முகப்பு
தினமணி கதிர்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: அதிக முடிவளர்ச்சியைக் கட்டுப்படுத்த...

என் வயது 24. மேல் உதடு, தாடை, கன்னம், கை, கால்களில் அதிக முடி வளர்கிறது.

Updated On : 21 ஜூன் 2026, 4:11 am IST
பகிர்:

என் வயது 24. மேல் உதடு, தாடை, கன்னம், கை, கால்களில் அதிக முடி வளர்கிறது. இதனால் மன அழுத்தம், தன்னம்பிக்கைக் குறைவு, எப்பொழுதும் உடலை மறைக்க ஆடை அணிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. லேசர் சிகிச்சை பலன் அளிக்கவில்லை. இது எதனால்? ஏதேனும் ஆயுர்வேத வெளிப்பூச்சு மருந்துகள் உள்ளதா?

- செளமியா, சென்னை.

ஹிர்சுடிசம் என்று அழைக்கப்படும் இந்த உபாதை ஒரு தனி நோய் அல்ல. உடலின் ஹார்மோன் சமநிலையின்மையின் வெளிப்பாடாகும். பெண்களின் உடலிலும் சிறிதளவு ஆண் ஹார்மோன்கள் (ஆன்டோரஜன்) உள்ளன.

Advertisement

Advertisement

ஆனால், அவை அதிகரித்தால் ஆண்களைப் போல முடி வளர்ச்சி ஏற்படலாம். பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் என்பது ஹிர்சுடிசத்தின் மிகவும் பொதுவான காரணமாகும். இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய், உடல் பருமன், முகப்பரு, கருத்தரிக்கத் தாமதம், முகத்தில் அதிக முடி வளர்ச்சி ஏற்படலாம்.

மேலும் ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதால், ஆண் ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தியாகலாம். தாய், சகோதரி அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தால், மற்ற பெண்களுக்கும் வரக்கூடும்.

சிறுநீரகத்தின் மேல் இருக்கும் அட்ரீனல் சுரப்பி அதிகளவு ஆண் ஹார்மோன்களை உற்பத்தி செய்யலாம். ஸ்டீராய்டுகள், சில ஹார்மோன் மருந்துகள், சில வலிப்பு நோய் மருந்துகளாலும் முடி வளர்ச்சி அதிகரிக்கலாம். அதிக கொழுப்புத் திசுக்கள் ஹார்மோன் சமநிலையைப் பாதித்து ஹிர்சுடிசத்தை அதிகரிக்கலாம்.

கடுகு எண்ணெய்யை ஆதாரமாகக் கொண்டு அதில் சேர்த்து காய்ச்சப்படும் மூலிகை மருந்தாகிய மஞ்சள் மற்றும் வாழைச்சாறுடன், அரைத்து விழுதாகிக் கலக்கிய அரிதாளம், புரசு மற்றும் கம்பகச் செடி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் 'லோமசதன தைலம்' எனும் மூலிகைத் தைலம் தற்சமயம் விற்பனைக்கு வந்துள்ளது.

சிறிது தூய மஞ்சள் தூளுடன் இந்தத் தைலத்தைக் கலந்து குழைத்து, அதிக முடி வளர்ச்சியுள்ள பகுதிகளில் பூசி ஊற விடவும். சுமார் ஒரு மணி நேரம் வரை ஊறவிடலாம். அதன் பிறகு கழுவி நீர் நீக்கிவிடலாம்.

லோமம் என்றால் முடி, சதனம் என்றால் விழச் செய்தல் என்று பொருள் கொள்ளலாம். தேவையற்ற முடிகளை விழச் செய்வதால் இதற்கு லோம சதனம் என்று பெயரிட்டுள்ளனர். உங்களுடைய சௌகர்யம் போல காலை அல்லது மாலையில் பயன்படுத்தலாம்.

பெண்மையைப் போற்றும் வகையில் கிராமத்து வழக்கமாகிய கஸ்தூரி மஞ்சளைத் தேய்த்துக் குளிப்பது, செவ்வாய், வெள்ளிக்கிழமை

களில் தலை மற்றும் உடலுக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது, உணவில் நிறைய நல்லெண்ணெய், உளுந்து, எள் மற்றும் வெந்தயம் சேர்த்துக் கொள்வது போன்றவை மூலமாகவும் ஹார்மோன் சீர்கேட்டைச் சரியாக்கலாம்.

சினை முட்டை உற்பத்தியாகும் கருப்பைப் பகுதியில் ஏற்படும் நீர்க்கட்டிகளை உடைத்து வெளியேற்ற கடுகு எண்ணெயை காலை, மாலை வெறும் வயிற்றில் 10 மில்லி லிட்டர் அருந்தலாம். அடுமனை (பேக்கரி) உணவு வகைகள், புலால் உணவு, பாக்கெட் வகை உணவுகள், பகல் தூக்கம் தவிர்க்கவும். ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்து இருப்பதைத் தவிர்க்கவும்.

ஆயுர்வேத மருந்துகளாகிய வரணாதி கஷாயம், சுகுமாரம் கஷாயம், தான்வந்திரம் - திராக்ஷாதி கஷாயம், சிலாஜித், சந்திர பிரபா மாத்திரை, ரஜ பிரவர்த்தினீ வடி, லோத்ராஸவம் போன்ற மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிட்டு வரலாம்.

சில ஆய்வுகளில் புதினா தேநீர் ஹார்மோன் அளவைக் குறைக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. ஆளி விதையில் உள்ள லிக்னான்கள் ஹார்மோன் சமநிலைக்கு உதவலாம். தினமும் 5 முதல் 10 கிராம் வரை சிறிது சிறிதாகச் சாப்பிடலாம். பொடியாக்கி உணவிலும் சேர்த்துச் சாப்பிட்டு வரலாம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments