பேல் பூரி
மலையைப் பார்த்து மலைத்து விடாதே! மலை மீது ஏறினால் அதுவும் உன் காலடியில்!
தினமணி கதிர்பேல் பூரி
மலையைப் பார்த்து மலைத்து விடாதே! மலை மீது ஏறினால் அதுவும் உன் காலடியில்!
கண்டது
( திருத்தணி அருகே ஒரு காரின் பின்புறம் இருந்த வாசகம் )
மலையைப் பார்த்து மலைத்து விடாதே! மலை மீது ஏறினால் அதுவும் உன் காலடியில்!
- ஜி.அர்ஜுனன்,
செங்கல்பட்டு.
(தென்காசி மாவட்டத்திலுள்ள ஓர் ஊரின் பெயர்)
வாவா நகரம்
-நெ.ராமகிருஷ்ணன்,
சென்னை.
(திருச்சி அருகேயுள்ள ஓர் ஊரின் பெயர்)
திருப்பஞ்ஞீலி
-என்.ரங்கநாதன்,
சிவகங்கை.
கேட்டது
(திருச்சி மலைக்கோட்டை அருகே பிச்சைக்காரர்கள் பேசிக் கொண்டது)
""ஏண்டா.. இன்னிக்கு வசூலான காசை எண்ணச் சொன்னா சினிமா போஸ்டரை பார்க்கிறே..''
"" நடிகை "ரெஜினா காசென்றா' போஸ்டர் அண்ணே''
""முதலில் சில்லறையை ஒழுங்கா எண்ணுறா''
--சம்பத்குமாரி,
பொன்மலை.
(பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் நண்பர்கள் இருவர்)
""மச்சி மாதம் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்குறீயே எதுக்குடா..!''
""என் பெண்டாட்டிக்கு புடவை வாங்கித் தரத்தான்!''
-ஏ.மூர்த்தி,
புல்லரம்பாக்கம்.
(நாகர்கோவில் கோட்டார் பகுதியில் மளிகைக்கடை ஒன்றில் கடைக்காரரும் வாடிக்கையாளரும்...)
""அண்ணாச்சி ...ஒரு நூரு ரூபாய்க்கு சில்லறை கிடைக்குமா?''
""சில்லறை தர்றதுக்கா கடை வெச்சிருக்கேன்...எதாவது பொருள் வாங்குங்க... சில்லறை தர்றேன்''
""சரி அண்ணாச்சி...ஒரு ரூபாய் "சாக்லேட்' ஒண்ணு குடுங்க!''
- மகேஷ் அப்பாசுவாமி,
பனங்கொட்டான்விளை.
யோசிக்கிறாங்கப்பா!
மறதியைப் போல்
மறக்க நினைப்பதும்ஒரு வியாதி தான்!
- நா.இரவீந்திரன்,
வாவிபாளையம்.
மைக்ரோ கதை
அந்த ஊரில் அப்புசாமி என்றொருவர் இருந்தார். ஆனால், அவருக்கு ஓர் பழக்கம். எல்லோரையும் குறை சொல்லுவார். வெட்டியாக நண்பர்களை அழைத்து பேசிவிட்டு, அவர்கள் சென்றவுடன் அவர்களைப் பற்றியே மற்றவரிடம் குறை சொல்வார். ஆனால் எல்லோரிடமும் நல்லவரைப் போல காட்டிக் கொள்வார். ஏதாவது கேட்டால், ""நான் உன்னைப் போய் குறை சொல்வேனா? யாரோ பொய் சொல்றாங்க!'' என்பார். இதனால் அவருக்கு ஊரில் "குறைசாமி' என்று ஓர் பட்டப் பெயர்.
இப்படியே போய்க் கொண்டிருந்தது. அவரது மகன் நடேசன் வளர்ந்து பெரியவனாகிவிட்டான். மகனையும் எப்போதும் குறை சொல்லிட்டே இருந்தார் அப்புசாமி.
பொறுத்து பொறுத்துப் பார்த்த அவரது மகன், அப்புசாமியிடம் கேட்டே விட்டான். ""எல்லோரையும் குறை சொல்லிட்டே இருக்கே! இந்தக் குறை உனக்கு தெரியலியா?'' என்றான் நடேசன்.
அப்போதுதான் அப்புசாமிக்கு சுருக்கென்றது. இப்படியொரு குறை நம்மிடம் இருக்கிறதா? என்று குறைபட்டுக் கொண்டார்.
அன்றிலிருந்து அப்புசாமி, குறை சொல்லவதை விட்டுவிட்டார்.
-தி.நந்தகுமார்,
குடியாத்தம்.
எஸ்எம்எஸ்
சங்கு சக்கரம் தான் வாழ்க்கை.
ஓடினால் சக்கரம்; ஓய்ந்தால் சங்கு!
- கூ.முத்துலட்சுமி,
தொண்டி.
அப்படீங்களா!
சிறு விடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்வதில் புகழ் பெற்ற சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில், பயன்பாட்டாளர்களின் வயதை சரிபார்க்கும் புதிய கட்டுப்பாடு தொடங்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் தங்களின் விதவிதமான புகைப்படங்களைப் பகிர்வதில் சிறுவர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் 18 வயதுடையவர்களின் கணக்குகளைப் பயன்படுத்துவதால் அதில் வரும் ஆட்சேபனைக்குரிய பல்வேறு வகையிலான விடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை காணும் நிர்பந்தத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இது மேற்கத்திய நாடுகளில் பெரும் பிரச்னையை கிளப்பியதையடுத்து, 13 வயதுக்குள்ளானவர்கள் கணக்குகள் பயன்படுத்துவதைத் தடுக்க அவர்களின் பிறந்த தினத்தை குறிப்பிட இன்ஸ்டாகிராம் கட்டாயமாக்கியது. இதற்கு ஆதாரமாக ஆவணங்களையும் பதிவேற்ற வலியுறுத்தியது.
எனினும், இதிலும் போலி பிறந்த தேதிகளை பதிவேற்றம் செய்து சிறார்கள் கணக்குகளைப் பயன்படுத்துவதாக புகார்கள்எழுந்தன.
இதையடுத்து, பயன்பாட்டாளர்கள் தங்களின் விடியோவை பதிவேற்றம் செய்து அதன் மூலம் அவரின் வயதைக் கண்டுபிடிக்கும் புதிய சேவை இந்தியா, பிரேஸிலில் தொடங்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு மூலம் பயன்பாட்டாளர் 18 வயதை தாண்டினாரா இல்லையா என்பது இந்த புதிய சேவை மூலம் கண்டறிந்துவிடலாம்.
அதன் பின்னர் அந்த விடியோ தகவல்கள் அழிக்கப்பட்டு விடும்.
இதன் மூலம் போலி கணக்குகளும் அழிக்கப்பட்டு விடும் என்று இன்ஸ்டாகிராம் நம்புகிறது.
மேலும், சிறார்களுக்கு ஆட்சேபனைக்குரிய விடியோக்கள் வெளியாவதும் இதன் மூலம் தடுக்கலாம் என்று இன்ஸ்டாகிராம்நம்புகிறது.
-அ.சர்ப்ராஸ்