முகப்பு
தினமணி கதிர்

இசையும் வாழ்வும்!

மனித வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது இசை. அதிலும், கர்நாடக இசைக்கு எதிர்பாராமல் நிலவும் சூழ்நிலைகளுக்கேற்ப தனது உருவத்தையும் மாற்றிக் கொள்ளும் திறன் உண்டு.

Updated On : 29 மார்ச் 2026, 4:07 am IST
பகிர்:

முனைவர் ஜி.குமார்

மனித வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது இசை. அதிலும், கர்நாடக இசைக்கு எதிர்பாராமல் நிலவும் சூழ்நிலைகளுக்கேற்ப தனது உருவத்தையும் மாற்றிக் கொள்ளும் திறன் உண்டு. அதற்கு ' 'நிரோஷ்ட' எனும் ராகம் பிறந்த கதையே உதாரணமாகும்.

சப்த ஸ்வரங்களான 'ச', 'ரி', 'க', 'ம', 'ப', 'த', 'நி' ஆகியவற்றில் 'ப', 'ம' ஆகியவற்றை உச்சரிக்கும்போது மட்டும் நமது உதடுகள் தொட்டுக் கொள்கின்றன. 'ப', 'ம' முறையே 'பஞ்சம்', 'மத்யம்' என இசை வல்லுநர்களால் குறிப்பிடப்படுகின்றன. 'நிரோஷ்ட' என்பதற்கு ' உதடுகள் இல்லாமல்' என்பது பொருள்.

Advertisement

Advertisement

ஹரிகேச நல்லூர் முத்தைய பாகவதர் (1877- 1945), இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த இசை அறிஞர். 'இசை மும்மூர்த்திகள்' என்று அழைக்கப்படும் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகிய மூவருக்குப் பின்னர் அதிக பெருமையைப் பெற்ற இவர், ஏழு புது ராகங்களை அளித்தவர். சங்கீத கலாநிதி விருதை 1929-இல் முதலில் பெற்றவர்.

ஒருமுறை இசையில் அதிக ஆர்வமுள்ள மைசூரு மகராஜா தேனீ கடிக்கு உள்ளானார். இசைப் பயிற்சியை அன்றாடம் மேற்கொள்ளும் அவருக்கு உதட்டுக் காயங்கள் பெருந் தடங்கல்களாக இருந்தன.

ஆனால், மகாராஜாவின் துன்பத்தைக் கண்ட முத்தைய பாகவதர் அந்தக் காயங்களை இடைஞ்சலாகக் கருதவில்லை. கர்நாடக இசையில் அரிய ராகத்தையும் புதுமையையும் புகுத்த ஒரு சவாலாக எடுத்துக் கொண்டார்.

சப்த ஸ்வரங்களில் 'ம', 'ப'வை நீக்கிவிட்டு பாகவதர் அமைத்த ராகமே 'நிரோஷ்ட'. இந்த ராகம் உதடுகளின் சந்திப்பின்றி நீரோடைபோல பாய வல்லது. முத்தைய பாகவதர் அத்துடன் நிறுத்தவில்லை. இப்படிப்பட்ட ஸ்வரங்கள் அமைந்த ராகத்தை ஒரு கீர்த்தனையும், அதாவது பாடல் வரிகளும் ஆதரவு தர வேண்டுமல்லவா? அதற்காக ' ராஜ் ராஜ் ராதிதே ' என்று தொடங்கும் கீர்த்தனையையும் அவர் இயற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.