FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: வாந்தி, பேதியைக் குணப்படுத்த...

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் என் மகன் பள்ளி விடுமுறை நாள்களில் நண்பருடன் ஊர் சுற்றுகிறான்.

Updated On : 24 மே 2026, 4:01 am IST
பகிர்:

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் என் மகன் பள்ளி விடுமுறை நாள்களில் நண்பருடன் ஊர் சுற்றுகிறான். பல இடங்களிலும் சாப்பிடுகிறான். அதனால் அடிக்கடி வாந்தி, பேதி ஏற்படுகிறது. மலத்தில் கொக்கி வடிவத்தில் காலரா ஜீவாணுக்கள் ஏராளம் ஊடுருவதாக மலப்பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதைக் குணப்படுத்த எளிதான கை வைத்திய முறை உள்ளதா?

- சாந்தலட்சுமி, சென்னை.

உணவின் நன்மை தீமைகள், தன் உடலின் இயல்பு, பசி நிலை, காலத்தின் இயல்பு இவற்றைப் பற்றிச் சிறிதும் சிந்தனை செய்யாதவர்கள், மனது, புலன்கள், முக்கியமாய் நாக்கு இவைகளின் சபலத்தை அடக்காதவர்கள், சாப்பாட்டிலேயே பேராசை படைத்து, அளவின்றி எப்போதும் கண்டதையெல்லாம் தின்பவர்கள்தான் வாந்தி, பேதியுடன் கூடிய காலரா வியாதி, வாந்தி பேதியுடன் உடலெங்கும் ஊசிகளைக் கொண்டு குத்துவது போலுள்ள வலியுடன்கூடிய 'விஸூசிகா' என்ற உபாதை போன்றவற்றால் பாதிக்கப்படுவர் என்று ஸூஸ்ருதர் எனும் ஆயுர்வேத முனிவர் குறிப்பிடுகிறார்.

Advertisement

Advertisement

இதைக் குணப்படுத்த எளிதான கை வைத்திய முறை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆயுர்வேதம் இதற்கான தீர்வை எளிய மருந்துகளால் குறிப்பிடுகிறது. சுக்கு, மிளகு, திப்பிலி, இந்துப்பு, கருஞ்சீரகம், சாதாரண சீரகம், பெருங்காயம், ஓமம் - இந்த எட்டுச் சரக்குகளையும் சம எடை (வகைக்கு 10 கிராம்) சேர்த்து லேசாய் வறுத்து நுண்ணிய சூரணம் செய்து கொண்டு, அரைக்கும் கல்லில் இடவும்.

உள்ளிப் பூண்டை அரைத்து, தனிச்சாறு எடுத்து, சூரணம் நன்றாக நனையும்படி ஊற்றி அரைக்கவும். சாறு சுண்டி கொஞ்சம் உலர்ந்த பின்பு திரும்பவும் பூண்டுச்சாறு ஊற்றி அரைக்கவும். ஏழுமுறை இதுபோல அரைத்த பிறகு 4-4 குன்றுமணி அளவு இருக்கும்படியாக மாத்திரையாக உருட்டி நிழலில் உலர்த்தி கண்ணாடிப் பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். இதற்கு 'லசுனாதிவடி' என்று பெயரிட்டு, பாட்டிலில் ஒட்டி வைக்கவும்.

விஷுசிகா, காலரா முதலிய கடும் அஜீரண உபாதைகளில் நல்ல குணம் தரும் மருந்து. வாந்தி, பேதியின் நிலையையும், வயதையும் அனுசரித்து 1 - 4 மாத்திரைகள் ஒரு நாளில் 4 - 5 தடவைகள் சாப்பிடலாம். மாத்திரையைச் சாப்பிட்டு அதன் மேல் கொஞ்சம் எலுமிச்சம் பழச்சாறு அல்லது புதினாச்சாறு கலந்துள்ள பானங்கள் கொடுப்பது நல்லது.

தும்பை இலை மிகச்சிறந்த கிருமி நாசினி. அதிக சூடான வீரியம் கொண்ட பச்சிலை. விஷத் தீண்டல் ஏற்பட்டு உடல் சில்லிட்டுப் பற்கள் கிட்டித்திமிர் ஏற்படுவதை இதன் சாறு தடுக்கும். சிறந்த விஷமுறிவை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. அதனால் காலராவில் ஏற்படும் விஷ நிலையை மாற்றி, உடல் சூட்டைச் சீராக்கிக் காலராவை உண்டாக்கக்கூடிய கிருமிகளைப் போக்குவதிலும் இது நன்கு பயன்படுகிறது.

இதன் உபயோக முறை: தும்பை இலையை நன்கு கழுவிய அம்மியிலிட்டு அரைத்து, சுத்தமான துணியில் வைத்து அழுத்திப் பிழிந்தெடுத்த சாற்றை ஒரு மேஜை கரண்டி அளவு (5 மி.லி.) எடுத்து, அதில் உப்புத்தூள் அரை கரண்டி கலந்து உள்ளுக்குச் சாப்பிடவேண்டும். வாந்தியும், பேதியும் நின்று உடற்சூடு உடன் எழுந்துவிடும். வெகு சிலருக்கே இரண்டாம் முறை இதைக் கொடுக்க நேரிடும்.

விற்பனையில் உள்ள வில்வாதி குளிகை என்னும் மாத்திரையை தண்ணீர் விட்டரைத்து விழுதாக்கி, அதிலிருந்து சிறிது சிறிதாக நக்கிச் சாப்பிட, குடல்மலக் கிருமிகளை அழித்து, வாந்தி பேதியைக் கட்டுப்படுத்திவிடும்.

வாந்தி, பேதியினால் ஏற்படும் கடும் நாவறட்சி தண்ணீர் தாகம் அடங்க 8 - 10 கிராம்பை தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, ஆறிய நீரில் சிறிது பச்சைக் கற்பூரம் பொடித்துச் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகப் பருகக் கொடுக்கவும். 30 மி.லி. கிராம்பு காய்ச்சிய நீரில் அரை தேக்கரண்டி அளவு வெங்காயச் சாறு அல்லது புதினா இலைச் சாறு கலந்து பருகினாலும் நாவறட்சியும் தண்ணீர் தாகமும் வாந்தியும் தணியும்.

விற்பனையில் உள்ள சந்திர சூராதி கஷாயம், தாடிமாஷ்டகம் சூரணம், முஸ்தாரிஷ்டம், ஜீரகாத்யாரிஷ்டம், வில்வாதி லேகியம் போன்ற மருந்துகளில் தேவையானவற்றை மட்டும் மருத்துவர் ஆலோசனையுடன் சாப்பிடலாம். வீட்டில் உணவாக நெல்பொரிக் கஞ்சி குடிக்கலாம். கொஞ்சம் புளிப்புள்ள பசு மோர் உப்பு சேர்த்துச் சாப்பிட நல்லது.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments