முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: உடல் எடை அதிகரிக்க...

எனக்கு வயது 75. உடல் எடை 44 கிலோ. இது மிகவும் குறைவு என்கிறார் மருத்துவர்.

Updated On : 2 மே, 2026 at 8:21 PM
பகிர்:

எனக்கு வயது 75. உடல் எடை 44 கிலோ. இது மிகவும் குறைவு என்கிறார் மருத்துவர். உடல் எடை அதிகரிக்கச் செய்ய என்ன மருந்து உள்ளது? என்ன உணவு சாப்பிடலாம்? வெண்ணெய், நெய் உண்டால் எடை கூடுமா? நான் சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவன்.

-பொன்னையா ராஜா, மதுரை-1.

நாள்பட்ட நோய்கள் காரணமாகவோ அளவுக்கு மீறிய உழைப்பின் காரணமாகவோ, உழைப்புக்குத் தகுந்த ஓய்வு இல்லாததாலோ, ஊட்டமான உணவு இல்லாததாலோ, சோகத்தினால் மனம் துவண்டதாலோ, உண்ணும் உணவை சரிவர செரித்து, அதில் தேவையான சத்துப் பொருள்களை உடல் தாதுவாக மாற்றும் வன்மையில்லாததாலோ, அதிக அளவில் சிற்றின்ப சுகங்களில் மூழ்கிவிடுவதாலோ, குடிப்பழக்கத்தாலோ, புகையிலை முதலிய லாகிரி வஸ்துகளின் அளவு கடந்த உபயோகத்தாலோ மற்றும் இவ்வகைக் காரணங்களாலோ உடல் மெலிந்திடலாம்.

Advertisement

அந்த நிலையில் பயங்கர பலஹீனம் ஏற்படும். சிறிய காரணங்களுக்கும் சிணுங்கும்படியான ஆரோக்கியக் குறைவும் ஏற்படும். இவ்வகையைச் சேர்ந்தவரின் உடல் மெலிவைப் போக்கிட வேண்டியது மிகவும் அவசியமானதே.

இவருக்கு நல்ல பசியும் ருசியும், உண்ட உணவை செரித்துக்கொண்டு அதிலுள்ள சத்துப் பொருள்களை உடல் புஷ்டியாகும் வரையில் பயன்படுத்திக் கொள்ளும் சக்தியும் இருக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும். மலச்சிக்கலும், செரிக்காமல் மலம் போகும் தன்மையும் இருக்கக் கூடாது. இவை இல்லாவிடின் 'ஆம்ரபல்லவாதி லேஹியம்', 'ஜீரக பில்வாதி லேஹியம்' போன்றவை சாப்பிட மிகவும் நல்லது.

இந்த லேஹியங்களில் ஒன்றை உணவுக்கு அரைமணி முன் சுமார் பத்துக் கிராம் அளவில் தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் இல்லாமலும், அதிகமாக வயிறு கழியாமலும், ருசித்துப் பசியுடன் புசித்து, உணவின் சத்துப் பொருள்களை உடல் புஷ்டிக்காக ஏற்கும் சக்தியும் வளரும். அதன் பிறகு, புஷ்டியைத் தரக்கூடிய மருந்துகளையோ, உணவுகளையோ உபயோகிப்போமாயின், அவை விழலுக்குப் பாய்ச்சின நீராகாது பயன் அளிக்கும்.

அஸ்வகந்தா லேஹியத்தைச் சாப்பிடத் தொடங்கினால், பலன் கிடைக்கும். கூடவே கூஷ்மாண்ட ரசாயனம் என்னும் லேஹ்யத்தையும் உபயோகிக்கலாம். உடல் தாதுக்களைப் போஷித்து புஷ்டியை அளிப்பதில் இரண்டு மருந்துகளுக்கும் ஏறத்தாழ ஒரே விதமான சக்தி உண்டு. குடல் செரிமான சக்தியைத் தீர்மானித்து இந்த லேஹிய மருந்துகளைச் சாப்பிட வேண்டியிருப்பதால், அதை மருத்துவரே தீர்மானித்து உங்களுக்குப் பரிந்துரை செய்வார்.

தினசரி எண்ணெய்க் குளி, மெலிந்தவரை பருமனாக்குவதில் மிகவும் உபயோகமானது. பலாச்வகந்தாதி தைலத்தை இதற்காக உபயோகிக்கலாம். இது விசேஷமாக உடல் புஷ்டியை அளிக்கவல்லது.

உணவில் எளிதில் செரிக்கக்கூடியதும், புஷ்டியைத் தரக்கூடியதுமானவைகளைச் சாப்பிடுவது அவசியம். நெய், பால், வெண்ணெய் போன்றவைகளைச் செரிக்கும் அளவில் சேர்த்துக் கொள்ளலாம். கோதுமை, சம்பா அரிசி, பச்சைப் பயறு முதலியவற்றால் செய்த பட்சணங்கள் நல்லவை. வெள்ளாட்டின் பாலைக் கூடுமானவரையில் உள்கொள்வதால் பலமும், சகிப்புத்தன்மையும் விரைவில் உண்டாகும்.

நீங்கள் சைவ உணவை மட்டுமே சாப்பிடுவதால் மாமிச உணவு வகைகளைப் பற்றிய விவரம் தேவையில்லாமல் போய்விட்டது. மருந்துகளில் சேர்க்கப்படும் மாமிசங்களைச் சாப்பிடுவதில் தங்களுக்கு உடன்பாடு என்றால், அஜமாம்ச ரசாயனம், அமிருதப்ராசம் போன்ற மருந்துகளால் உடல் புஷ்டியைப் பெறலாம்.

உணவுக்குப் பிறகும், மருந்து சாப்பிட்ட பிறகும் பதநீரைக் குடிப்பது மெலிந்த உடல் புஷ்டி பெறுவதற்கு உதவி புரியும். தண்ணீரை உணவின் இறுதியில் குடிப்பதைப் பழகிக் கொள்வதாலும் உடல் பருமனாக உதவி செய்யும். பகற்பொழுதில் சிறிது நேரமாவது உறங்குவது, மெலிந்தவர் பருமனாகிவிட உற்ற உபாயம். அவ்வாறே இரவில் சிறிதளவும் தூக்கம் கெடக்கூடாது. மனதுக்கு அலைச்சலில்லாமல் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் திருப்தியுடனும் இருத்தல், மெலிந்தவருக்கு புஷ்டியைக் கொடுக்கும் சிகிச்சைகளில் முக்கியமானது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.