முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: தலைவலி குணமாக...

எனக்கு வயது 47. அடிக்கடி தலையில் நரம்புகளில் வலி ஏற்பட்டு, தலை முழுவதும் வலிக்கிறது.

Updated On : 5 ஜூலை 2026, 4:09 am IST
பகிர்:

எனக்கு வயது 47. அடிக்கடி தலையில் நரம்புகளில் வலி ஏற்பட்டு, தலை முழுவதும் வலிக்கிறது. அந்த வலி தலையுடன் நிற்காமல் பின் கழுத்து வழியாக இரு கைகளுக்கும் பரவுகிறது. இதற்கு ஏதேனும் மூலிகைத் தைலம் இருக்கிறதா? எப்படித் தயாரிப்பது? உள் மருந்துகள் என்ன சாப்பிடலாம்? சளி, தலைபாரம், மூக்கடைப்பு போன்ற தொல்லைகள் எதுவும் இல்லை. நான் ஒரு மில் தொழிலாளி. வேலை செய்யும் இடத்தில் எப்பவும் இரைச்சல்தான்.

- கந்தன், மாயவரம்.

தலையைச் சார்ந்த பிராண வாயு தகராறாகிவிட்டது என்று தோன்றுகிறது. தொடர் இரைச்சல் சத்தத்தினால் காதின் வழியாக மூளை நரம்புகளில் குடிகொண்டுள்ள பிராண வாயுவின் ஆதிக்கக் குணங்களாகிய வறட்சி, லேசு, குளிர்ச்சி, துடிப்பு போன்றவற்றால் நரம்புகளின் போஷணையானது குறைந்து விடுகிறது.

Advertisement

Advertisement

போஷணையைத் திரும்பப் பெறுவதன் மூலமாக நரம்புகளில் ஏற்படும் ஊட்டம், வலியைக் குறைத்திட உதவும். அந்த வகையில் உளுந்து, நல்லெண்ணெய், இந்துப்பு போன்றவை உதவிடக்கூடும். அது பற்றிய தயாரிப்பு முறை:

ஒரு லிட்டர் தூய நல்லெண்ணெய். நான்கு கிலோ உளுந்து அரைத்து உருண்டையாக்கியது. பதினாறு லிட்டர் தண்ணீர். இந்துப்பு இரு நூற்று ஐம்பது கிராம். இவை அனைத்தையும் ஒரு சேரக் காய்ச்சி, தண்ணீர் வற்றியதும், எண்ணெய்யை வடித்து எடுத்துக் கொள்ளவும். 'மாஷதைலம்' என்று இதற்குப் பெயர். இளஞ்சூடாக தலை, கைகளில் தேய்த்துக் கொள்ளவும். மூக்கினுள் நான்கு சொட்டுகள் தைலத்தை விட்டுக் கொள்ளவும். பத்து - பதினைந்து சொட்டுகள் வெந்நீருடன் கலந்து காலை, இரவு உணவுக்குப் பிறகு உள்ளுக்குச் சாப்பிடவும். இதன் தொடர் உபயோகத்தால், உங்களுடைய நரம்பு வலியானது நன்கு குறைந்து விடும்.

காது, மூக்கு, வாய்ப் பகுதிகளில் மூளையிலிருந்து கீழிறங்கக்கூடிய நரம்புகள் அனைத்தையும் பலப்படுத்த வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கிறது. அதனால் காதினில் இளஞ்சூடாக விட்டுக் கொள்ளக் கூடிய பிரத்யேகத் தைலங்கள் விற்பனையில் உள்ளன. மூக்கு மற்றும் வாயினுள் விட்டுக் கொள்ளக்கூடிய சிகிச்சை முறைகள் ஆயுர்வேதம் தவிர வேறு எந்தச் சிகிச்சை முறையிலும் குறிப்பிடப்படவில்லை. அவைகளுக்கென்றே விட்டுக் கொள்ளக்கூடிய தைலங்கள் பல இருப்பதாலும், எவை தங்களுக்கு ஒத்துக்கொள்ள குணம் தரும் என்பதை மருத்துவரால் மட்டுமே கூறமுடியும்.

மில் இரைச்சல்தான் முக்கியக் காரணமாக இருக்கும் பட்சத்தில், தொழில் சார்ந்த உபாதையால் நீங்கள் அவதிப்படுகிறீர்கள் என்று கூறலாம். சத்தம் உட்புகாதவாறு காதில் பஞ்சு வைத்து அடைத்துக் கொண்டால் தேவலை. உணவில் ஊட்டம் தரும் இனிப்பு, புளிப்பு, உப்புச் சுவை தூக்கலாகவும், காரம், கசப்பு, துவர்ப்புச் சுவை குறைவாகவும் பயன்படுத்தவும்.

நரம்புகளுக்கு வலுவூட்டும் அஸ்வகந்தா லேகியம், தசமூல ரசாயனம், அஜமாம்ச ரசாயனம் போன்ற மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி நீங்கள் சாப்பிட்டு நல்ல பலனை விரைவாக அடையலாம்.

தவிர்க்க வேண்டியவைகளில் குளிர்ந்த நீரை தலைக்கு ஊற்றிக் கொள்வது, தலையில் குளிர்ந்த காற்று படும் வகையில் இரவில் படுத்து உறங்குவது போன்றவையைக் குறிப்பிடலாம்.

மனக்கவலை, இரவில் வெகு நேரம் கண் விழித்திருத்தல், இயற்கை உந்துதல்களாகிய மலம், சிறுநீர் போன்றவற்றை வலுக்கட்டாயமாக அடக்குதல், அதிக உடல் உழைப்பு, பட்டினி இருத்தல், அதிக தூரம் நடந்து செல்லுதல் போன்றவற்றால் உங்கள் பிரச்னையானது தீவிரமடையும் என்பதால் இவற்றையும் தவிர்க்கவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments