முகப்பு
தினமணி கதிர்

ரஜினிகாந்த் - நான் சந்தித்த பிரபலங்கள் - 47

ரஜினிகாந்த் பற்றிய நினைவுகளைப் பகிர்கிறார் திரையுலகப் பிரமுகர் காரைக்குடி நாராயணன்...

Updated On : 1 மார்ச், 2026 at 4:01 AM
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:51 PM

இந்தியத் திரையுலகில் எட்ட முடியாத இடத்தில் இருக்கும் சிவாஜிராவ் கெய்க்வாட் என்ற ரஜினிகாந்த், பெங்களூரில் மராத்தி குடும்பத்தில் இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரியுடன் போலீஸ்காரரான தந்தைக்கும், குடும்பத் தலைவியான தாய்க்கும் 1950, டிசம்பர் 12-இல் பிறந்தார். விளையாட்டுகளிலும் நாடகத்திலும் ஆர்வம் கொண்டவர்.

சென்னைக்கு வந்து தன் விடாமுயற்சியால் கே. பாலசந்தர் மூலம் 1975-இல் 'அபூர்வ ராகங்கள்' படத்தில் அடையாளம் காணப்பட்டு பிரபலமாகி தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், வங்கம் என்று வங்காள விரிகுடா போல் விரிந்து புகழ் பெற்றார்.

திருப்பதியில் 1981, பிப்ரவரி 26-இல் லதாவை மணந்து ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற பெண்களுக்கு தந்தையானார்.

Advertisement

என் நாடகம் 'அனுபவம்' சாய்கான சபாவில் நடந்த போது, நான் நடிகர் டி.ஆர். மகாலிங்கத்தின் சுகுமார் பவனத்தில் தங்கியிருந்தபோது, இவர் நண்பரைப் பார்க்க வருவார். எதிரே உள்ள பஸ் ஸ்டாப்பில் வரும் பஸ்ஸை ஓடவிட்டு விரட்டிப் பிடித்து ஏறுவார். இவர் நண்பர் மூலம் என் நாடகத்துக்கு ஒரு பாஸ் வாங்கிச் சென்று பார்த்தார்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:58 PM

அந்த நாடகத்தில் நடித்தவர் டி.கே.எஸ். சந்திரன். இவர் டி.எஸ். துரைராஜ் தயாரித்த 'ஆயிரம் காலத்து பயிரு' படத்தில் கதாநாயகனாக நடிக்க, அவருடன் சாவித்திரி நடித்தார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு இவர் 'அண்ணாமலை' படத்தில் டப்பிங் பேசுவதைப் பார்த்த ரஜினி அவரை அழைத்து , 'நீங்கள்தானே காரைக்குடி நாராயணனின் நாடகத்தில் தூக்குத் தண்டனை கைதியாக நடித்தீர்கள்!' என்று சொல்லிப் பாராட்டியிருக்கிறார். இதை அவர் என்னிடம் போனில் தெரிவித்து புளகாங்கிதம் அடைந்தார்.

1977-இல் நான் எழுதி சிஐடி சகுந்தலா நடித்த 'உன்னிடம் மயங்குகிறேன்' நாடகத்தை என் திரையுலக குரு பீம்சிங் இயக்க, சிவசுப்ரமணியம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.

இதில் இரண்டாவது கதாநாயகனாக நடிக்க ரஜினி சம்மதித்து பீம்சிங் வீட்டில் வந்து ஆசிர்வாதம் பெற்றார். இதில் நடிக்க இருந்த ஸ்ரீப்ரியா நடிக்க முடியாத நிலையில் 15 நாள்கள் அவகாசம் கேட்டார். பீம்சிங் படத்தில் நடிக்க மிகவும் ஆசைப்பட்டார். அவருக்காக பீம்சிங் ஒரு மாதம் காத்திருக்கத் தயாரான நிலையில் தயாரிப்பாளர் பிடிவாத குணத்துடன் பீம்சிங்கை மதிக்காமல் மஞ்சுளாவை நான் சொல்லி நடிக்கச் சம்மதித்தார்.

