முகப்பு
தினமணி கதிர்

அதிர்ஷ்ட நாயகி..!

காங்கிரஸின் ஷீலா தீட்சித், பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் வரிசையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஆதிஷி தில்லியின் பெண் முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார்.

Updated On : 29 செப்டம்பர், 2024 at 12:00 AM
ஆதிஷி
பகிர்:
Updated On : 28 செப்டம்பர், 2024 at 7:33 PM

காங்கிரஸின் ஷீலா தீட்சித், பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் வரிசையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ஆதிஷி தில்லியின் பெண் முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார். ஆதிஷிக்குக் கிடைத்திருக்கும் இந்த அதிர்ஷ்ட வாய்ப்பு அரசியல் வட்டாரங்களில் புருவத்தை உயர்த்தியிருக்கிறது.

சிறந்த பேச்சாளரான ஆதிஷி, ஏராளமான தொலைக்காட்சி விவாதங்களில் ஆம் ஆத்மி மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்திருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்கள் மூலமாக இவருக்கு மக்கள் மத்தியில் கிடைத்தச் செல்வாக்கே முதல்வர் பதவியில் இருந்து கேஜ்ரிவால் இறங்கிக் கொண்டு, ஆதிஷியை உட்கார வைத்ததற்கு முக்கிய காரணம்.

நாற்பத்து மூன்று வயதான ஆதிஷி , தில்லியின் இளம் முதல்வர் என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார். தில்லியில் பிறந்து வளர்ந்த இவர் பஞ்சாபைச் சேர்ந்த ராஜ்புத் குடும்பம். தில்லி பல்கலைக் கழகப் பேராசிரியர்களான இவரது பெற்றோர் விஜய் சிங், திரிபா வாஹி கம்யூனிசக் கொள்கைகளில் தீவிரப் பிடிப்பு கொண்டவர்கள். எனவேதான் தங்கள் மகளுக்கு "ஆத்ஷி மார்லெனா' என்று பெயர் வைத்தார்கள். மார்லெனா என்பது மார்க்ஸ், லெனின் என்ற இரு பெயர்களின் சுருக்கம்.

Advertisement

தேர்தல் அரசியலில் இவரது பெயர் சர்ச்சைக்குள்ளானது. இவரை பிற கட்சியினர் அயல்நாட்டவர், கிறிஸ்தவர் என்றெல்லாம் சொல்ல, இவர் எதற்கு வீண் வம்பு? என்று சொல்லி, "உண்மையில் என் பெயர் அதிஷி சிங். இனிமேல் நான் அதிஷி! அவ்வளவுதான்!' என்று சொல்லிவிட்டார். இது நடந்தது 2018-ஆம் ஆண்டில்தான்.

வரலாற்றுப் பாடத்தில் தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், உதவித்தொகையோடு ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

Updated On : 28 செப்டம்பர், 2024 at 7:33 PM

ஆம் ஆத்மி கட்சியில் இவர் சேர்ந்த புதிதில், அரவிந்த் கேஜ்ரிவாலோடு சேர்ந்து கட்சியைத் துவக்கிய பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் ஆகியோருடன்தான் இவர் மிகவும் நெருக்கமாக இருந்தார். ஆனால், அவர்களுக்கும் கெஜ்ரிவாலுக்கும் இடையில் பிரச்னை எழுந்து, அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டபோது, இவர் அவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டுகளை எழுப்பி, கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்தார். அதன் பிறகு இவருக்குக் கட்சியில் முக்கியத்துவம் அதிகரித்தது.

தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு ஆலோசகராக, அதிஷியை கேஜ்ரிவால் நியமித்தார். தில்லி அரசுப் பள்ளிகளில் "மகிழ்ச்சி' பாடத் திட்டம்' என்ற புதிய கல்வி முறையை அறிமுகப்படுத்தி, பள்ளிகளில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.

ஆனால், ஆதிஷி உட்பட பத்து பேரை அரசு ஆலோசகர்களாக நியமித்ததில் விதிகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தபோது, இவரது ஆலோசகர் பதவி பறிக்கப்பட்டது.

Updated On : 28 செப்டம்பர், 2024 at 7:35 PM

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கிழக்கு தில்லி தொகுதியில் ஆதிஷி போட்டியிட்டபோது, பாஜக வேட்பாளர் கெளதம் கம்பீரிடம் 4.75 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். ஆனால், 2020-இல் தில்லி சட்டசபைத் தேர்தலில் கல்காஜி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

மதுபானக் கொள்கை ஊழல் காரணமாக, மணீஷ் சிசோடியா கைதாகி, சிறை சென்றதும், ஆதிஷியை அமைச்சரக்கினார் கேஜ்ரிவால்.

கடந்த சுதந்திரத் தினத்தின்போது, கேஜ்ரிவால் சிறையில் இருந்ததால் தன்னுடைய சார்பில் ஆதிஷி சுதந்திர தினக் கொடியை ஏற்றுவார் என்று கேஜ்ரிவால் அறிவித்தார்.

ஆனால், அந்த வாய்ப்பு , இன்னொரு அமைச்சர் கைலாஷ்நாத் கெலாட்டுக்குக் கிடைத்தது. அதிர்ஷ்டம் ஆதிஷியை இப்போது முதல்வராக்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.