன் நிற்பவர்களும் இப்போதும் இருக்கத்தானே செய்கிறார்கள்?