முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: ஹோட்டல் சாப்பாடு அவதிகள் குணமாக வழி என்ன?

என் வயது இருபத்து இரண்டு. ஆந்திரத்தில் ஓங்கோல் எனும் ஊரில் வேலை செய்கிறேன்.

Updated On : 6 அக்டோபர், 2024 at 3:14 PM
கறுப்பு எள்
பகிர்:
Updated On : 6 அக்டோபர், 2024 at 3:12 PM

என் வயது இருபத்து இரண்டு. ஆந்திரத்தில் ஓங்கோல் எனும் ஊரில் வேலை செய்கிறேன். ஹோட்டல் சாப்பாடு சாப்பிடுவதால், உடல் சூடு அதிகமாகி அடிக்கடி சூடாக மலம் பேதியாகக் கழிக்கிறேன். அவ்வப்போது ரத்தக் கசிவும் ஏற்படுகிறது. ஆசன வாய் திகுதிகுவென எரிச்சல் உண்டாகி, அவதிப்படுகிறேன். இதை எப்படி குணப்படுத்தலாம்.

-ரகு, ஓங்கோல்.

ஆந்திரா ஹோட்டல்களில் பொதுவாகவே உணவில் காரம் அதிகம் சேர்ப்பார்கள். தமிழர்களுக்கு அவை எளிதில் ஒத்துக் கொள்ளாது. அவ்வகை உணவுகளைத் தவிர்த்தால்தான் நீங்கள் உங்களை மருந்துகள் மூலம் குணப்படுத்திக் கொள்ள இயலும். அதனால் நீங்கள் தங்கியுள்ள அறையிலேயே சிறிய அளவில் உணவுகளைத் தயாரித்துச் சாப்பிட்டு வந்தாலே பெரிய உபாதைகளைத் தவிர்த்து வாழலாம்.

Advertisement

காலையில் அவல் உப்புமா, இரவு ராகிக் கூழ் கஞ்சி சாப்பிடலாம். மதியம் மட்டும் அலுவலகச் சாப்பாடு சாப்பிடலாம். வேறு வழியில்லை என்பதால் இதைக் கூற வேண்டியுள்ளது.

மண்பானையில் வெட்டிவேர், விளாமிச்சை வேர், உலர் திராட்சை, சந்தன சிராத்தூள் ஆகியவற்றை தண்ணீருடன் கலந்து ஊறவைத்து, மறுநாள் குடிக்கப் பயன்படுத்தலாம்.

ஆட்டுப் பாலை நன்கு கொதிக்கவிட்டு, ஆறியவுடன் சிறிது தேன், சர்க்கரை சேர்த்து உணவும், பானமுமாகப் பயன்படுத்தலாம். அதையே குளிர்ந்த நிலையில், ஆசன வாயைக் கழுவவும் பயன்படுத்தலாம்.

Updated On : 6 அக்டோபர், 2024 at 3:13 PM

கைக்குத்தல் அரிசியை சாதமாக வடித்து, அதில் இந்த ஆட்டுப்பாலைச் சேர்த்து உணவாக உண்ணலாம். உணவுக்கு முன்பாக, புதிய வெண்ணெயுடன் தேன், சர்க்கரை சேர்த்துக் குழைத்து நக்கிச் சாப்பிடுவது நல்லது.

பாலிலிருந்து நேரடியாகக் கடைந்தெடுத்த நெய்யை உண்டபிறகு, பால் சாதம் சாப்பிட்டால் மூன்றே நாள்களில் குணம் கிடைக்கும் என்று சரக ஸம்ஹிதை எனும் ஆயுர்வேத நூல் கூறுகிறது.

ரத்தப் பேதியை நிறுத்த தண்ணீர்விட்டான் கிழங்கை, நெய், பால் விட்டரைத்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு பால் அருந்த உங்களுக்கு மிகவும் நல்லது. நெய் சேர்த்து வடித்த அரிசிக் கஞ்சியுடன் குடகப் பாலை விதைத் தூளைக் கலந்துப் பருகி, அதன்மேல் அரிசிக் கஞ்சியைக் குடிப்பதன் மூலமாகவும் ரத்தப் பேதியைக் குணப்படுத்திக் கொள்ளலாம்.

அதிமதுரத் தூளுடன் சங்குபற்பம் கலந்து, அரிசி கழுவிய தண்ணீர், தேன் குழைத்துச் சாப்பிட ரத்தக் கசிவை உடனடியாக நிறுத்த உதவும்.

கறுப்பு எள்ளுடன் ஐந்தில் ஒரு பங்காக, சர்க்கரை கலந்து இடித்துத் தூளாக்கி ஆட்டுப்பாலுடன் சாப்பிட ரத்தக் கசிவை உடன் நிறுத்த இயலும்.

ஆசன வாய் எரிச்சல், தண்ணீர் தாகம், ரத்தக் கசிவு போன்ற உபாதைகள் குணமாக, தூய சந்தனத் தூளுடன் சர்க்கரை, தேன் குழைத்து சாப்பிட மிகவும் நல்லது.

சூடான பித்த பேதியால் வெந்து போன ஆசனவாயின் மீது மிகவும் குளிர்ந்த திரிபலை, அதிமதுரத்தூள் ஊறிய தண்ணீரைத் தெளித்துப் பயன்படுத்த நிவாரணமானஅது விரைவில் கிடைக்கும்.

'சததௌதகிருதம்' எனும் களிம்பை ஆசனவாய் அழற்சி நீங்குவதற்காகப் பயன்படுத்தலாம். இது ஆசன வாய் வலி, ரத்தக் கசிவையும் குணப்படுத்தும்.

குடஜத் வஹாகி லேகியம், சதாவகுலம், விருஷக்ருதம், மஹாதிக்தக்ருதம், மாயாபலாதி சூரணம், திரிபலாதி சூரணம் போன்ற ஆயுர்வேத மருந்துகள் உங்களுக்கு நல்ல பலனைத் தரக் கூடியவை.

ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி, மருந்துகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். உணவில் புளி, உப்பு, காரம் குறைத்து இனிப்பு, கசப்பு, துவர்ப்புச் சுவைகளை அதிகம் பயன்படுத்தவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.