பீம்சிங் வெள்ளி விழா இயக்குநர், பல மொழிகளில் நூறு படங்களை இயக்கியவர் என்று கூறிய போது சிவசுப்ரமணியம் அவர் முன் கோபத்தால் அலட்சியம் செய்தார். இதன் படப்பிடிப்பு பல காரணங்களால் தடைப்பட்ட நிலையில் ரஜினி ரசிகர்களின் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்து விட்டார். இந்த நேரம் நான் அடிக்கடி இயக்குநர் மகேந்திரனை 'முள்ளும் மலரும்' படப்பிடிப்பு நடந்தபோது சந்திப்பேன்.

அவரிடம் சொல்லி ரஜினியை மூன்று இரவு கால்ஷீட் வாங்கித் தரச் சொல்லி படத்தை முடிக்க முயற்சி செய்தேன். மகேந்திரனும் ரஜினியை பிரசாத் ஸ்டூடியோவுக்கு அழைத்து வந்தார். ரஜினி என் படத்துக்கு 5000 ரூபாய் ஒப்பந்தத்தில் நடித்தார். அந்தஸ்து உயர்ந்த நிலையில் ஒவ்வொரு கால்ஷீட்டுக்கும் 10000 ரூபாய் கேட்டார். முதலில் கோபப்பட்டு பேசிய சிவசுப்ரமணியம் பிறகு சம்மதித்து விட்டு முதல் நாள் படப்பிடிப்பு முடிந்ததும் பேசிய படி ரஜினிக்கு முன் பணம் கொடுக்காமல் தயாரிப்பாளர் சங்கம் வரை பிரச்னையைக் கொண்டு போய் கைகலப்பாகும் நிலையை உருவாக்கினார்.

அவர் கோபத்தைச் சாந்தப்படுத்தும் எண்ணத்தில் சிவசுப்ரமணியத்தை காரில் உட்கார வைத்து, எத்தனையோ கலைஞர்கள் சாதாரண நிலையிலிருந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்று கூறினேன்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:58 PM

அவர் ஆத்திரப்பட்டதில் அந்த ஒரு படம் சில நூறு அடிகள் எடுக்க வேண்டிய நிலையில் எடுக்க முடியாமல் போய் பீம்சிங்கும் காலமானார்.

இதன் பிறகு நானும் மகேந்திரனும் ரஜினி காரில் மகேந்திரனின் இரண்டாவது மனைவி பிரேமி வீட்டுக்குப் போய் வருவோம். அப்போது ரஜினி இரவில் அதி வேகமாக கார் ஓட்டுவதைப் பார்த்து, 'மெல்ல போகலாம்' என்று கூறினேன். 'உங்களுக்குப் பயமாக இருந்தால் காரில் இருந்து இறங்கிக் கொள்ளுங்கள்' என்றார். அன்றிலிருந்து நான் அவர் காரில் போவதில்லை.

இந்த நிலையில் சில இடர்ப்பாடுகள் எனக்கும் மகேந்திரனுக்கும் தொழிலில் ஏற்பட, ரஜினியை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்து 'கை கொடுக்கும் கை' என்று பெயர் வைத்தோம். ஆனால், அந்தப் படம் சில காரணங்களால் கை மாறியது. நடிகராக மட்டுமில்லாமல் ஆன்மிகவாதியாக மாறினார். அரசியலில் இருந்து விலகினார். உலகளவில் பேசப்பட்டு தெற்காசியாவின் மிகப் பெரிய வசூலைத் தந்த இவர், தென்னிந்தியாவின் சர்வதேச விருது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசாவுடன், தாதா சாகேப் விருது, பத்மபூஷண் விருது, பத்ம விபூஷன் விருதும் பெற்றார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.